———————————————————-
தெற்குச் சீமைகளான திருநெல்வேலி மாவட்டம் விருதுநகர் மாவட்டம் தென்காசி மாவட்டம் ஆகிய மூன்று மாவட்டங்களின் நிர்வாகங்கள் குறிப்பாக அதன் ஆட்சித் தலைவர்கள் மூவரும் அவ்வட்டாரங்களின் எழுத்தாளர்களால் ரத்தமும் சதையுமாக எழுதப்பட்ட கரிசல் இலக்கியப் படைப்புகளைத் தொகுத்து
சிறப்பான முறையில் பெரிய தனி தனி தொகுதிகளாக 650 பக்கங்களுக்கு மேல் தொகுத்து வெளியிட்டு இருக்கிறார்கள். ஏற்கனவே விருதுநகர், திருநெல்வேலி மாவட்டங்கள் வெளியிட்ட தொகுதிகள் எனக்கு கிடைத்து அதை குறித்து இங்கே எழுதி இருந்தேன். இன்று தென்காசி மாவட்ட தெகுப்பு நூல் வந்து சேர்ந்தது.
விருதுநகர் மாவட்ட ஆட்சி தலைவர் திருமிகு வீ.ப. ஜெயசீலன் அவர்கள்,
திருநெல்வேலி மாவட்டம் ஆட்சி தலைவர்திருமிகு கா.ப. கார்த்திகேயன்
அவர்கள்,
தென்காசி மாவட்டம் ஆட்சி தலைவர்
திருமிகு ஏ.கே.கமல்கிஷோர் அவர்கள்
என இந்த மூன்று ஆளுமைகளுக்கு மிக்க நன்றி.
அத்துடன் மட்டுமல்லாமல், அந்தந்த மாவட்டத்தின் புத்தக திருவிழா கண்காட்சியின் போது அதைச் சிறப்பாக அறிமுகம் செய்து மேடை ஏற்றி இந்த கரிசல் மண்ணின் வாழ்க்கையை அந்த எளிய மக்களின் வாழ்வை போராட்டத்தை உலகறியும் படிச் செய்திருக்கிறார்கள்.
இதை முன்கை எடுத்து விருதுநகர்,திருநெல்வேலி மாவட்டங்களின் நிர்வாகம் முதன் முதலில் செய்த பிறகு விருதுநகர் மாவட்டம் அதே போல தங்கள் பகுதிகளைச் சேர்ந்தபடைப்பாளிகளின் இரு இலக்கிய தொகுப்பை மிகச் சிறப்பாக கச்சிதமான வடிவத்துடன் எல்லோருடைய நூலகத்திலும் இருக்கும்படியாக அருமையாக வெளியிட்டது. அதை அடுத்து இப்பொழுது தென்காசி மாவட்ட ஆட்சியரும் அப்பகுதி எழுத்துக்களை ஒருங்கிணைத்து அதை நூலாக செவ்வனே கொண்டு வந்திருக்கிறார்.
மூன்று மாவட்ட கலெக்டர்களும் மிகுந்த கவனம் எடுத்து மக்களின் கலை இலக்கிய வாழ்வின் முக்கியத்துவம் உணர்ந்து இத்தகைய பணியைச் செய்திருக்கிறார்கள். எந்த பிராந்தியமாக இருந்தாலும் சரி உலகின் எந்த மூலையாக இருந்தாலும் சரி அங்கே உள்ள படைப்பாளிகள் தங்கள் எழுத்தில் கொண்டு வந்த வாழ்க்கை என்பது உலக அளவில் சிறந்த ஆவணமாக போற்றப்படுகிறது என்பதை மனதில் வைத்து பார்த்தோமேயானால் இந்த பணி எத்தகைய முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும்!
விருதுநகர் மாவட்டம் இத்தகைய பணியில் முன்னோடியாக முன்னணியாக இருக்கிறது!. அந்த மாவட்ட கலெக்டர் தொடர்ந்து இரண்டு நாள்மூன்று நாள் என அப்பகுதி மட்டுமல்லாமல் தமிழகம் முழுக்க வாழும் இலக்கிய ஆர்வலர்களைக் கூட்டி கரிசல் இலக்கிய விழாக்களை நடத்திக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் சிவகாசி எஸ் எப் ஆர் கல்லூரியில்
கரிசல் இலக்கிய விழா ஒன்றை நடத்தினார். அவ்விழாவின் போது விருதுநகர் மாவட்ட இலக்கியப் படைப்புகளை ஒரு 100 பக்கத்தில் தொகுத்து நூலாக வெளியிட்டார். தொடர்ந்து கரிசல் ஆண்டு மலர்களையும் தொகுத்து வெளியிட்டுள்ளார். கவிஞர் வைரமுத்து அவர்களின் கவிதை குறித்த ஆய்வுகளையும் வெளியிட்டுள்ளார். அந்த வகையில் இலக்கியத்தை பொருத்தவரையில் இன்னொரு முன்னோடி மாவட்டமாக விருதுநகர் விளங்குகிறது.
அந்த வகையில் திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் விருதுநகர் மாவட்ட கலெக்டர் தென்காசி மாவட்ட கலெக்டர் மூவரும் இந்த இலக்கியப் பணியை மிகச் சிறப்பாகச் செய்து வருவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அவர்களது பணிக்காலம் முடிந்தாலும் மாற்று இடங்களுக்கு போய்ப் பணி செய்தாலும் அவர்கள் தமிழ்க் கரிசல் இலக்கியத்திற்கு செய்திருக்கிற இந்த பணி மகத்தானதும் நெடுநாள் நினைவு கூறத் தக்கதாகவும் இருக்கும்.
கரிசல் மண்ணின் மைந்தனாகவும் கி ராவின் “கதை சொல்லி” இதழ் ஆசிரியராகவும் தொடரும் எனக்கு இந்த மூவரின் பணிகள் மிகுந்த பெருமிதத்தை அளிப்பதோடு வீரார்ந்த நெடிய போராட்டங்களை நடத்தி நிமிர்ந்து நிற்கும் நெல்லையின் புரட்சிகர போராட்ட வாழ்க்கை மற்றும் அம் மக்களின் எளிய இருப்பிற்கும் கிடைத்த வரம் என்றே நான் சொல்லுகிறேன்! அந்த கந்தக வெப்பமடிக்கும் நிலத்தின் மீது மலர்ந்த கனல் பூக்களாக இந்த இலக்கிய தொகுப்புகள் விளங்கும் என்ற மகிழ்வோடு அவர்கள் மூவருக்கும் என் நெஞ்சார்ந்த அன்பையும் வணக்கத்தையும் மகிழ்ச்சியும் தெரிவித்துக் கொள்கிறேன். கரிசல் மண்ணில், தூத்துக்குடி மாவட்டமும் இந்த அருமையான பணியில தன்னை ஈடு படுத்தி கொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment