Tuesday, January 9, 2024

#தமிழ்கலைக்களஞ்சியம் #ஓமந்தூரார் #அவினாசிலிங்கம்செட்டியார் #பெரியசாமித்தூரன்

#தமிழ்கலைக்களஞ்சியம்
#ஓமந்தூரார்
#அவினாசிலிங்கம்செட்டியார்
#பெரியசாமித்தூரன் 
———————————
ஓமந்தூரார் தமிழ்நாட்டில் முதலமைச்சர் (பிரிமியர்)ஆக இருந்தபோது அவரது அவையில் அமைச்சராக இருந்த அவினாசி லிங்கம் செட்டியார் முயற்சியில் 1947 முதல் 1968 வரை திரு பெரியசாமி தூரன் அவர்களால் முன்எடுப்பில் சேகரிக்கப்பட்ட  அரிய தமிழ்க்  கலைக்களஞ்சியம் அந்நாளில் பத்து தொகுப்புகளாக வெளியிடப்பட்டது.!






நான் என் தந்தையார் கிராமத்தில் வாங்கி வைத்து இருந்த அந்த பத்து தொகுப்பையும் சென்னைக்கு கொண்டு வந்து வெகு நாட்களாக பாதுகாத்து வைத்திருந்தேன். ஆனால் அவைகளோ நாளடைவில் சீதளம் அடைந்து சிதைந்து  விட்டன. அதற்காக மிகுந்த மன வருத்தமும் அடைந்தேன் .அது அப்படியான ஒரு அரிய பொக்கிஷம்.

நல்வாய்பாக தற்சமயம் தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் அதை மறுபதிப்பாக கொண்டு வந்திருக்கிறது.. அந்தம் பெரிய தொகுப்பை எனது நண்பர்  வழக்கறிஞர் பாபு  தனது அன்பு பரிசாக இன்று வீட்டிற்குகொண்டு வந்து நேரில் கொடுத்தார். தாயைக் கண்ட கன்று போல் மனம் எனக்கு மகிழ்ச்சியால் துள்ளியது.

இக்காலத்தைப் போல கணனி தட்டச்சு மின்நகல் ஏதும் இல்லாத அக்காலத்தில் பல ஆண்டுகளாக அந்தத் தரவுகளைப் பலரிடமிருந்தும் பல அமைப்புகளிடமிருந்தும் தபாலில் கேட்டு வாங்கி பொறுமையாகச் சேகரித்துஅக்கால ட்ரெடில்  எந்திரத்தில் எழுத்துகளைக் கோர்த்து பத்து தொகுப்புகளை கொண்டு வந்த பெரியசாமி தூரன் அவர்களின் மனவலிமையை என்னவென்று தான் வியப்பது!   

அத் தொகுப்புகள் அக்காலத்தின் அருட்கொடையால் நமக்கு கிடைத்த பேறு   என்றுதான் சொல்ல வேண்டும்.!

 அக்காலத்தில் ரூபாய் 500 ல் இருந்து ஆயிரத்திற்கும் குறைவான விலையில்  இவை கிடைத்திருக்க கூடும். இன்று அதன் விலை 8500 ம் ரூபாய்! இந்த விலைக்கு மேல் அது பெறுமதியானது என்று உணர்கிறேன். நான் நண்பர் பாபுவின் கைகளை பிடித்துக் கொண்டு அன்பையும் மகிழ்ச்சியும் நன்றியும் தெரிவித்தேன்.

தமிழ் கூறும் நல்லுலகத்தில் ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டிய மிக அவசியமான கலை மொழிக்களஞ்சியத் தொகுப்பு இது.
*****
தமிழ்க் கலைக்களஞ்சியம் (1948 -1968 ) தமிழில் வெளியான முதல் நவீனக் கலைக்களஞ்சியம். இந்திய மொழிகளில் வெளிவந்த முதல் கலைக்களஞ்சியமும் இதுதான். டி.எஸ்.அவினாசிலிங்கம் செட்டியார் தமிழகத்தின் கல்வியமைச்சராக இருந்தபோது பெரியசாமித் தூரன் ஆசிரியராக இருந்து இந்த கலைக்களஞ்சியத்தை தயாரித்து வெளியிட்டார். 

1944 ல் கோவையில் நடந்த முதலாவது தமிழ் எழுத்தாளர் மாநாட்டில் பெரியசாமித் தூரன் தமிழில் ஓரு கலைக்களஞ்சியம் உருவாக்கவேண்டும் என்னும் விருப்பத்தை காங்கிரஸ் தலைவர்ம் தி.சு.அவினாசிலிங்கம் செட்டியாரிடம் கூறினார்.ஆர். சண்முகசுந்தரம் ஒருங்கிணைக்க ஜி.டி.நாயுடு ஆதரவுடன் நடந்த இலக்கிய மாநாடு இது.

1947 ல் சென்னையில் இரண்டாவது உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாடு நடைபெற்றபோது அப்போது தங்குதுரி பிரகாசம் மற்றும் ஓ. பி. ராமசாமி ரெட்டியார் முதல்வர்களாக இருந்த சென்னை மாகாண அரசில் (1946 -1949) கல்வி அமைச்சராகப் பணியாற்றிய அவினாசிலிங்கம் செட்டியார் அதில் கலந்துகொண்டார். அந்த மாநாட்டிற்கு தலைமை தாங்கிய பெரியசாமித் தூரன் ஆங்கிலமொழியில் உள்ள Encyclopedia Britanciaவுக்குச் சமமாகத் தமிழில் கலைக்களஞ்சியம் வெளியிட வேண்டும் என்ற கருத்தை விரிவான முன்மொழிவாக வைத்தார். (அப்போது அவர் பொருட்களஞ்சியம் என்னும் சொல் தொடரையே பயன்படுத்தினார்). தி.சு.அவினாசிலிங்கம் செட்டியார் ஏற்கனவே தூரனுக்கு அணுக்கமானவர். அவர் நிறுவிய ராமகிருஷ்ணா கல்விநிலையங்களில் தூரன் ஆசிரியராகப் பணியாற்றியிருக்கிறார். அவினாசிலிங்கம் செட்டியார் அந்த மாநாட்டிலேயே ஒரு கலைக்களஞ்சியப் பணியை தொடங்கும் செய்தியை அறிவித்தார். 1946 ல் அவினாசிலிங்கம் செட்டியார் முயற்சியில் தமிழ் வளர்ச்சிக் கழகம் என்ற அமைப்பு நிறுவப்பட்டு பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வியை பரப்பவும், அறிவியலை தமிழில் கற்பிக்கவும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வந்தது. கலைக்களஞ்சியம் உருவாக்க ஒரு துணையமைப்பு உருவாக்கப்பட்டு கலைக்களஞ்சியத்தின் முதன்மை ஆசிரியராக 1948-ல் பெரியசாமித் தூரன் நியமிக்கப்பட்டார்.

#கலைக்களஞ்சியம்
#ஓமந்தூரார்
#அவினாசிலிங்கம்செட்டியார்#பெரியசாமித்தூரன் 




K.S.Radha Krishnan
கே. எஸ் . இராதாகிருஷ்ணன்.

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
9-1-2024


No comments:

Post a Comment

#மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எனது கடிதம்

#மாண்புமிகு  முதல்வர்  மு.க.ஸ்டாலின்         அவர்களுக்கு எனது கடிதம் ———————————————————- கே. எஸ் . இராதா கிருஷ்ணன்  முகாம் - குருஞ்சாக்குளம...