Tuesday, April 23, 2024

#*இதுதான் வாழ்க்கை உலகம்* *வாழ்க்கை என்பதே அந்த அந்த நேரத்தின் நியாயங்கள் தான்*!- -#ஜெயகாந்தன். சின்னச் சின்ன அன்பில் தானே ஜீவன் இன்னும் இருக்கு…

#*இதுதான் வாழ்க்கை உலகம்*

*வாழ்க்கை என்பதே அந்த அந்த நேரத்தின் நியாயங்கள் தான்*!- -#ஜெயகாந்தன்.

சின்னச் சின்ன அன்பில் தானே ஜீவன் இன்னும் இருக்கு…
————————————
காலம் தோறும் மனிதர்களின் வாழ்க்கை  கருத்தியல் ரீதியாகத்தான்பரிசீலிக்கப்படுகிறது.



இறுதியில் அது ஆன்மீக ரீதியாக ஒரு முடிவுரையை எழுதிப் பார்க்கிறது
மிக சிறந்த உதாரணமான பொன்மொழிகள் சொல்லப்பட்டு விட்டன.

வாழ்க்கை ஒரு நீர்க்குமிழி போல தோன்றி மறைகிற தற்கணத்தின் இருப்பு சார்ந்த அல்லது மானுட வாழ்வின் உள்ளீடற்ற அபிலாசைகள் சார்ந்ததுதான். அதற்குள் கனவுகளும் உண்டு கற்பனைகளும் உண்டு. அவை நிறைவேற வேண்டும் என்று அவன் எத்தனிக்கையில் அரசு குடும்பம் இன்ன பிற வகையில் உண்மையாக அவை எவற்றின் மீதும் விருப்பம் இல்லாவிட்டாலும் கூட அதை எதிர்கொள்ள வேண்டியே அவன் அரசியல் மயமாகிறான்

அப்படியான நிகழ்வுகள் அல்லது சம்பவங்கள் எவ்வளவு ஊதி பெருக்கப்பட்டாலும் ஒரு பலூன் இறுதியில் வெடித்து விடுவதைப் போலத்தான் என்பதாக  அவை அனுமானிக்கப்பட்டு அது சார்ந்த அனைத்தும் சுருக்கமாகத் தத்துவத்தில்  ஏற்கனவே இன்மையாகவும் வெறுமையாகவும் முன்வைக்கப்பட்டுள்ளன.

ஏனெனில் பிறந்தால் இறந்து போவோம் என்கிற அறிவை பெற்ற முதல்  உயிரி மனிதன்தான் .

ஐந்தறிவு உள்ள பிற மிருகங்களுக்கு இந்த உண்மை தெரியாது.

ஆகவே மனிதன் தன் பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையே எதையாவது சொல்லிவிட்டு போவதை அதாவது தன் இறப்பிற்கு முன் தன்னை நிரூபணம் செய்து கொள்வதை சாகசமாக மேற்கொள்கிறான்.

அதற்காக அவன் கயிற்றின் மீது கழைக்கூத்தாடுகிறான்.
அதே கயிறு தான் அவனுக்கு சுருக்கிட்டு கொள்ளும் மரண கயிறுமாக ஆகிறது.

கர்ம வினை என்பது இவ்விடத்தில் தான் மனிதன் அறிய முடியாத மர்ம வினை ஆகி முடிகிறது.

இப்போது மனிதன் ஒரு அரசியல் உயிரி என்கிற இடத்தில் கை விலங்கு இடப்படுகிறான்.

என்னை பொருத்தவரையில் பல கோடி ஆண்டுகளாக இந்த உலகம் தோன்றித துலங்கி வந்திருக்கிறது மறைந்தும் புதுப்பித்தும் இந்த பூமி பந்து தன் உயிர் தன்மையைக் காப்பாற்றிக் கொள்கிறது ‌.

இதை ருசுபிக்க மிகச்சிறந்த உன்னத மனிதர்கள் ஆதி முதல் அந்த வரை தோன்றி கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கும் பிறப்பு இறப்பு இருந்தாலும் ஒரு வகையில் காலத்திற்கு அப்பால் அவர்கள் நெடுநாள் நினைவு கூறப்படுகிறார்கள்.

நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோருக்கும் பெய்யும் மழை என்றான் வள்ளுவன்

இப்படித்தான் அனைத்திலும் நிறையத் தான் நான் விரும்பினேன் ஆனால் என்னிலும் எப்படியோ நிறைந்துதான் இருக்கிறது வாழ்வு.

•உங்கள் இறுதிஊர்வலத்திற்குப் பின் ஒருசில மணிநேரங்களில் அழுகுரல்கள் முழுமையாக அடங்கியிருக்கும்,
அடுத்த வேளை உணவுக்கு  ஆர்டர்கள்  ஹோட்டலுக்கு சென்றிருக்கும்,

•பேரன் பேத்திகள் ஓடிப்பிடித்து விளையாடிக் கொண்டிருக்க,..
வந்த கூட்டத்தில் ஓர் இளம்பெண்ணும் ஆணும் காதல் புன்னகையுடன் பரஸ்பரம் போன் நம்பர்கள் மாற்றிக்கொள்வர்...

•படுக்கப் போகும் முன் காலாற நடந்து வரலாமென சில ஆண்கள் தேநீர்க்கடை வரை சென்றிருப்பர்,..

•சாப்பிட்ட இலைகளயும், குப்பைகளையும் இன்னும் கொஞ்சம் தள்ளிக் கொட்டியிருக்கலாம் என உங்கள் பக்கத்துவீட்டுக்காரர் மனதுக்குள் பொறுமிக்கொண்டிருப்பார்,..

