Thursday, March 29, 2018

Chelameshwar Letter

“We, the judges of the Supreme Court of India, are being accused of ceding our independence and our institutional integrity to the Executive’s incremental encroachment. The Executive is always impatient, and brooks no disobedience even of the judiciary if it can.
Attempts were always made to treat the Chief Justices as the Departmental Heads in the Secretariat. So much for our “independence and preeminence” as a distinct State organ.”

Wednesday, March 28, 2018

தற்கொலை செய்துக் கொள்வேன் என பேசுவது போலித்தனமானது

காவிரி பிரச்சனைக்காக தற்கொலை செய்துக் கொள்வேன் என பொதுதளத்தில் பேசுவது வீரமும் விவேகமும் அற்ற போலித்தனமானது. போர்குணத்துடன் சுய மரியாதையோடு போராடி, குரல் எழுப்பி வெற்றியை ஈட்ட வேண்டுமே தவிர பேடித்தனமாக பேசக்கூடாது.
தற்கொலை செய்துக் கொள்வேன் என்பதற்கு பதிலாக ராஜினாமா செய்வேன் எனக் கூறியிருந்தால் அது நம்பக் கூடியதாக இருக்கும்.

தண்ணீர் பெற ரேசன் கடை வாசலில் வரிசையில் நிற்கும் மக்கள்.



தண்ணீர் தட்டுப்பாடும், பஞ்சமும் உலகளவில் ஆரம்பித்துவிட்டது. தென்ஆப்பிரிக்காவில் கேப் டவுன் நகரில் தொடங்கிய இந்த தட்டுப்பாடு காரணமாக அங்குள்ள மக்களுக்கு உணவுப் பொருட்களை வரிசையில் வழங்குவதைப் போல தண்ணீரையும் ரேசனில் விநியோகம் செய்யும் அளவுக்கு பிரச்சனை தலைதூக்கிவிட்டது.
இந்த டே ஜீரோவை (தண்ணீர் முற்றிலும் தீர்ந்து போகும் நிலை) எதிர்நோக்கி இந்தியாவின் பெங்களூரு, சீனாவின் பீஜிங், துருக்கியின் இஸ்தான்புல் போன்ற நகரங்கள் மட்டுமல்லாமல் சென்னை நகரும் தண்ணீர் இன்றி வற்றிவிடுமென்ற அச்சம் எழுகிறது.
இந்த செய்தியை ஈரோட்டில் நடந்த திமுக மாநாட்டில் நதிநீர் சிக்கல்கள் என்ற தலைப்பிலும் பேசினேன். தண்ணீர் தானே என்று சாதாரணமாக நினைத்துவிட முடியாது. நீர் என்பது திரவத் தங்கம். அதை சரியாகவும், அளவாகவும் பயன்படுத்துவது மட்டுமின்றி நீர் மேலாண்மை  வேண்டும். ஐ.நா. மன்றத்தின் அறிக்கைகளும் தமிழகம் எதிர்காலத்தில் பாலைவனம் ஆகிவிடும் என்று பலமுறை எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக டவுன் டு எர்த் (Down To Earth) என்ற மாதாந்திர இதழ் உலகளவில் தண்ணீர் தட்டுப்பாடு தொடர்பாக விரிவான கட்டுரையை வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் இதை படித்து தெரிந்து கொள்ளவும்.
இப்படிப்பட்ட தகவல்களை வருங்கால சந்ததிகளுக்கு சொல்ல வேண்டியது என் கடமை என்பதால் இந்த பதிவை இடுகிறேன்.
ஏனெனில் தண்ணீர் தட்டுப்பாடு செய்திகளை விட ஒரு பெண் எம்.பி. யின் இரண்டாவது திருமணம் போன்ற புறந்தள்ள வேண்டிய செய்திகள் வெளி வருவதையே ஊடகங்களும், மக்களும் விரும்புகின்றனர்.
இப்படியான நிலையில் தமிழக உரிமைகள் யாவும் காவு கொடுக்க வேண்டியது தான். தமிழகத்தின் பிரச்சனைகளை எல்லாம் நாடாளுமன்றத்தில் புரிதலுடன் சொல்லக்கூடியவர்கள் அந்த அவையில் இல்லை. தகுதியே தடை என்ற நிலையில் தரமானவர்கள், நுண்மான் நுழைபுலம் கொண்டவர்கள், தகுதியானவர்கள் நாடாளுமன்றம், சட்டமன்றம் செல்ல வழியில்லை.
இப்படியான நிலையில் பிறகு எப்படி முக்கிய பிரச்சனைகளுக்கு நாட்டில் தீர்வு கிடைக்கும்.
கே. பாலச்சந்தர் இயக்கிய தண்ணீர்.. தண்ணீர்.. திரைப்படத்தை கரிசல் மண்ணான கோவில்பட்டி வட்டாரத்திலும், எட்டயபுரம் அருகேயுள்ள ஏழுபட்டி கிராமங்களிலும் எடுக்கப்பட்டது. அந்தப் படம் வந்த சமயத்தில் நான் கோவில்பட்டியில் திமுக வேட்பாளராக தேர்தலில் போட்டியிட்டேன். எனது வட்டாரங்களில் தண்ணீர் பஞ்சம் எப்படியிருந்தது என நேரடியாக கண்டவன். அதே நிலைமை எதிர்காலத்தில் அனைத்து வட்டாரங்களிலும் வந்துவிடுமோ என்ற அச்சத்தில் இதை பதிவிடுகிறேன்.
இந்தியா தண்ணீருக்கு வரிசையில் நிற்கும் கேப் டவுன் மாதிரி மாறிவிடக் கூடாது. இந்த பிரச்சனையில் விழிப்புணர்வும், கவனமும் மக்களிடம் ஏற்பட வேண்டும்.


