Thursday, June 18, 2015

காலம் எவ்வளவு வேகமாக ஓடுகின்றது.

காலம் எவ்வளவு வேகமாக ஓடுகின்றது. ஜம்மு காஷ்மீர் மாநில உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி நண்பர் பால் வசந்தகுமார் அவர்களுடனான நட்பு நாற்பதாண்டுகளுக்கு மேலானது.

கல்லூரி நாட்களில் இருந்து தொடர்ந்த இந்த நட்பு தொடர்ந்து நீடிக்கின்றது. அவர் வகிக்கும் பொறுப்பின் காரணமாக, தற்போது சற்று தொலைவிலும் இருந்து கொள்வதுண்டு.  அவர் வகிக்கும் பொறுப்பின் காரணமாகவும், நான் அரசியல் தளத்தில் இயங்குவதாலும் இருவரும் ஒரு இடைவெளியான நட்பு பாசத்தோடு இருந்து வருகிறோம்.

 அவருடைய திருமணம் 30 ஆண்டுகளுக்கு முன்னால், சகோதரி டாக்டர்.ஜே.தங்கா  அவர்களோடு, கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் உள்ள  சி.எஸ்.ஐ மாவட்ட தேவாலயத்தில் நடைபெற்றது.

அன்றைக்கு நெருங்கிய நட்பில் அழைக்கப்பட்ட நான் அந்த மணவிழாவில் பிரதானமாகக் கருதப்பட்டேன். இன்றைக்கு (18-06-2015) அதே தேவாலயத்தில் அவருடைய புதல்வி டாக்டர். பி.அனிஷா பவுலின் திருமணம் சிறப்பாக நடைபெற்றது. மணமக்கள் வாழ்வாங்கு வாழ வாழ்த்துகள்.

 சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளான இளமைகாலம் முதல் நண்பர்களாகத் தொடர்பவர்களை  இம்மாதிரி நெருங்கிய நண்பர்கள் வீட்டுத் திருமண விழாக்களில் தான் சந்திப்பதும் உண்டு. பழைய மலரும் நினைவுகளைப் பேசும் பொழுது மனத்துக்கு மகிழ்ச்சியாகவும், ஆறுதலாகவும் படும். இவையெல்லாம் மகிழ்ச்சியான தருணங்கள்.

நண்பர்களும் செயல்பாடுகளைக் குறித்து என்னிடம் வினாவும் போது அவர்களுடைய அக்கறையையும் உணர முடிகிறது. கடந்துவிட்ட நாட்களில் நாங்கள் சென்ற வெளியூர் பயணங்கள், எங்களுடைய திருமண விழாக்கள் மற்றைய தனிப்பட்ட விடயங்களைப் பேசிக் கொள்ளும்போது நட்பு என்பது மாமருந்து என மனதில் பட்டது.

கடந்து போன நாட்களைப் பற்றி அசைபோடத்தான் முடியும். எவ்வளவு வேகமாக காலச் சக்கரம் ஓடிச் சுழல்கிறது.

- கே.எஸ்.இராதகிருஷ்ணன்.
16-06-2015.














No comments:

Post a Comment

*Some believe holding on and hanging in there are signs of great strength*

*Some believe holding on and hanging in there are signs of great strength*. However, there are times when it takes much more strength to kno...