Tuesday, June 2, 2015

தமிழர்களின் மறந்த அடையாளம் செந்நெல்- Red Matta rice .








இன்றைய தமிழ் இந்துவில் “மனுசங்க” தொடரில் கி.ரா அவர்கள் மானாவாரியில் பயிராகும் ஜவ்வரிசி போன்ற உருண்டையான புழுதிபிரட்டி அரிசையைக் குறிப்பிட்டுள்ளார். அது சத்தானது. உழைப்பவர்களுக்கு ஊக்கத்தை அளிக்கும் உணவு தானியமாகும். இந்த அரிசியில் வத்தக்குழம்போ, கருவாட்டுக்குழம்போ, மிளகு ரசத்தையோ, கட்டி எருமைத்தயிரையோ உறுகாயோடு சேர்த்து உண்ணும் போது.. இதற்கு நிகர் வேறு எதுவும் இல்லை.

கரிசல் மண்ணில் நீர்பாசானம் அதிகமில்லாத இடங்களில் இந்த நெல் விளையும். பருமனான நெல்மணியைப் பார்த்தாலே, கோதுமை தானியத்தைப் போன்று காட்சி தரும். அதை அவித்து அரிசியாக்கும் போது அதன் ருசியும் அதிகமாகும். அதிகநேரம் உலையில் வேக வைக்கவேண்டியிருக்கும்.

இந்த அரிசி இப்போது கேரளாவில் பயன்பாட்டில் இருக்கின்றது. தமிழகத்தில் இந்த அரிசியைப் பார்த்தால் முகத்தைத் திருப்பிக்கொள்கின்றனர். எங்களுடைய  கிராமத்தில் உள்ள நிலத்தில்
இந்த நெல் 1970வரை பயிர்செய்யப்பட்டு வந்தது.

பாலக்காட்டில் இருந்து நண்பர் பேச்சிமுத்துவும், கோழிக்கோட்டிலிருந்து நசீரும் எனக்கு இந்த அரிசியை அனுப்புகின்றார்கள். அதைத்தான் இன்றைக்கும் என்வீட்டில் மதிய சாப்பாட்டுக்கு நான் பயன்படுத்துகிறேன். இது நாம் மறந்த உணவுதானியமாகும்..

அந்த சிகப்பு அரிசியான புழுதிபிரட்டி பற்றி ஒரு கண்ணில்பட்ட ஒரு  குறிப்பை இத்துடன் இணைத்துள்ளேன்.

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
02-06-2015.

#RedMattaRice
#KSRadhakrishnan
#KSR_Posts

****
தமிழன் மறந்த சிவப்பு அரிசி - மலையாளிகள்
கொண்டாடும் மட்டை அரிசி.
______________________________

சிவப்பு அரிசி ஓர் அற்புதமான அரிய உணவு. இதன் மருத்துவ விசேசங்களைப் பற்றி கி.மு. 700-ல் சரகரும், கி.மு.400-ல்
 சுசு(ஸ்)ருதரும் நிறையக் குறிப்பிட்டுள்ளார்கள். இந்திய மருத்துவத்தில் ஆயுர்வேதத்தின் முன்னோடிகள்.

வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்று  நாடிகளில் ஏற்படும் மாற்றங்கள்தான் சகல நோய்களுக்கும் காரணம் என்பது
ஆயுர்வேத சித்தாந்தம்.

இந்த மூன்று  நாடிகளின் தோசங்களையும் அறவே  நீக்கும் ஆற்றல்... சிவப்பு அரிசிக்கு உண்டு என்று இவர்கள் கூறியுள்ளார்கள்.

சீனாவில் 3,000 ஆண்டுகளாக செந்நெல்  பயிரிடப்படுகிறது. ஜப்பான், கொரியா, பிலிப்பைன்சு, இலங்கை, ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் சிவப்பு நெல் பயிராகிறது. கொரியாவில் உள்ள சில புத்தர் சிலைகளின் உள்ளே சிவப்பு நெல் விதைகள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் மதுரை, திருநெல்வேலி, தஞ்சாவூர் போன்ற மருத நிலங்களில் செந்நெல் அமோகமாக விளைந்தது. அதேபோல கரிசல் மண்ணிலு நீர்வரத்து அதிகமில்லாத பூமியிலும் இந்நெல் விளைந்தது.