#தண்ணீர்_தட்டுப்பாடு
#ஜீரோ_டே
#Water_Scarcity
#Zero_day
#TamilNadu_Farmers
#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
28-03-2018

பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டம் (பிஏபி) பிரச்சனையும், ஆந்திர அணை பிரச்சனையும் சிக்கலாக உள்ளது.

பி.ஏ.பி. என்று கொங்கு வட்டாரத்தில் அழைக்கப்படும் பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டத்தில் தமிழகம், கேரளா இடையே பிரச்சினைகள் இருந்து வந்தன. 58 ஆண்டுகளுக்கு முன் காங்கிரஸ் ஆட்சியில் உருவாகிய திட்டத்தில் பிரச்சினைகள் அவ்வப்போது எழுந்தன. ஆனால்தற்போதுகேரள அரசியல்வாதிகளின் செயல்களால் சிதையும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இப்பிரச்னைக்கு ஒரே தீர்வான ஆனைமலையாறு, நல்லாறு திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும். ஆண்டுக்கு 70 அங்குலம் மழை பொழியும் மேற்குத் தொடர்ச்சி மலையின் ஆனைமலை பகுதிகளில், மேற்கு நோக்கிப் பாய்ந்து அரபிக் கடலில் கலந்து வீணாகும் நீரைத் தடுத்து அவற்றை சமவெளியில் பாயும் ஆறுகளுடன் இணைத்து, கிழக்கு நோக்கித் திருப்பி கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களுக்கும், கேரளத்தின் சித்தூர் பகுதிக்கும் பாசன வசதி அளிப்பதுதான் பிஏபி திட்டம்.