•ஒரு அவசர சூழ்நிலையால் நேரில் வர இயலவில்லையென உறவினர் ஒருவர் உங்கள் மகளிடம் போனில் பேசுவார்.

•மறுநாள் விருந்தில், கறியில் காரம் போதவில்லையென ஓரிருவர் குறைபட்டுக்கொள்வார்கள், எலும்பை நீக்கி, கறியை மட்டும் குழந்தைக்கு ஒரு அம்மா ஊட்டிக்கொண்டிருப்பார்..

•இத்தனை தூரம் வந்தாச்சு போற வழியில் அங்கேயும் பார்த்துவிட்டுப் போலாமா என வெளியூர் உறவுகள் சுற்றுலாத் திட்டங்கள் ரகசியாமாய் வகுத்திருப்பர்,

•தன்னுடைய பங்குக்கு மேல் சிலநூறு ரூபாய்கள் அதிகமாக செலவாகிவிட்டதென ஒரு பங்காளி கணக்கிட்டு நொந்துகொண்டிருப்பார்..
கூட்டம் மெல்ல மெல்லமாய்க் கரையத் தொடங்கும்..

•அடுத்து வரும் நாட்களில்
நீங்கள் இறந்ததே தெரியாமல் உங்கள் தொலைபேசிக்கு சில அழைப்புகள் வரக்கூடும்,..

•உங்கள் அலுவலகம் உங்கள் இடத்துக்கு வேறொருவரை அவசரமாகத் தேடத் துவங்கியிருக்கும்,

•ஒரு வாரம் கழிந்து, உங்கள் இறப்புச் செய்தி கேள்விப்பட்டு, 
உங்கள் கடைசிப் பதிவு என்னவென ஆர்வம் கலந்த சோகத்தோடு சில பேஸ்புக் நண்பர்கள் தேடக்கூடும்.

•இரண்டு வாரங்களில் உங்கள் மகன் மகளின் எமெர்ஜென்சி லீவு முடிந்து பணிக்கு திரும்பிடுவர், 

•ஒரு மாதமுடிவில் உங்கள் வாழ்க்கைத்துணை டிவியில் வரும் ஏதோ ஒரு நகைச்சுவைக் காட்சிக்கு சிரிப்பார்,

•அடுத்துவரும் மாதங்களில், உங்கள் நெருங்கிய உறவுகள் மீண்டும் சினிமாவுக்கும், பீச்சுக்கும் சகஜமாய்ச் செல்லத்துவங்கியிருப்பர்,

•அத்தனை பேரின் உலகமும் எப்போதும்போல் மிக இயல்பாக இயங்கிக்கொண்டிருக்கும்,

•ஒரு பெரிய ஆலமரத்தின் இலை ஒன்று வாடி உதிர்ந்ததற்கும், நீங்கள் வாழ்ந்து மறைந்ததற்கும் எள்ளளவும் வித்தியாசம் இல்லாதது போல, அத்தனையுமே சுலபமாய், வேகமாய், எந்தச் சலனமுமின்றி நடக்கும்,

•மழை பெய்யும், தேர்தல் வரும், பேருந்துகளில் கூட்டம் வழக்கம்போலவே இருக்கும்,  ஒரு நடிகைக்குத் திருமணம் ஆகும், திருவிழா வரும், உலகக்கோப்பை கிரிக்கெட் திட்டமிட்டபடி நடக்கும், வண்ண வண்ணமாய் பூக்கள் பூக்கும், உங்கள் செல்லப்பூனை அடுத்த குட்டி ஈனும்..

•நீங்களே வியக்கும் வேகத்தில் இந்த உலகத்தால் நீங்கள் மறக்கப்படுவீர்கள்,
இதற்கிடையில் உங்கள் முதல்வருடத் திதிகொடுத்தல் மட்டும் மிகச்சிரத்தையாக நடக்கும்.

•கண்மூடித் திறக்கும் நொடியில்
வருடங்கள் பல ஓடியிருக்கும், உங்களைப் பற்றிப் பேச யாருக்கும் எதுவுமே இருக்காது, 
என்றாவது ஒருநாள், பழைய புகைப்படங்களைப் பார்க்கையில் மட்டும், உங்கள் வாரிசுகளில் ஒருவர் உங்களை நினைவுகொள்ளக்கூடும்,

•உங்கள் ஊரில், நீங்கள் நெருங்கிப் பழகிய ஆயிரம் ஆயிரம் பேர்களில், யாரோ ஒருவர் மட்டும், நீங்கள் இருந்ததாய்,அபூர்வமாய் உங்களைப்பற்றிப் யாரிடமோ பேசக்கூடும்..

•மறுபிறவி உண்மையென்றால் மட்டும் நீங்கள் வேறெங்கேயோ, வேறு எவராகவோ வாழ்ந்து கொண்டிருக்கக்கூடும்..

•மற்றபடி, நீங்கள் எதுவுமே இல்லாமல் ஆகி,பேரிருளில் மூழ்கி பல பத்தாண்டுகள் ஆகியிருக்கும்,
இப்போது சொல்லுங்கள்.. உங்களை இத்தனை சீக்கிரம் மறக்கக் காத்திருக்கும் மனிதர்களில் யாரைத் திருப்திப்படுத்த இன்று, இப்போது, இவ்வளவு பதற்றமாய் ஓடிக்கொண்டிருக்கிறீர்கள்?. 

உங்கள் வாழ்க்கை , யாரையும் நீங்கள் திருப்தி படுத்த தேவையில்லை, யாரும் உங்களை திருப்தி படுத்தபோவதும் இல்லை. வாழுங்கள் உங்களுக்காகவும் வாழுங்கள் .

சின்னச் சின்ன அன்பில் தானே ஜீவன் இன்னும் இருக்கு…

#ksrpost
23-4-2024.


No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...