'மாடுகட்டிப் போரடித்தால் மாளாது
செந்நெல் என்று, ஆனைகட்டிப்
போரடிக்கும் அழகான தென் மதுரை’
என்ற பழம் பாடலே இதற்கு சாட்சி.

சிவப்பு நெல், விவசாய முறையில் மட்டுமின்றி தானாகவே காடுகளிலும் மலைகளிலும் மானாவாரியாக
விளைந்தது. ஆகவே, இதை,  'காட்டு அரிசி’ (Wild Rice) என்று சரித்திரக் குறிப்புகள் கூறுகின்றன.

அதனால்தானோ என்னவோ, சமுதாயத்தின் கீழ்த்தட்டு மக்களே
பெரும்பாலும் இதை உணவாகப் பயன்படுத்தினர்.
நம் நாட்டில் கர்நாடகா, பீகார், ஒடிசா, மத்தியப் பிரதேசம், வங்காளம் முதலிய மாநிலங்களில் இது பயிரிடப்பட்டாலும்,
 கேரளாவில் இந்த அரிசி மிகவும் பிரசித்தம். இந்த அரிசிக்கு அவர்கள் கொடுத்துள்ள பெயர் - 'மட்டை அரிசி’.

சபரிமலை செல்லும்போது அங்குள்ள கொட்டல்களில் சிவப்பு அரிசி சாதம்  பரிமாறப்படும்.அங்குவரும் தமிழ்மக்கள் சிலர்  முகம் சுளித்து, ''வேண்டாம், .. வெள்ளைச் சோறு போடுங்கள்...'' என்று சொல்வதையும், பக்கத்து மேசையில் அமர்ந்திருக்கும்  கேரளவாசிகள் பச்சரிசி சாதம்
பரிமாறப்பட்டால் முகம் சுளித்து, ''மட்ட அரிசி போடு...'' என்று சொல்வதையும் காணலாம்.

இமாச்சல பிரதேசத்தில் குலு  பள்ளத்தாக்கில் மட்டலி என்ற சிவப்பு நெல் பயிராகிறது. ஆங்கிலேய ஆட்சியில் அங்கிருந்த ஒரு கவர்னர் இந்த அரிசியை மிகவும் விரும்பி சாப்பிட்டதோடு,  லண்டனில் உள்ள அவர் வீட்டுக்கு இந்த அரிசியைத் தவறாமல் அனுப்பி வந்தார் என்ற செய்திக் குறிப்புகள் உள்ளன.

நீங்கள் யாரும் இதை இதுவரை சாப்பிடாவிட்டாலும், இப்போது நான் பட்டியலிடப்போகும் சிவப்பு அரிசியின் மருத்துவச் சிறப்புகள், உங்களை அதை நாட வைக்கும்!

பொதுவாக நெல்லில் நான்கு பகுதிகள் உண்டு - வெளியே இருக்கும் உமி (Husk); உள்ளே இருக்கும் தவிடு (Bran), கரு (EMbryo); கடைசியாக வெகு உள்ளே இருக்கும் மாவுப்பொருள் (Starch).

இவற்றுள் நல்ல சத்துக்கள் அனைத்தும் வெளிப்பகுதியிலும், வெறும் சக்கை மட்டும் உள்பகுதியிலும் இருக்கின்றன. நாம் சத்துப்பகுதியை மாடுகளுக்குத் தீவனமாகக் கொடுத்துவிட்டு, சக்கையை
மட்டுமே சாப்பிடும் விநோதப் பிறவிகள்! சிவப்பு நெல் மட்டும் இந்த அமைப்பில் விசேசமானது.  இதன் சத்துக்கள்  அனைத்தும் மாவுப்பகுதி வரை உட்சென்று சேமிக்கப்படுவதால், இது தீட்டப்பட்ட பின்பும் அதை நாம் பெற முடியும்.

மேலும் எந்த அரிசியிலும் இல்லாத அளவுக்கு பி-1, பி-3, பி-6 ஆகிய வைட்டமின்கள் - எந்த அரிசியிலும் காணமுடியாத அளவுக்கு இரும்புச் சத்து - சி(ஜி)ங்க் (Zinc), மாங்கனீசு(ஸ்), மெக்னீசி(ஷி)யம், செலினியம்,
பொசுபரசு போன்ற கனிமங்கள் - மிகுதியான நார்ச்சத்து (Fibre) என
சிவப்பரிசியில் அடங்கியிருக்கின்றன.