பரம்பிக்குளம் - ஆழியாறு - பாசனத் (பி.ஏ.பி.) திட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உள்ள 6 ஆறுகளையும் சமவெளிகளையும் இணைத்து 9 அணைக்கட்டுகள் மூலமாக தமிழகத்திற்கும், கேரளத்திற்கும் நீர் ஆதாரம் பங்கீடு செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்துக்கு 30.5 டி.எம்.சி. யும், கேரளத்திற்கு 19.5 டி.எம்.சி. யும் நீர் பகிர்மானம் செய்துகொள்ளள ஒப்பந்தமும் பல ஆண்டுகளுக்கு முன்னால் கையெழுத்தானது. கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் சுமார் 4.25 லட்சம் ஏக்கரும், கேரளத்தில் சுமார் 20 ஆயிரம் ஏக்கரும் நேரடியாகப் பாசன வசதி பெறுகின்றன. சுமார் 200 மெகா வாட் மின் உற்பத்தியும் நடைபெறுகிறது. கிடைக்கும் நீரில் 30.50 டி.எம்.சி. அளவு தமிழகமும், 19.55 டி.எம்.சி. அளவு நீரை கேரளமும் பகிர்ந்து கொள்கின்றன. தமிழகத்துக்கு முழுமையான அளவு தண்ணீர் ஒருமுறை கூடக் கிடைக்கவில்லை என்றாலும், கேரளத்துக்குப் பெரும்பாலான ஆண்டுகளில் முழுமையாகத் தண்ணீர் வழங்கப்பட்டுள்ளது. இரு மாநிலத்துக்கும் பயன்பட்டாலும் இதன் மொத்த செலவு ரூ.44 கோடியை தமிழகமே ஏற்றது. ஆனைமலையாறு, நீராறு, சோலையாறு, பரம்பிக்குளம் ஆறு, தூணக்கடவு ஆறு, பெருவாரிப்பள்ளம் ஆறு என ஆனைமலைக் குன்றுகளில் உள்ள 6 ஆறுகளும், ஆழியாறு, பாலாறு என சமவெளிகளில் பாயும் 2 ஆறுகளும் என மொத்தம் 8 ஆறுகள் இதில் இணைக்கப்பட்டுள்ளன. இவற்றை இணைக்கும் வகையில் 10 அணைகள் கட்ட முடிவு செய்யப்பட்டதில், அப்பர்நீராறு, லோயர் நீராறு, சோலையாறு, பரம்பிக்குளம், தூணக்கடவு, பெருவாரிப்பள்ளம், ஆழியாறு, அப்பர் ஆழியாறு, திருமூர்த்தி ஆகிய 9 அணைகள் கட்டப்பட்டு நீர்ப் பகிர்மானம் நடைபெறுகிறது. ஆனைமலையாறு அணை மட்டும் கட்டப்படவில்லை. கேரளத்துக்குள் பரம்பிக்குளம், தூணக்கடவு, பெருவாரிப்பள்ளம் அணைகள் இருந்தாலும் பராமரிப்பது தமிழக பொதுப் பணித் துறைதான். இதற்காகத் தமிழக அரசு கேரளத்துக்கு குத்தகை செலுத்துகிறது. கேரளப் பகுதிக்குள் தமிழக கட்டுப்பாட்டில் இருக்கும் 3 அணைகளையும் கையகப்படுத்த கேரள அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது. கடந்த 2013-இல் தில்லியில் நடைபெற்ற தேசிய அணைகள் பாதுகாப்புக் குழுக் கூட்டத்தில் வலியுறுத்தியதால் பரம்பிக்குளம், தூணக்கடவு, பெருவாரிப்பள்ளம் அணைகளை கேரள அணைகள் என்ற பிரிவில் சேர்ப்பதாக மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து இந்த அணைகளில் பணியாற்றி வரும் தமிழக அதிகாரிகளுக்கு கேரள வனத் துறையினர், காவல் துறையினர் மூலம் தொடர்ந்து நெருக்கடிதான். கடந்த சில மாதங்களுக்கு முன் அதிகாரிகள் உள்ளிட்ட தமிழர்கள் 18 பேரை கேரள காவல் துறையினர் கடுமையாகத் தாக்கினர். மழை குறைந்ததால் தமிழகப் பாசனத்துக்கு கடந்த 2 ஆண்டுகளாக மிகவும் குறைவான நீரை விநியோகித்தாலும், கேரளத்துக்கு வழங்க வேண்டிய நீர் வழங்கப்படுகிறது. நடப்பு ஆண்டு வழங்க வேண்டிய 7.25 டி.எம்.சி.யில் பிப். 24 வரை 5.50 டி.எம்.சி. வழங்கப்பட்டுள்ளது., மீதமுள்ள நீரை வழங்க 4 மாத அவகாசம் இருந்தாலும் உடனடியாக நீரை வழங்க வேண்டும் என்று கேரள மாநிலம் சித்தூர் தொகுதி எம்.எல்.ஏ. கிருஷ்ணன் குட்டி உள்ளிட்டோர் தமிழகத்துக்கு நெருக்கடி கொடுத்தனர். தமிழக வாகனங்களைத் தாக்கியும், தடுத்து நிறுத்தியும் போராட்டங்களில் ஈடுபட்டதால் தமிழக விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வந்த நீர் கேரளத்துக்கு மாற்றப்பட்டது. இது தமிழக விவசாயிகளைப் போராட்டத்துக்குத் தள்ளியது. கேரளத்தின் இடையூறின்றி தமிழக விவசாயிகளுக்கு பாசனத்துக்கும், குடிநீருக்கும் தண்ணீர் கிடைக்க வேண்டுமானால் ஆனைமலையாறு, நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.நல்லாறு அணைத் திட்டம்:பிஏபி ஒப்பந்தப்படி மேல் நீராறு அணை நீர் (சராசரியாக 9 டி.எம்.சி.) முழுவதும் தமிழகத்துக்கு சொந்தம். ஆனால், இந்த நீரை சமவெளியில் உள்ள திருமூர்த்தி அணைக்கு கொண்டு வர சுமார் 100 கி.மீ. தொலைவு உள்ளது. ஆனால், மேல் நீராறில் கிடைக்கும் நீரை சுமார் 14.40 கி.மீ.க்கு சுரங்கம் அமைத்து நல்லாறுக்கு கொண்டு வருவது, பின்னர் அங்கு ஓர் அணை கட்டி திருமூர்த்தி அணைக்குத் தண்ணீர் கொண்டு செல்வதுதான் நல்லாறு திட்டம். இந்தத் திட்டத்துக்கு கடந்த ஆண்டு பொதுப்பணித் துறை சார்பில் சுமார் ரூ. 715 கோடி செலவாகும் என காவிரி தொழில்நுட்ப ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இத் திட்டம் மூலம் 250 மெ.வா. மின் உற்பத்தி செய்யமுடியும். இப்போது இந்த நீர் வீணாக கடலில் கலக்கிறது. ஆனைமலையாறு, இட்லியாறு ஒன்று சேரும் இடத்தில், அப்பர் நீராறு, லோயர் நீராறு அணைக்கு மேல், இட்லியாறுக்கு குறுக்கே சிறிய அணை கட்டி, அங்கிருந்து 6 கி.மீ.