நன்றி: தினமணி 12.01.25, ஞாயிறு , கலாரசிகன்
*
"புத்தகக் காட்சியில் டிஸ்கவரி பப்ளிகேஷன் அரங்கில் இருந்தார் கவிஞர் பிருந்தா சாரதி. சமீபத்தில் அவர் வெளிக்கொணர்ந்த கவிக்கோ அப்துல் ரகுமான் குறித்த ஆவணப் படத்திற்காக அவரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். தனது முக்கோண மனிதன் கவிதை புத்தகத்தை கையொப்பமிட்டு அன்பளிப்பாகத் தந்தார் அவர். அதில் இடம்பெற்ற கடலினும் பெரிது என்ற கவிதை இது-
'எளிதாய் கடந்து செல்கிறோம் ஒரு கண்ணீர் துளியை.
கடலில் இருப்பதை விட
அதிகமான உப்பு
துளி கண்ணீருக்குள் இருக்கிறது எனும் உண்மையை உணராமல்.' "
*
தினமணி ஆசிரியர் திரு வைத்திநாதன் அவர்கள் சென்னைப் புத்தகக் காட்சிக்கு நேற்று முன்தினம் வந்திருந்தபோது டிஸ்கவரி புக் பேலஸ் வெளியிட்ட என் 'முக்கோண மனிதன்' கவிதை நூலை அவருக்கு அளித்தேன். உடனடியாகப் புரட்டி அதில் இருந்து தூத்துக்குடி , கடலினும் பெரிது முதலிய
ஒன்றிரண்டு கவிதைகளைப் படித்துவிட்டு குதூகலமாக அருகில் இருப்பவர்களுக்கும் வாசித்துக் காட்டி 'ஆ... ' என்று உரக்கச் சத்தமெழுப்பி என் தோளிலும் தட்டிக் கொடுத்தார்.
"இதற்காகத்தான் சார் உங்களுக்குப் படிக்க அனுப்புகிறோம்," என்றேன்.
பாரதியின் பக்தர் அல்லவா? அதுதான் அதே போல் பாராட்ட முடிகிறது. என்ன...? 'பலே பாண்டியா ...' மட்டும் மிஸ்ஸிங்.
அது மட்டுமல்ல.... அடுத்த இரண்டு நாட்களிலேயே 'தினமணி'யில் எழுதி தமிழ் கூறும் நல்லுலகம் முழுவதற்கும் 'முக்கோண மனிதனை' அறியச் செய்து விட்டார்.
அது மட்டுமின்றி சென்ற டிசம்பர் 24 இல் என் இயக்கத்தில் வெளியான 'கவிக்கோ' ஆவணப் படம் குறித்த செய்தியையும் சேர்த்துக் குறிப்பிட்டது அவரது பேருள்ளம்.
கவிக்கோ ஆவணப்படம் வெளியீட்டு விழாவிற்கு அவர் நேரில் வந்திருந்தார். அவரை மேடைக்கு அழைத்து சில வார்த்தைகள் பேசச் சொல்ல வேண்டும் என்று தயாரிப்பாளர் சிங்கப்பூர் முஸ்தபா அவர்களும் நானும் விரும்பினோம் ஆனால் படம் பார்த்துக் கொண்டிருந்தவர் படம் முடிந்ததும் கண்ணிமைக்கும் நேரத்தில் காணாமல் போய்விட்டார். அன்று மேடையில் ஏறி பேசாமல் போய்விட்டாரே என்ற எங்கள் மனக் குறையை இன்று ஆவணப் படம் குறித்த செய்தியையும், தன் பாராட்டுகளையும் தெரிவித்து நிறைவு செய்துவிட்டார். மிக்க நன்றி சார்.
புத்தகக்காட்சிக்கு ஒரு மாலை நேரம் வந்தார். ஒவ்வொரு அரங்காக சில அரங்குகளில் நின்று கவனித்தார். ஆனால் இன்று அவர் பதிவு செய்திருக்கும் செய்தியைப் படிக்கும்போது எவ்வளவு செய்திகளை ஒரு சிறிய பத்தியில் பதிவு செய்துவிட்டார் என்று மலைப்பாக இருக்கிறது.
ஒரு நீண்ட நினைவோடை போல அமைந்திருக்கும் அந்தப் பத்தியை முழுக்க படித்து பாருங்கள். எத்தனை பதிப்பகங்களுக்குள் அவரது பார்வை சென்று இருக்கிறது? எத்தனைப் பதிப்பாளர்களுடன் அவர் நேரடி தொடர்பு வைத்திருக்கிறார்? தமிழ் பதிப்புலகின் அண்மைக்கால வரலாற்றையே அதில் எழுதிவிட்டார்.
அத்தோடு எழுத்தாளர் மா. அரங்கநாதன் அவர்கள் நடத்தி அவருடைய புதல்வர் நீதியரசர் அரங்க. மகாதேவன்
அவர்கள் தொகுத்துப் பரிதி பதிப்பகம் வெளியிட்டிருக்கும் 'முன்றில்' இதழ் தொகுப்பு குறித்த செய்தி, அதைப் பற்றிய அலசல் ஆகியவற்றை ஒரு குறுங்கட்டுரையாகவும் அதில் எழுதியிருக்கிறார்.
சின்னதொரு இடத்தில் எத்தனைச் செய்திகள்? அதுவும் காலக் கண்ணாடியாக.
No comments:
Post a Comment