—————-
திமுகவின் முன்னாள் அமைச்சர் க.பொன்முடி இன்றைக்குத் திமுகவில் ஒரு பேசு பொருளாகி இருக்கிறார்.!
இன்று அவர் வகித்து வந்த பதவிகள் கட்சிப் பொறுப்புகள் அனைத்தும் தலைமையால் பறிக்கப்பட்டுள்ளது!. இதன் பின்னணியில் உள்ள பல விபரங்கள் யாருக்கும் தெரியாது! அதேபோல் திருச்சி மாவட்டத்தில் நேரு மற்றும் விழுப்புரத்தில் பேராசிரியர்தெய்வசிகாமணி என்று அழைக்கப்பட்ட பொன்முடி ஆகிய இருவரையும் 1989 தேர்தலில் நிறுத்துவது சரியாக இருக்குமா? என்று கலைஞரும் முரசொலி மாறனும் மாவட்ட விசாரணை வேண்டி ஆய்வு செய்த போது நான்தான் நேரு மற்றும் பொன்முடி இருவர் பெயரையும் எழுதிக் கொடுத்தேன். அப்பது இவர் கல்லூரியில் துணை பேராசியர் . ஒரு ஸ்கூட்டரில் சென்றதை பார்த்தவன்.
ஏற்கனவே கலைஞர் பிறந்த நாள் விழா சென்னை கலைவாணர் அரங்கில் 1988 ல் நடந்த போது நான் பொன்முடியைப் பார்த்ததுண்டு விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்த அளவில் ஏற்கனவே எம்எல்ஏ வாக இருந்த பழனியப்பன் என்பவருக்குதான் மீண்டும் 1989 சட்டப்பேரவையில் தேர்தலில் விழுப்புரத்தில் வாய்ப்புத் தர வேண்டும் என்கிற கோரிக்கை அன்று பலரிடம் இருந்தது. பழனியப்பன் ஒரு வழக்கறிஞர்! ஏற்கனவே எனக்கு நண்பரும் கூட! அவர் பேராசிரியர் அன்பழகனுக்கும் கூட நெருக்கமாக இருந்தவர். அதை எல்லாம் மீறி நான் எழுதிக் கொடுத்த படி 1989 தேர்தலில் வேட்பாளராக நேருவும் பொன்முடியும் நிறுத்தப்பட்டார்கள். நேருவுக்கு அன்பில், திருச்சி மாவட்ட செயலாளராக அன்று இருந்த செல்வராஜ் எதிர்ப்பும் இருந்தது .
“என்னடா இவன் இப்படி சொல்லுகிறானே! என்று நீங்கள் எல்லாம் நினைக்கலாம்!” ஆனால் நான்தான் உண்மையாக இவர்கள் இருவர் பெயரையும் எழுதி கொடுத்தேன். இவர்கள் இருவரையும் பற்றி என்னிடம் தான் தலைமையில் விசாரித்தார்கள் கேட்டார்கள். இதற்கு சாட்சியாக வைகோவும் முன்னாள் அமைச்சர் தங்கவேலுவும் இன்றும் இருக்கிறார்கள். இன்றைய முதல்வர் ஸ்டாலினுக்கு இதெல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. முரசொலி மாறனும் கலைஞரும் தான் எதிலும் தலையிடுவார்கள். அந்தத் தேர்தலில்
பொன்முடி வெற்றி பெற்று அமைச்சரானார். அவருக்கு மக்கள் நல வாழ்வுத் துறை அமைச்சராக வழங்கப்பட்டது. நேருவுக்கு செய்தி விளம்பரத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. பொன்முடி அமைச்சராக இருந்தபோது அன்றைக்கு விழுப்புரம் மாவட்டச் செயலாளராக இருந்த செஞ்சி ராமச்சந்திரன் இருவருக்கும் ஏழாம் பொருத்தமாக இருந்தது. செஞ்சி ராமச்சந்திரன் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார். அதேபோல் அச்சரப்பாக்கம் ராமகிருஷ்ணனுக்கு அமைச்சர் பதவி தந்தது செங்கல்பட்டு மாவட்டச் செயலாளர் மதுராந்தகம் ஆறுமுகத்திற்குப் பிடிக்கவில்லை!. இப்படியான குளறுபடிகளுடன்
இவர்கள் ஆட்சியில் இருக்க 1991இல் திமுக ஆட்சி கலைக்கப்பட்டது. அதை ஒட்டி ராஜிவ் படுகொலை. ஆனால் இவர் விழுப்புர மாவட்டத்தில் திமுகவை காத்தவர் . கலைஞர் சொல் வேதம் என மதித்தவர்
அதன் பிறகு பொன்முடிக்கு மாவட்டச் செயலாளர் பதவி தராமல் ஏஜி. சம்பத்துக்கு விழுப்புரம் மாவட்டச் செயலாளர் பொறுப்பைத் தந்தார்கள். பொன்முடி அப்போது திமுகவின் விவசாய அணிச் செயலாளராக இருந்தார். பிறகான ஜெயலலிதா ஆட்சியின்போது கோவில்பட்டியில் விவசாயிகள் மீது துப்பாக்கி சூடு நடந்த போது அங்கே பொன்முடி வந்தார். அப்போது நான் தான் அவரை வரவேற்று வேண்டியதைச் செய்து தந்தேன். அதற்கு பிறகு தான் தூத்துக்குடி பெரியசாமி அன்று பின்னால் வந்தார். அன்றைக்கு திமுக தலைமை வைகோவை புறக்கணித்து கூட்டங்கள் போடக்கூடாது என்கிற முறையில் தடை விதித்திருந்தது. அந்த நிலையில் பொன்முடி வைகோவைச் சந்திக்காமலே சென்னைக்குச் சென்று விட்டார்! நாடாளுமன்ற பணிகளை முடித்துவிட்டு சென்னையிலிருந்து வைகோ வந்து கொண்டிருந்தார். இந்தப் பொன்முடி அவரைச் சந்திக்கக் கூட மனமில்லாமல் சென்று விட்டார்!