தன்னிடம் இருக்கும் ஆன்டி ஆக்சி(ஸி)டென்ட் குணங்களால் இதய
வியாதிகளுக்கு அற்புதமான மருந்தாகும் ஆன்த்தோசயனின்,
பாலிஃபீனால் போன்ற வேதிப்பொருட்களும் இதில் சங்கமித்திருக்கின்றன.

இதையெல்லாம்விட, சிவப்பு அரிசியில் மானோகோலின் - கே (Monacolin K) என்கிற அற்புத வேதிப்பொருள் உள்ளது.
இதைத்தான் மருத்துவத்துறையில் இப்போதும் 'லோவாசு(ஸ்)டேடி
ன்' (Lovastatin) என்ற பெயரில் ரத்தத்தில் கொழுப்பைக் குறைப்பதற்காக
உலகெங்கும் கொடுத்து வருகிறோம்.

செந்நெல்லின் மீது வளரும் ஒரு வகை பூஞ்சணம்தான் (Yeast), இந்த லோவாசு (ஸ்)டேடினை உற்பத்தி செய்கிறது. அதனால் சீனாவில், செந்நெல் மீது இந்த பூஞ்சணத்தை இவர்களாகவே
வளர்க்கிறார்கள்.

'சிவப்பு பூஞ்சண அரிசி' (Red yeast rice)
என்று இதற்குப் பெயர். இதைத் தவிர, சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு, ஈரல் வியாதிகள், பித்தப்பை கற்கள், ஆஸ்துமா மற்றும் பலவித ஒவ்வாமைக்கும் (Allergy) சிவப்பு அரிசி நல்ல மருந்து.
இவ்வளவு பெருமைகள் வாய்ந்த சிவப்பு அரிசி.

இப்போது காணாமல் போன மர்மம் என்ன?

சிவப்பு நெல்லுக்கு உரம் இட்டாலும் சரி, இடாவிட்டாலும் சரி, பூச்சிக்கொல்லி மருந்துகள் எதுவுமே இல்லாமல், பூச்சிகளை அண்டவிடாமல் அமோகமாக வளரும் தன்மை உண்டு.

ஆனால், ஆங்கிலேயர்கள், குறிப்பாக அமெரிக்கர்கள், பல சத்துகள் நிறைந்த இந்த அரிசியை களைப்பயிர் (Weed) என்றார்கள். சிவப்பு நெல்லை சிவப்பு அரக்கன் (Red Menace) என்றும், கொழுத்த
பிச்சைக் காரர்கள் (Fat beggars) என்றும் அழைத்தார்கள்.
ஏன்..?

ரசாயன உரங்கள் மூலமும், பூச்சிக்கொல்லி மருந்துகள் மூலமும், விவசாயத்துறையில் உலகெங்கும் ஒரு ராட்சத பொருளாதார சாம்ராச்சியத்தை உருவாக்கியுள்ள அமெரிக்கர்களுக்கு, எந்த உரங்கள், பூச்சிக்கொல்லிகளின் தேவையும் இன்றி வளர்ந்த இந்த
செந்நெல் பிடிக்கவில்லை.

தங்கள் தொழிலை தக்கவைத்துக் கொள்ள இதை எப்படியாவது அழிக்க வேண்டும் என்றும், சிவப்பு நிறத்தை எப்படியாவது திட்டியே தீர்ப்பதென்றும் முடிவெடுத்தனர். 'பட்டை தீட்டப்பட்ட
வெள்ளை அரிசி’ என்ற கவர்ச்சியை மக்களிடம் ஏற்படுத்தினர்.

நம் ஊர் மக்களும் வெள்ளை அரிசியின் நிறத்திலும், மணத்திலும் சுவையிலும் மயங்கி, சிவப்பு நெல் விவசாயத்தை 1930-க்குப் பிறகு பெருமளவில் கைவிட்டனர்.

தண்ணீர் அதிகம் தேவையில்லாத, உரம் தேவையில்லாத, பூச்சிக்கொல்லிகள் தேவையில்லாத, பல்வேறு அற்புத மருத்துவ குணங்களை உடைய, ருசியான, மலிவான சிவப்பு அரிசிக்கு
நாம் ஏன் மாறக்கூடாது  ? !

"நோயற்ற வாழ்வே !   குறைவற்ற செல்வம் !"

No comments:

Post a Comment

*Some believe holding on and hanging in there are signs of great strength*

*Some believe holding on and hanging in there are signs of great strength*. However, there are times when it takes much more strength to kno...