க்கு சுரங்கம் அமைத்தால் தண்ணீர் கீழ்நீராறு அணைக்கு வந்துசேரும். அங்கிருந்து சோலையாறு, பரம்பிக்குளம் வழியாக தண்ணீரைத் தமிழகம் கொண்டு வரலாம். இத்திட்டப்படி தமிழகத்துக்கு கூடுதலாக 4.25 டி.எம்.சி. நீர் கிடைக்கும். இத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான உத்தேச மதிப்பீடு ரூ.585 கோடி. பிஏபி திட்டம் தொடங்கி 60 ஆண்டுகளைக் கடந்த நிலையிலும், தற்போது வரை ஆனைமலையாறு அணைத் திட்டம் விவசாயிகளின் கனவாகவே இருந்து வருகிறது. ஒவ்வொரு கட்சியின் தேர்தல் அறிக்கைகளிலும் இடம் பெறுகிறது. தமிழகம் இத்திட்டத்தை நிறைவேற்றாமல் போனதற்கு முக்கிய காரணம், கேரள அரசு இடைமலையாறு அணையைக் கட்டி முடிக்க வேண்டும். அதற்குப் பிறகுதான், தமிழகம், ஆனைமலையாறு அணைத் திட்டத்தைக் கட்ட வேண்டும் என ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டது கேரளம். கடந்த சுமார் 33 ஆண்டுகளுக்கு முன்பே இந்த அணை கட்டி முடித்து, 75 மெகாவாட் மின்உற்பத்தி செய்தாலும், ஒரேயொரு கால்வாயைக் கட்டாமல் அத் திட்டம் செயல்பாட்டுக்கு வரவில்லை என்கிறது கேரளம். திட்டம் செயல்பாட்டுக்கு வந்ததாகக் கூறினால் நீராறில் கிடைக்கும் 4.25 டி.எம்.சி. நீரை தமிழகம் எடுத்துக் கொள்ளும் என்ற அச்சமே இதற்குக் காரணம். இந்தத் திட்ட அதிகாரிகளுக்கே ஒப்பந்தத்தின் கூறுகள் தெரியாமல் இருப்பதுதான் தமிழகத்தின் நீர் இழப்புக்குக் காரணம். இப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண தமிழக அரசு முன்வர வேண்டும். கடந்த 1991ஆம் ஆண்டு போடப்பட்ட திருமலை கமிஷன் அறிக்கையை நடைமுறைப்படுத்த வேண்டும். கேரளத்துக்கு தண்ணீர் வழங்குவது நமது கடமை மட்டுமல்ல, சகோதர உணர்வும் ஆகும். பருவ காலத்தில் நீரைப் பகிர்ந்து கொள்வதைப் போல், வறட்சிக் காலத்திலும் இருப்பதைப் பகிர்ந்து கொள்ளும் நல்ல மனதும் வேண்டும். ஆனைமலையாறு, நல்லாறு திட்டங்களைச் செயல்படுத்தினால் சுமார் 13 டி.எம்.சி. கூடுதல் நீர் கிடைக்கும். இதன் மூலம் இத்திட்டத்தில் உள்ள 4.25 லட்சம் ஏக்கருக்கும் ஆண்டு முழுவதும் தண்ணீர் வழங்க முடியும். பிஏபி திட்டத்தில் ஜூலை 1 ஆம் தேதியில் இருந்து ஜூன் 30 ஆம் தேதி வரை தண்ணீர்ப் பங்கீடு ஆண்டாக கணக்கிடப்படுகிறது. தமிழகத்துக்கு 30.50 டி.எம்.சி.யும், கேரளத்துக்கு 19.55 டி.எம்.சி.யும் பங்கு உள்ள நிலையில், கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் 2018 வரை இரு மாநிலங்களும் நீரைப் பங்கீடு செய்து கொண்ட விவரம்: (அளவு டி.எம்.சி.யில்) ஆண்டு தமிழகம் கேரளம் 2008-2009 18.46 19.97 2009-2010 27.00 19.89 2010-2011 28.48 19.89 2011-2012 16.83 20.13 2012-2013 15.79 16.24 2013-2014 22.82 20.47 2014-2015 26.87 20.19 2015-2016 13.17 18.41 2016-2017 12.67 12.58 2017-2018 (பிப்ரவரி வரை) 14.35 15.77 -----------------------------------------
ஆந்திர அணை பிரச்சனையும் சிக்கலாக உள்ளது.
தமிழக ஆந்திர நதிநீர் சிக்கலில், ஆந்திர மாநில அந்திரி – நீவா நதி தமிழகத்தின் பாலாற்றோடு இணைத்தால் மழை காலங்களில் தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்க வாய்ப்புள்ளது. இந்த திட்டத்தை வேலூர் – ஆம்பூர் பகுதி விவசாயிகள் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர். இதை குறித்து தமிழக அரசும் இதுகுறித்தான ஆய்வுகளை மேற்கொள்ளவில்லை.
ஒரு பக்கம் சிந்து – கங்கை – பிரம்மபுத்திரா என்ற வடபுல நதி தீரங்களில் வெள்ளமானது பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த மூன்று நதிதீரங்களில் 70 மில்லியன் மக்கள் பயனும் அடைகின்றனர். இப்படி வட இந்தியாவில் நீர்வளங்கள் அதிகரித்து வெள்ளமாக போவதைத் தான் வறட்சியில் வாடும் தெற்கே தீபகற்ப இந்தியாவிற்கு திருப்ப வேண்டும் என்று நான் 1983இல் வழக்குமன்றத்தில் தாக்கல் செய்து இதன் தீர்ப்பை கடந்த 27/02/2012 இல் பெற்றேன். வட இந்திய நதிகளான கென்வாட் – பேத்வா இணைப்பு, மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களின் பயனடைய இணைக்கப்படுகின்றன. பிரம்மபுத்திரா நதி தீரத்தில் சீனா பிரச்சனைகளை மேற்கொள்கிறது. மணிப்பூர் மாநிலத்தில், தௌபால் அணையை மியான்மர் நாடு கட்டி வருவதால் மணிப்பூர் மாநில மக்கள் தங்களுடைய பாசன வசதி பாதிக்கப்படும் என்று குரல் எழுப்பியுள்ளனர். இப்படியான வட இந்திய நதிகள் பிரச்சனைகள், சிக்கல்கள் எல்லாம் உடனுக்குடன் பேசப்படுகின்றன. ஆனால் தமிழகத்தின் நதிநீர்ச் சிக்கல்கள் யாவும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையிலேயே உள்ளன. அப்படிப்பட்ட தமிழகம் எதிர்பார்க்கின்ற திட்டம் தான் ஆந்திர மாநில அந்திரி – நீவா நதி தமிழகத்தின் பாலாற்றோடு இணைத்தல் ஆகும்
#பாலாறு_நதிகள்_இணைப்பு #Palar_River_Linking #KSRadhakrishnanpostings #KSRpostings கே.எஸ்.இராதாகிருஷ்ணன் 28-03-2018

