மனதிலுறுதி வேண்டும்,
வாக்கினி லேயினிமை வேண்டும்;
நினைவு நல்லது வேண்டும்,
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்;
கனவு மெய்ப்பட வேண்டும்,
தனமும் இன்பமும் வேண்டும்,
தரணியிலே பெருமை வேண்டும்.
கண் திறந்திட வேண்டும்,
காரியத்தி லுறுதி வேண்டும்;
பெண் விடுதலை வேண்டும்,
பெரிய கடவுள் காக்க வேண்டும்,
மண் பயனுற வேண்டும்,
வானகமிங்கு தென்பட வேண்டும்;
உண்மை நின்றிட வேண்டும்.
மகா கவி பாரதியார் எத்தனையோ மணமுள்ள கவிதை மலர்களைச் சிருஷ்டித்து நமக்குக் கொடுத்திருக்கிறார். தேசத்துக்கு அவசியமான எல்லா விஷயங்களையும் பற்றி அவர் பாடியிருக்கிறார். அவர் தொடாத விஷயம் ஒன்றுகூட இல்லை. ஆனால், பாரதியார் எதைப் பற்றிப் பாடினார் என்பதைக் காட்டிலும், அவர் ஒரு கவி என்பதுதான் மகத்தான விஷயம். முக்கியமாக, நம் காலத்தில் பாரதியார் பிறந்து பாடியதனால், இந்தத் தமிழ் ஜாதியின் சக்தி அவிந்துவிடவில்லையென்பது நிச்சயமாய்த் தெரிகிறது. அப்பேர்ப்பட்ட கவியின் ஞாபகத்தை நாம் என்றென்றைக்கும் போற்ற வேண்டும். அப்படிப் போற்றுவதினால் இன்னும் பல கவிகள் தமிழ்நாட்டில் தோன்றக் கூடும்.
No comments:
Post a Comment