"தமிழீழ வரைபடத்தில் 12 சதவீதமான தமிழர்களுக்கு இவ்வளவு பெரிய இடமா? சிங்களவர்கள் பெரும்பான்மையாக வாழும் புத்தளம் மாவட்டம் கூட தமிழர்களின் இடமா?" - இவ்வாறான கேள்விகளை இன்று நாம் பரவலாகக் கேட்கிறோம்.
இதற்கான விடை 1799 ஆம் ஆண்டு எழுதப்பட்ட கிளேஹார்ன் குறிப்பு (Cleghorn Minute) எனும் வரலாற்று ஆவணத்தில் ஒளிந்துள்ளது. பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின் அதிகாரியாகப் பணியாற்றிய Sir Hugh Cleghorn 1799 இல் இலங்கை மக்களின் வரலாறு மற்றும் பரம்பல் குறித்து ஒரு அறிக்கையைச் சமர்ப்பித்தார். அதில் அவர் குறிப்பிட்ட ஒரு விடயம் தமிழ்த் தேசிய அரசியல் வரலாற்றில் மிக முக்கியமானது- "பண்டைய காலத்திலிருந்தே இலங்கைத் தீவானது இரண்டு வெவ்வேறு தேசங்களால் (Two different nations) ஆளப்பட்டு வந்துள்ளது. சிங்களவர்கள் தெற்கிலும் மேற்கிலும் வாழ்கிறார்கள். வளவை ஆற்றிலிருந்து (Walave River) சிலாபம் (Chilaw) வரை வடக்குப் பகுதியில் மலபாரிகள் (தமிழர்கள்) வசிக்கிறார்கள்." என குறிப்பிட்டுள்ளார். கிளேஹார்ன் குறிப்பிட்ட அந்த எல்லையானது (வளவை ஆறு முதல் சிலாபம் வரை), இன்றைய வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைத் தாண்டி புத்தளம் மாவட்டத்தையும் உள்ளடக்கியது. இந்தக் குறிப்பே 1957-ல் சி. சுந்தரலிங்கம் அவர்களாலும், பின்னர் 1977-ல் வட்டுக்கோட்டைத் தீர்மானத்திலும் தமிழீழத்தின் எல்லைகளைத் தீர்மானிக்க முதன்மை ஆதாரமாகப் பயன்படுத்தப்பட்டது. இதன்படி பார்த்தால், இன்றைய புத்தளம் மாவட்டத்தின் பெரும்பகுதி தமிழர்களின் வரலாற்றுத் தாயகமாகும். 1977 ஆம் ஆண்டு தமிழர் விடுதலைக் கூட்டணியின் தேர்தல் அறிக்கையிலும், பின்னர் விடுதலைப் புலிகளின் ஆவணங்களிலும் கிளேஹார்ன் குறிப்பிட்ட இந்த எல்லைகளே அடிப்படை ஆதாரமாகக் கொள்ளப்பட்டன. இதனால் சிங்களவர்கள் பெரும்பான்மையாக வாழும் இன்றைய புத்தளம் மாவட்டம், தமிழர் தாயக நிலமாக அடையாளப்படுத்தப்பட்டது. புத்தளம், சிலாபம், வென்னப்புவ போன்ற பகுதிகளில் வாழும் இன்றைய சிங்கள மக்களில் பெரும்பாலோர், உண்மையில் தமிழ்ப் பின்னணியைக் கொண்டவர்களே. இது 'சிங்களமயமாக்கம்' (Sinhalization) எனும் சமூக மாற்றத்தின் விளைவால் ஏற்பட்டது. வென்னப்புவ மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கத்தோலிக்கப் பாடசாலைகள் மற்றும் தேவாலயங்களில் ஒரு காலத்தில் தமிழ் வழிபாட்டு மொழியாகவும் பயிற்று மொழியாகவும் இருந்தது. இன்றும் அங்கிருக்கும் முதியவர்கள் சரளமாகத் தமிழ் பேசுவதை நாம் காண முடியும். இப்பகுதிகளில் உள்ள 'கரவா' (Karava) மற்றும் 'பரத' சமூகத்தினர் காலப்போக்கில் தங்களைச் சிங்களவர்களாக அடையாளப்படுத்திக் கொண்டனர். ஆனால் அவர்களின் குடும்பப் பெயர்கள் இன்றும் அவர்களின் தமிழ்ப் பின்னணியை பறைசாற்றுகின்றன. கிளேஹார்ன் குறிப்பில் ஒரு சுவாரஸ்யமான விடயம் உண்டு. சிங்களவர்களில் ஒருகுறிப்பிட்ட பகுதியினர் 'சியாம்' (தாய்லாந்து) பகுதியிலிருந்து குடிபெயர்ந்தவர்கள் என்ற ஒரு கருத்தையும் அவர் பதிவிட்டிருந்தார். இந்தத் தகவல் பிற்காலத்தில் சிங்கள வரலாற்று ஆசிரியர்களால் சர்ச்சைக்குரியதாகப் பார்க்கப்பட்டது. ஆனாலும் இலங்கையில் இருந்த கிளேஹார்ன் குறிப்பின் நகல்களில் இந்த 'சியாம்' தொடர்பான பகுதி திட்டமிட்டு நீக்கப்பட்டதாகக் ( கிழித்தெறியப்பட்டது) கூறப்படுகிறது. 1930-களில் பிரித்தானிய ஆவணக் காப்பகத்திலிருந்து எடுக்கப்பட்ட அசல்நகலிலேயே இந்தத் தகவல் மீண்டும் வெளிவந்தது. கிளேஹார்ன் குறிப்பிட்ட சிலாபம் மற்றும் புத்தளம் பகுதிகளில் ஒரு காலத்தில் தமிழ் மொழி ஆதிக்கம் செலுத்தியது என்பது மறுக்க முடியாத உண்மை. வென்னப்புவ போன்ற பகுதிகளில் முதியவர்கள் இன்றும் தமிழ் பேசுவதும், கத்தோலிக்க தேவாலயங்களில் தமிழ் வழிபாட்டு மொழி அடையாளங்கள் இருப்பதும் இதற்குச் சான்று. ஆனால், கடந்த இரண்டு நூற்றாண்டுகளில் ஏற்பட்ட மொழி மாற்றம் மற்றும் கலாச்சார ஒருங்கிணைப்பால், இப்பகுதிகள் இன்று சிங்களப் பெரும்பான்மைப் பகுதிகளாக மாறியுள்ளன. கிளேஹார்ன் என்ற பிரித்தானிய அதிகாரியின் ஒரு சிறு குறிப்பு, இன்றுவரை நீடிக்கும் புத்தளம் சிலாபம் எல்லைப் பிரச்சினைகளுக்கும், வரலாற்று விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
No comments:
Post a Comment