Tuesday, March 27, 2018

நச்சும், ஆட்கொல்லி அபாயத்தினை உருவாக்கு திட்டங்களை டெல்லி பாதுஷாக்களால் தமிழகத்தில் திணிக்கப்படுகிறதே...

இன்றைக்கு (27/03/2018), தேனி மாவட்டம், தேவாரம் - பொட்டிபுரம் கிராமத்தில் உள்ள மலையில் சுமார் 1500 கோடி மதிப்பீட்டில் நியூட்ரினோ ஆய்வுக் கூடம் அமைக்க மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும் அந்த திட்டத்திற்கு அனுமதி அளித்தது மட்டுமல்லாமல், முல்லைப் பெரியாறு அணையிலிருந்து நாளொன்றுக்கு 3.5 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுத்துக் கொள்ளலாம் என்ற கொடுமையான உத்தரவும் வந்துள்ளது. காந்தத் தூண்டுதலால் துகள்களை ஆய்வு செய்யும் பொருட்டு அண்ட வெளியில் சக்தி மிகுந்த கதிரலைகள் உருவாகும். அதை உருவாக்க 1000 டன் ஜெலட்டின் வெடிமருந்துகளை 800 நாட்களுக்கு வெடிக்கச் செய்து 11,25,000 பாறைகளுடன் மலைகளும் தகர்க்கப்படும். சுற்றுச் சூழல் மாசுபடுவது மட்டுமல்லாமல் தேனி மாவட்டத்துடன், கேரளத்தின் இடுக்கி மாவட்டமும் சேர்ந்து பாதிக்கப்படுகிறது. பூமியே சிதறுண்டுவிடும் போன்ற விளைவுகள் ஏற்படுமென்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இப்படிப்பட்ட ஆபத்தான திட்டங்கள் தமிழகத்திற்கு தேவைதானா? குப்பை கூழம் போல தமிழகத்தில் திணிக்கப்படுகிறதே. இது என்ன நியாயம்? ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி இருபத்தைந்து ஆண்டுகளாக வைகோவுடன் இணைந்து களப்பணியாற்றி பல்வேறு போராட்டங்ளை செய்துள்ளேன். இன்றைக்கு தூத்துக்குடி மக்களே வெகுண்டெழுந்து அதை தடுக்க சதுக்கத்தில் போராடுகின்றனர். கூடங்குளம் அணுமின் திட்டத்தை அறிவித்தவுடன் அது மிகவும் ஆபத்தானது என்று 1989ஆம் ஆண்டிலேயே வழக்க தொடுத்தவன் அடியேன். இரண்டாவது முறையாக கூடங்குளம் போராட்டம் நடைபெறுவதற்கு முன்பே சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தேன் *(வழக்கு எண் / WP No. 22771 of 2011)*. எங்கள் கரிசல் பகுதியில் ராஜபாளையத்திலுள்ள தமிழ்நாடு சிமெண்ட் ஆலையை நவீனப்படுத்தாமல் ஆயிரக்கணக்கான ஏக்கர்கள் பாதிக்கப்பட்டு, குடிநீர் வசதியில்லாமல், மக்களுக்கு சுவாச நோய், புற்று நோய் என 1970களில் பெரும் பாதிப்பை உண்டாக்கியது. அதை எதிர்த்து விவசாயிகள் சங்கத் தலைவர் நாராயணசாமி நாயுடு, சட்டப்பேரவைத் துணைத் தலைவரும், விருதுநகர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரான பெ. சீனிவாசன் (காமராஜரை தோற்கடித்தவர்), அன்றைய மக்களவை உறுப்பினராக இருந்த சிவகாசி வி.ஜெயலட்சுமி போன்றோர் போராடி எந்தவித தீர்வும் எட்டப்படவில்லை. சென்னை உயர் நீதிமன்றத்தில் இதுகுறித்து ரிட் மனு (*வழக்கு எண். 10589/1986*) தாக்கல் செய்து அதன்படி, உயர்நீதிமன்ற உத்தரவு பெற்று ஆலையிலிருந்து தூசி வெளியேறாமல் பலகோடி ரூபாய் மதிப்பிலான இயந்திரங்களும் கருவிகளும் பொறுத்தப்பட்டன. அப்போதே ஆலையினை விற்றுவிடலாம் என்று தமிழ்நாடு அரசு யோசித்தபொழுது 1986ல் என்னுடைய மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்ததனால் ஆலையினை விற்கமுடியாமல் போனது. மேலும், 2015ம் ஆண்டு (*WP No. 4696 of 2015*) சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தேன். அந்த வழக்கின் தீர்ப்பின்படி 80 கோடி ரூபாயை தமிழக அரசு ஒதுக்க வேண்டுமென உத்தரவிட்டு, தமிழக அரசு ஆலங்குளம் சிமெண்ட் ஆலையை நவீனப்படுத்தியதெல்லாம் நினைத்துப் பார்க்கிறேன். சுற்றுச்சூழல் குறித்தான விழிப்புணர்வு இல்லாத காலத்திலேயே இது போன்ற வழக்குகள் நான் தொடுத்துள்ளேன். கேரளாவின் மருத்துவக் கழிவுகள், குப்பைகளை தமிழக எல்லைப் பகுதிகளான பாலக்காடு, நெல்லை மாவட்ட செங்கோட்டையில், குமரி மாவட்டத்தின் எல்லைகளில் லாரிகளில் வந்துகொட்டுவது என இந்த பிரச்சனையை தேசிய மனித உரிமை ஆணையத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றேன். தமிழகத்தின் கெயில் குழாய்கள் பதிப்பு கொங்கு மண்டலத்தில் மட்டுமல்லாமல் திருத்தணி அருகே இருந்து மதுரை வரை பதிக்கும் பணிகளும், கடலூர் முதல் சேலம் வரை பதிக்கும் திட்டங்களும் பரிசீலனையில் உள்ளது. விவசாயத்தை பாதிக்கும் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் கிணறுகளை தமிழகத்தில் பல பகுதிகளில் தோண்ட திட்டமும் உள்ளது. ஏற்கனவே இது நடைமுறைக்கு வந்துவிட்டது. இறால் பண்ணைகளும் விவசாய நிலங்களை களர் நிலங்களாக்கியது. விவசாய நிலங்களில் மின்சார கடத்தி கோபுரங்களை அமைத்து பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளன. இம்மாதிரி ஆலைகளால் ஆறுகளிலும், நீர்நிலைகளிலும் இருக்கும் தண்ணீர் ஒரு பக்கம் மாசடைகின்றது. இன்னொரு பக்கம் தொற்று வியாதிகள் பரவுகிறது. இது மாதிரி பல ஆலைகள் பல வட்டாரங்களில் பல்வேறு கேடுகளை மக்களுக்கு விளைவிக்கின்றன. அந்த ஆலைகள் வருமாறு.
- அரியலூர் சிமெண்ட் தொழிற்சாலை, - மதுரை பொய்கைக்கரைப்பட்டியிலுள்ள கெமிக்கல் தொழிற்சாலை, - தூத்துக்குடி சிப்காட், - கடலூர் சிப்காட், - திருப்பூர் பின்னலாடை - நொய்யலாற்றின் மரணம், - சேலம் கஞ்சமலை தாது கம்பெனி, - மேட்டுர் அனல்மின் நிலையங்கள், - மதுரை அபிலாஷ் கெமிக்கல்ஸ், - நெய்வேலி நிலக்கரி சுரங்கம், - கெயில் திட்டம், - திருவண்ணமாலை - ஜிண்டால் தாது கம்பெனி (இன்னும் தொடங்கப்படவில்லை), - ஊட்டி ஸ்டெர்லிங் ஆலை, - கொடைக்கானல் பாதரச (மெர்குரி) தொழிற்சாலை, - நாகர்ஜூனா ஆலை தமிழகத்திற்கு பலனளிக்க வேண்டிய சேது சமுத்திரத் திட்டம், மீனவர்களுக்கு பாதுகாப்பளிக்கும் கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தது மத்திய அரசு. மேலும் 1959ஆம் ஆண்டு முதல் பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு சேலத்தில் 1982ஆம் ஆண்டு நிறுவப்பட்ட சேலம் இரும்பாலை தற்போது முடக்கப்படுகிறது. ஊட்டியில் முக்கியமாக இயங்கிவந்த இந்துஸ்தான் போட்டோ பிலிம் தொழிற்சாலையை மூடி நைனிட்டாலுக்கு மத்திய அரசு அனுப்பிவிட்டது. இவ்வாறு பல்வேறு ஆபத்தான நஞ்சைக் கக்கும், சுற்றுச் சூழுலுக்கு தீங்கிழைக்கும் தொழிற்சாலைகளே அதிகம். இப்படி தமிழகத்திற்கு ஆக்கப்பூர்வமான திட்டங்களை முடக்கிவிட்டு, சுற்றுச் சூழல் விரோத திட்டங்களுக்கு தாராளமாக அனுமதியை வழங்கும் மத்திய அரசின் நடவடிக்கைகள் கடும் கண்டனத்துக்குரியது. #KSRadhakrishnanPostings #KSRPostings கே.எஸ்.இராதாகிருஷ்ணன். 27-03-2018


