#சட்டீஸ்கரில்27மாவோயிஸ்ட்தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். அப்படி இறந்தவர்களில் #சலபதி என்று ஒருவர் இருக்கிறார்! அவரது உண்மையான பெயர் #ஜெயராமரெட்டி. என் ஞாபகம் சரியாக இருக்குமானால் 1970 கள் என்று நினைக்கிறேன். அந்த காலத்தில் ஒன்றிணைந்த ஆந்திராவில் இருந்து மாணவர்கள் சென்னைக்கு வந்து சட்டக் கல்லூரியில் படிப்பார்கள். அப்போது இந்த சலபதி ஆந்திராவில் இருக்கும் அனந்தபூர்,சித்தூர் நெல்லூர்,நந்தியால் இருந்து வந்து படித்துக் கொண்டிருக்க கூடிய மாணவர்களோடு சுற்றிக்கொண்டு இருந்தார். அப்போது என்னுடன் அவருக்கு வாக்குவாதம் ஏற்பட்டது.
என் உள்ளிட்ட சிலர் அப்போது காங்கிரஸில் இருந்தோம். அப்போது இந்த சலபதி எங்கள் நக்சல் இயக்கம் தான் உண்மையானது தீவிரமானது மக்களுக்கு ஆனது என்றெல்லாம் தீவிரமாக பேசிக் கொண்டிருப்பார்.
வெகு சன அரசியல் இயக்கங்கள் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பாதையில் செல்லும்போது அதை விட்டுவிட்டு நீங்கள் ஒரு தனிப் பாதையில் போவது என்பது எப்படிச் சரியாகும் என்பது எனது வாக்குவாதமாக இருந்தது. அத்துடன் இல்லாமல் நீங்கள் ஆதரிக்கும் மாவோயிச சீன அரசுதான் இந்தியாவின் மீது போர் தொடுக்கிறது தாக்குதல் நடத்துகிறது அதெல்லாம் சரி என்று சொல்கிறீர்களா? என்றெல்லாம் கேட்டேன். இந்தியா அதனுடைய வரவெல்லைக்குள் தமிழ்நாடு உட்பட வெகுவான பல சமய வழிபாடுகளின் மீதான நம்பிக்கை உள்ள மக்கள் வாழக்கூடிய ஒரு மண்ணாகவும் தேசமாகவும் அதன் ஊடான உழைப்பாகவும் வாழ்க்கையுமாக இருக்கிறது. அந்த அளவில் அதன் பாதையில் வெற்றி நடை போட்டுக் கொண்டுதான் இருக்கிறது!
அப்படி இருக்கும் போது நீங்கள் இங்கு வந்து மக்களிடம் மாவோ பிரிவினைவாதம் பேசிக்கொண்டு மாணவர்களைத் தவறான பாதைக்கு அழைத்துச் செல்லுகிற வகையில் அவர்களை மைண்ட் வாஷ் பண்ணி தீவிரவாதத்தை வளர்ப்பது எப்படி சரியாகும்? அந்த வகையில் நீங்கள் செய்வது தவறானது என்று எச்சரிக்கை கூட நான் செய்தேன்? அவையெல்லாம் இப்போது ஞாபகத்துக்கு வருகிறது.
இந்த சலபதி 2003 சந்திரபாபு நாயுடு திருப்பதிக்கு வழிபாடு செய்யச் செல்லும் பொழுது அவர் காருக்கு வெடிகுண்டு வைத்து கொலை திட்டத்தில் இருந்தவர் என்று பிற்காலத்தில் அறியப்பட்டது!
இவர் தமிழ்நாட்டில் இருந்து ஆந்திராவிற்குள் நுழையும் போது வரும் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்தவராக இருப்பார் என நினைக்கிறேன்.ஆந்திர மலைப் பகுதியில் கணபதி தலைமையிலான மாவோயிஸ்ட்கள் war group இல் இருந்தார்கள். என்னைப் பொறுத்த வரையில் இந்த சக்திகள் எல்லாம் ஒழிக்கப்பட வேண்டிய சக்திகள் தான். சமூகம் என்றால் நான்கு நல்லதும் இருக்கும் கெட்டதும் இருக்கும் நல்லவனும் இருப்பான் கெட்டவனும் இருப்பான் அதுக்கு பதிலாகத் தலையை வாங்குவது காலை வாங்குவதெல்லாம் என்ன விதமான அரசியலில் சேர்த்தி ஆகும்!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளும் கூடத் தான் கம்யூனிசத்தைப் பிரச்சாரம் செய்தார்கள். பதவிகளைப் பிடித்தார்கள்! ஆட்சி அமைப்பை ஏற்படுத்தினார்கள் கம்யூனிச சித்தாந்தத்தை லெனினைப் பரப்பினார்கள்! அவர்களெல்லாம் இப்படியா வன்முறையைத் தூண்டினார்கள்!
ஆகவே அப்படி ஆனால் போக்குகள் சரியானவை அல்ல. அவை மக்கள் விரோத போக்குதான்!

No comments:
Post a Comment