Saturday, June 20, 2015

சமஸ்டி அமைப்பில்.....-Federal States



சமீப காலமாக இந்தியாவில் மாநில அரசுகள் பல பிரச்சனைகளை எதிர்நோக்குகிறது. தற்போது அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி யூனியன் பிரதேசமாக இருந்தாலும் அங்குள்ள லெப்டினட் கவர்னரால் தன்னுடைய ஜனநாயகக் கடமைகளை ஆற்ற முடியவில்லை என்று வேதனைப்படுகின்றார்.

ஆந்திராவிலிருந்து பிரிந்த தெலுங்கானா என்ற இருமாநிலங்களுக்கும் பிரச்சனை. பாகம் பிரித்தவுடன் சகோதரர்கள் சண்டைபோடுவது போல ஆந்திராவுக்கும் தெலுங்கானாவுக்கும் சண்டைகள் உச்சத்தில் இருக்கிறது.

தெலுங்கானா மேலவைத் தேர்தலில் வெற்றிபெற சந்திரபாபு நாயுடு லஞ்சமாக எம்.எல்.ஏக்களுக்கு பணம் கொடுத்தார் என்று தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் குற்றஞ்சாட்டுகிறார்.
சந்திரபாபு நாயுடு இதனால் கைது செய்யப்படுவார் என்றும் எச்சரிக்கை விடுக்கின்றார்.

இப்படியெல்லாம் சமஷ்டி அமைப்பில் உள்ள மாநிலங்களுக்கிடையில் சகஜமான நிலை இல்லை என்றால் மத்திய அரசு  குரங்கு வடையைப் பிய்த்து பங்குபோட்ட கதையைப் போல ஆகிவிடும்.

மத்திய அரசைப் போல மாநில அரசும் முறையாக மக்களால் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டது என்பதை மத்திய அரசு உணரவேண்டும்.  எஸ்.ஆர்.பொம்மை வழக்குக்குப் பின் மாநில அரசின் ஆட்சியை பிரிவு.356க் கொண்டு கலைக்கும் வாடிக்கை இறுதிபடுத்தப்பட்டது.
இருப்பினும் மத்திய அரசு மாநிலங்களை தங்கள் விருப்பம் போல நடத்துவது வேதனையாகத்தான் உள்ளது.

பல்வேறு தேசிய இனங்கள், மொழிகள் , கலாச்சாரங்கள் இருக்கின்ற இந்தியாவில் மாநில சுயாட்சி தான் தீர்வாக அமையும். இந்நிலையை நோக்கிச் செல்லும் பொழுது, டெல்லியிலும், ஆந்திரத்திலும் சமீபத்தில் நடக்கின்ற நிகழ்வுகள் வேதனையைத் தருகின்றன.

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
20-06-2015.

No comments:

Post a Comment