Monday, March 26, 2018

உலகின் மிகப்பெரிய தாமிர உருக்காலை

Retweeted BBC News Tamil (@bbctamil):
''உலகின் மிகப்பெரிய தாமிர உருக்காலை சீனாவில் உள்ளது. தற்போது ஸ்டெர்லைட் ஆலையின் விரிவாக்கத்திற்கு பின்னர், உலகின் இரண்டாவது பெரிய உருக்காலையாக இந்த ஆலை செயல்படும்.”
"ஆபத்தான ரசாயனங்கள் பயன்படுத்தப்படும் இந்த ஆலையை, குடியிருப்புப் பகுதிக்கு அருகில் செயல்பட எவ்வாறு அனுமதி வழங்கப்பட்டது என்பதை மீண்டும் விசாரிக்க வேண்டும்.''
Like @[BBC News தமிழ்]

ஐ நா மனிதஉரிமைகள் எதிரான ஆணையரின் அறிக்கை : ஈழத்தமிழ் மக்களுக்கான ஒரு கவுன்சிலிங்....

இலங்கை அரசுக்கும் எதிரான அறிக்கையை ஐநா மனிதஉரிமைகள் ஆணையர் இவ்வாரம் வெளியிட்டுள்ளார். இன-மத வன்முறைகள் நிறைந்த நாடு, சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து நிகழும் நாடு, மனிதஉரிமைகள் பெரிதும் மீறப்படும் ஒரு நாடு எனப் இவ்வறிக்கை குற்றஞ்சாட்டுகிறது.