அதன் பிறகுதான் படு விபரமாக பொன் முடியை கோவை மாநாட்டில் வைகோவிற்கு எதிராகப் பேச வைத்தார்கள்! இப்படித்தான் அவருக்கான மரியாதை ஸ்டாலினிடம் கிடைத்தது! இப்படித்தான் அவர் வளர்ச்சியும் நிகழ்ந்தது. இதற்கிடையில் பொன்முடிக்கு பல சங்கடங்கள் கட்சிக்குள்ளே இருந்தன. அதே போல் சங்கரன்கோவில் இடைத்தேர்தலிலும் பொன்முடி வந்து அன்றைக்குத் தேர்தல் எங்கள் பகுதியில் பொறுப்பாளராக இருந்தார்! அன்றைக்கு நானும் அவருக்கு உதவியாக இருந்தேன். மறுவாரமே ஸ்டாலினுடன் அவர் நெருங்கி இருப்பதைச் சாதகமாக வைத்துக் கொண்டு என்னைச் சீண்டிப் பார்த்தார்!
“ஏங்க உங்கள் பெயரை எழுதிக் கொடுத்து எம்எல்ஏ வாக்குவதற்கு உதவி செய்தவனே நான்தான்! என்னிடம் உங்கள் விளையாட்டுகளை வைத்துக் கொள்ள வேண்டாம்! உங்களுக்கு முன்பாகவே நான் அரசியலுக்கு வந்தவன் என்று ஸ்டாலினை வைத்துக்கொண்டே கலைஞரின் அறைக்கு முன்னால் சொன்னேன்!
அவர் எத்தனை பொறுப்பில் இருந்தால் என்ன? என்னைச் சீண்டக்கூடாது அல்லவா? யாரையும் எடுத்து எறிந்து பேசுவது அசால்டாக வார்த்தைகளை உதிர்ப்பது நக்கல் செய்வது அவருக்கு வாடிக்கை! ஆனாலும் விழுப்புரத்தில் பாட்டாளி மக்கள் கட்சி வலுவாக இருந்த நேரத்தில் அவர் திமுகவிற்காகக் கடுமையாக உழைத்தவர் !அதையும் மறக்கக்கூடாது! இப்போது மட்டும் தான் பொன்முடிக்குச் சறுக்கல் என்பது அல்ல! அதற்கு முன்பு பலமுறை அவருக்கு சறுக்கல் நேர்ந்திருக்கிறது! அந்த சறுக்கல்களை எல்லாம் தாங்கிப் பிடித்து தான் கட்சியில் இருந்தார்! நேருவுக்கு இது மாதிரி சறுக்கல் எல்லாம் நேரவே இல்லை! இதெல்லாம் இன்றைக்கு இரண்டாயிரத்திற்குப் பிறகு வந்த திமுகவினருக்குத் தெரியாது !
அவற்றை ஞாபகம் மூட்டுவதற்காகத் தான் இந்தத் தகவல்கள்!
கலைஞர் காலத்தில் கலைஞருடன் இணைந்து அரசியல் செய்த மூத்த தலைவர்கள் என்போன்ற பலருக்கும் இன்றைய முதல்வர் ஸ்டாலினுடன் கருத்து வேறுபாடுகளுடன் கூடிய சிக்கல் நீடிக்கிறது. இது திமுகவின் உட்கட்சிக்குள் பலவிதமான நெருக்கடிகளைக் கொண்டு வருகிறது என்பதையும் பார்க்க முடிகிறது! இந்த முரண்பாடுகளைப் பற்றி கவலை இல்லாமல் ஸ்டாலின் தனது குடும்ப உறுப்பினர்கள் அல்லது அதற்கு விசுவாசம் உள்ளவர்களை மட்டுமே பாதுகாத்து வருகிறார். இன்னும் போகப் போக பல மூத்த தலைவர்களுக்கு இப்படியான சிக்கல்கள் உருவாகக் கூடும்! பல மாவட்டச் செயலாளர்கள் திமுகவிற்கு வெளியே தங்களது செல்வாக்கைத் தங்களது தொகுதியில் தக்கவைத்துக் கொண்டுள்ளதுதான் இப்படியான நிலைமைகளுக்கு காரணம்.
No comments:
Post a Comment