இறுதிகட்ட யுத்தத்தின் போது இலங்கை அரசு மேற்கொண்ட யுத்தக் குற்ற நடவடிக்கைகள் தொடர்பாக அதிகம் பேசப்பட்டுள்ள இந்த அறிக்கையில் இலங்கை அரசுக்கு எதிரான கடும் வார்த்தைகள் இவ்வறிக்கையில் பிரயோகிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக பாதிக்கப்பட்ட ஈழத் தமிழருக்கான நீதி தேடும் பாதையில் இவ்வறிக்கை முன்னெற்றகரமானது என பொதுவாக கூறப்படுகிறது. இதுவரைகாலம் வெளிவந்த அறிக்கைகளுள் இது மிகவும் காட்டமானது என்பது உண்மை.
ஐநா மனிதஉரிமைகள் ஆணையர் சையது அல்-ஹசைன் அவர்களினது எழுத்துபூர்வமான இந்த அறிக்கை இவ்வாணைத்தில் சமர்ப்பிக்கப்பட்டதும் தமிழ் மக்கள் தரப்பில் ஆறுதலும், திருப்தியும் ஏற்பட்டுள்ளது. உண்மையில் இப்படியொரு காட்டமான அறிக்கை வெளிவரும் என்று பொதுவாக விபரம் அறிந்தோர் மத்தியில் ஏற்கனவே கணிக்கப்பட்டிருந்தது.
இவ்வறிக்கைக்குப் பின்னால் தெளிவான இராஜதந்திர இலக்குகள் உண்டு. இவ்வறிக்கை ஒருபுறம் தமிழ் மக்களுக்கு உளவியல் ரீதியான ஆற்றுப்படுத்தலை வழங்கவல்லதாக அமைந்துள்ளது. அத்தகைய ஓர் இலக்கு இந்த அறிக்கைக்குப் பின்னால் தெளிவாக உண்டு. அத்துடன் இந்த அறிக்கை ராஜபக்சாக்களுக்கு ஓர் இறுக்கமான செய்தியை சொல்வதில் கவனம் செலுத்தியுள்ளது. இந்த அரசாங்கத்தை கவிழவிடாது பாதுகாக்க வேண்டுமென்ற நோக்கம் இவ்வறிக்கைக்குப் பின்னால் உள்ள மேற்குல அரசுகளிடமுண்டு.
நடந்து முடிந்த உள்ளுராட்சிச் சபைகளுக்கான தேர்தல்களில் ராஜபக்சா அணி பெருவெற்றியீட்டியதைத் தொடர்ந்து பதவியில் இருக்கின்ற இன்றைய அரசாங்கம் கவிழ்ந்துவிடுமோ என்ற அச்சம் பெரிதும் ஏற்பட்டது. இந்த அரசாங்கத்தை கவிழ்த்தால் போர்க்குற்ற விசாரணை மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் என்பனவற்றின் பேரால் தமக்கு ஏற்படக்கூடிய ஆபத்தை ராஜபக்‌ஷக்கள் சரிவர உணர்ந்திருக்கிறார்கள். ஆதலால் உடனடியாக அரசாங்கத்தை கவிழ்கும் நோக்கம் அவர்களிடம் இல்லை. ஆனாலும் இந்த அரசாங்கத்திற்கு பெரும் சவால் இதனால் ஏற்பட்டுள்ளது என்பதும் இதன் பின்னணியில் இந்த அரசாங்கம் கவிழ்ப்படுவதற்கான எத்தனங்கள் எழுந்திடக்கூடும் என்ற அச்சமும் மேற்குலகிடம் உண்டு.
ராஜபக்‌ஷ அரசாங்கத்தின் சீனசார்பு நிலைப்பாட்டால் 
அமெரிக்கா தலைமையிலான மேற்குலகமும், அண்டை நாடான இந்தியாவும் ராஜபக்‌ஷவை பதவியில் இருந்து அகற்ற இறுதிகட்டத்தில் நிகழ்ந்த யுத்தக் குற்றச்சாட்டுக்களை முக்கிய ஏதுவாக பயன்படுத்தி அவரை பதவியில் இருந்து அகற்றுவதில் வெற்றிபெற்றன. ஆனாலும் அவர் மக்கள் ஆதரவுடன் எழுச்சிபெறும் நிலை பெரிதும் உள்ளதை உள்ளூராட்சிச் சபைகளுக்கான தேர்தல்களில் அவர்கள் பெற்றுள்ள வெற்றிகள் நிரூபித்துள்ளன.
இரண்டு ஆண்டுகளின் பின்பு வரவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் கோத்தபாய ராஜபக்‌ஷ நிறுத்தப்பட்டு வெற்றியீட்டுவார் என்ற அச்சமும் பெரிதாகிவிட்டது. எப்படியோ உடனடியாக ராஜபக்‌ஷக்களுக்கு அச்சம் தரும் நகர்வை மேற்கொள்ள வேண்டியது அவசியமென ராஜபக்‌ஷ எதிர்ப்பு நாடுகள் கருதுகின்றன.

ஐநா சபையானது பெரிதும் அமெரிக்காவின் செல்வாக்கிற்கு உட்பட்ட சபையாகும். சர்வதேச ரீதியில் தனக்குச் சாதகமான விடயங்களை மேற்கொள்வதற்கு ஐநா சபையை பயன்படுத்துவதில் அமெரிக்கா பெரிதும் அக்கறையாக உள்ளது, இதில் அமெரிக்காவின் பலம் மிகப்பெரியது.
போர்க்குற்ற விசாரணை தொடர்பான பிரேரணையை ஐநா மனிதஉரிமைகள் ஆணையத்தில் அமெரிக்கா முன்வைத்தது. அப்போது பதவியில் இருந்த ராஜபக்‌ஷ அரசாங்கத்தை நெருக்கடிக்கு உள்ளாக்குவதில் இப்பிரேரணை மிகப்பெரும் வெற்றியை ஈட்டியது. இதனால் தமிழ் மக்கள் அடைந்த பலனைவிடவும் இப்பிரேரணையை முன்வைத்த மேற்படி அரசுகளின் இராஜதந்திர நோக்கம் பெரிதும் நிறைவேறியது.

தற்போது ஐநா ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கைக்குப் பின்னால் முக்கிய மூன்று இராஜதந்திர இலக்குகள் உண்டு. இதில் முதன்மையானது தற்போது பதவியில் இருக்கும் அரசாங்கத்தை பாதுகாக்க வேண்டும் என்பதுடன் அது நெருக்கடிக்கு உள்ளாகமல் தொடர்ந்து செயற்படக்கூடிய வகையில் நிலைமைகள் அமையவேண்டும் என்பது. இந்த வகையில் ராஜபக்‌ஷக்களுக்கு இராஜதந்திர பரிபாசையில் ஓர் எச்சரிக்கையை இந்த அறிக்கை வெளியிட்டுள்ளது என்றே கூறவேண்டும். இரண்டாவது தமிழ் மக்கள் மத்தியில் போர்க்குற்றம், காணாமல் ஆக்கப்பட்டோர் சம்பந்தமான அதிர்ப்திகள் மேலோங்கி ஐநா சபை மீதான நம்பிக்கை சரிந்துள்ளது. இந்நிலையில் தமிழ் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள எழுச்சியை தணிக்கவும், தமிழ் மக்களை உளவியல் ரீதியாக சாந்தப்படுத்தவும் வேண்டிய வகையில் இவ்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இதில் தமிழ் மக்களுக்கான ஒரு கவுன்சிலிங் உண்டு என்பதில் சந்தேகமில்லை.
இவ்வறிக்கையில் 40வது உறுப்பு காட்டமான செய்திகளை கூறுகிறது. இலங்கை அரசின் நீதித்துறை மீது பெரிதும் அவநம்பிக்கையை வெளியிட்டுள்ளதுடன் போர்க்குற்றங்கள் தொடர்பாக இலங்கை அரசு நீதி தேடும் பாதையில் முன்னெறவில்லையென்றும் அதற்கான மனவிருப்பத்தையோ, செயல் ஊக்கத்தையோ இலங்கை அரசு காட்டவில்லையென்றும் இலங்கை கோரியுள்ள இரண்டு வருட கால காலநீட்டிப்பிற்குள் அது நீதிகாணும் நடவடிக்கையில் வெற்றிபெறுவது சந்தேகத்திற்குரியது என்றும் அதற்கான முன் முயற்சிகள் எதுவும் இதுவரை தோன்றவில்லையென்றும் அது கூறுகிறது.

இந்நிலையில் சர்வதேச நீதிகாணும் பொறிமுறை மூலம் நீதிகாண வேண்டுமென்கின்ற வாதத்தை முன்வைப்போரின் கருத்து இதன் மூலம் மேலோங்கியுள்ளது என்றும் எனவே அத்தகைய விசேட சர்வதேச நீதிமன்ற விசாரணை முறை வேண்டுமென்ற கோரிக்கையோடு ஐநா மனிதஉரிமைகள் ஆணையர் உடன்படுவதாகவும் அது கூறுகிறது. இந்நிலையில் சர்வதேச நிபுணர்களின் பங்களிப்புடன் கூடிய நீதி விசாரணையை இலங்கை அரசு மேற்கொள்ளதவிடத்து நீதிகாண்பதற்கான உலகளாவிய வகையிலான ஓர் அதிகாரம் உள்ள ஏற்பாட்டை மேற்கொள்ள வேண்டுமென்று ஐநா உறுப்புநாடுகளிடம் ஆணையாளர் கோருவார் என்ற விடயமே இங்குள்ள அச்சமூட்டும் விடயமாகும்.
இச்செய்தி முக்கியமாக இராஜதந்திர பரிபாசையில் ராஜபக்‌ஷக்களுக்கு பெரும் எச்சரிக்கையாகும். குறிப்பாக நடப்பில் உள்ள அரசாங்கத்தை கவிழ்க்கக்கூடாது அவ்வாறு கவிழ்த்தால் இலங்கை அரசு சர்வதேச ரீதியான போர்க்குற்ற விசாரணைக்கு உள்ளாகும் என்பதுடன் முஸ்லிம்களுக்கு எதிராக நிகழ்ந்த வன்முறைகளானது அரசாங்கத்திற்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்திய நிலையில் இனிவரும் காலத்தில் அத்தகைய நடவடிக்கையில் பௌத்த நிறுவனங்களோ, ராஜபக்‌ஷக்களுக்கு ஈடுபடக்கூடாது என்ற செய்தியையும் இது கூடவே அறிவிக்கிறது.
இறுதியாக ஐநா சபை மீது ஈழத் தமிழர்களுக்கு ஏற்பட்டிருக்கும் அதிருப்தியை சரிசெய்யவும், போர்க்குற்றவிசாரணை, காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் ஏற்பட்டிருக்கும் கொந்தளிப்புக்களை தணிக்கவும்வல்ல வகையிலான ஒரு கவுன்சிலிங்காக இந்த அறிக்கை அமைந்திருக்கிறது.

அரசாங்கத்தை பாதுகாப்பதில் இவ்வறிக்கை 100 வீதம் வெற்றிபெற்றுள்ளது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் ஈழத் தமிழ் மக்களுக்கான நீதிகாணும் விடயத்தில் இது ஒரு கவுன்சிலிங்காக மட்டும் அமைவதுடன் தன் பணியை முடித்துவிடும் என்ற அச்சம் இராஜதந்திர அடிப்படையில் எழ இடமுண்டு.
எப்படியோ இந்த அரசாங்கத்தை பாதுகாப்பதற்கான முயற்சியிலும், இந்த அரசாங்கத்திற்கு ராஜபக்‌ஷக்களுக்கு கொடுக்கக்கூடிய நெருக்கடியை தணிப்பதிலும் ஈழத் தமிழர்களுக்கான நீதிகாணும் விவகாரம் ஒரு துருப்புச்சீட்டாக பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதில் சந்தேகமில்லை. இதுவெறும் துருப்புச் சீட்டாக மட்டும் போகாமல் தமிழ் மக்களுக்கான நீதிகாணும் படலத்தில் அர்த்தபுஷ்டியான செயற்பாட்டிற்கு போவதற்கு தமிழ்த் தரப்பில் உள்ள அரசியல் சக்திகள் எடுக்கவல்ல நிலைப்பாடுகளே வழிவகுக்க வேண்டும் என்கின்ற கண்ணோட்டமும் காணப்படுகிறது.
எப்படியோ மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு இந்த அரசாங்கம் தலையிடியின்றி தொடர்ந்து பதவியில் இருப்பதை இவ்வறிக்கை உறுதிபடுத்திவிட்டது என்பது மட்டும் உண்மை.

#KSRadhakrishnanPostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
26-03-2018

ஊக்கமுடன் இருப்பவர்கள் தாங்கள் சந்திக்கும் விளைவுகளைக் கண்டு பயப்படுவதில்லை...

  ஊக்கமுடன் இருப்பவர்கள் தாங்கள் சந்திக்கும் விளைவுகளைக் கண்டு பயப்படுவதில்லை... மனிதர்கள் அடைகின்ற உயரங்களை காலம் தான் தீர்மானிக்கிறது..