Wednesday, June 11, 2025

#வாரிசுஅரசியல்

 #வாரிசுஅரசியல்

—————————-
அரசியலில் மூத்த தலைவர்களாக இருப்பவர்கள் தன் குடும்பத்தைப் பொறுத்த வரை அதன் தந்தை ஸ்தானத்தில் தனது மகனையோ மகளையோ தனக்குப் பிறகு வாரிசாக அரசியலில் கொண்டு வர வேண்டும் என்று விரும்புகின்றனர். இன்றைக்கு பல அரசியல் தலைவர்களின் குடும்பங்களில் இதுதான் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இதுவே வாரிசு அரசியலின் தொடர்கதை ஆகிவிட்டது . ஆனால் அந்த அரசியல்வாதியும் தந்தையுமான ஒருவர் தன் வாரிசுகளை ஏன் அரசியலுக்குக் கொண்டு வந்தேன் என்று மனம் நொந்து அவர்களுடைய கடைசி காலத்தில் புலம்பித் தவித்து மனவேதனையுடன்தான் போய்ச் சேர்ந்திருக்கிறார்கள்.
காஞ்சி சங்கர மடம் அல்ல திமுக! என்று கலைஞர் சொன்னார்! சரிதான்! இங்கே மன்னராட்சி என்றால் வாரிசு அரசியல் தான்! இல்லையா என்ன? இங்கே விலை கொடுத்து ஓட்டு வாங்கி ஏதோ ஒரு வகையில் ஆட்சிக்கு வந்து விடுகிறார்கள்.இதை ஜனநாயக ஆட்சி என்று சொல்ல முடியுமா?
கலைஞருக்குப் பிறகு தமிழ்நாட்டிலும் டெல்லியில் அதிக செல்வாக்கு பெற்றிருந்த அடுத்த கட்ட திமுக தலைவர் வைகோ தான்! பொதுக்குழுவின் படி அவர்தான் அடுத்த தலைவராக வந்திருக்க வேண்டியவர் ஆனால் கலைஞர் தன் குடும்ப அரசியலுக்காக அவர் முற்றிலுமாக வெளியேற்றினார். வைகோ தனி கட்சி ஆரம்பித்து தமிழ்நாடு எங்கும் சிறப்பான ஒரு கொந்தளிப்பை ஏற்படுத்தி மாற்று அரசியலுக்கு அதாவது வாரிசு அரசியலுக்கு அப்பால் ஒரு மாற்று அரசியலுக்கு வழிவகுப்பார் என்ற நம்பிக்கை போய் தன்னை நம்பி பின்னால் வந்தவர்களை எல்லாம் அம்போ என்று கைவிட்டு விட்டு மாறக இன்றைக்கு அதே திமுகவில் பதவிக்காக அவரும் வாரிசு அரசியலில் ஒன்றிப்போய் கிடக்கிறார்.
பெரும்பாலும் இந்திய அரசியல் தலைவர்கள் தங்களது வாரிசுகளை தங்களின் குடும்பத்தின்
பொருட்டோ சில நம்பிக்கைகளின் பொருட்டோ தாங்கள் பதவிவில் இருக்கும் போதே அவர்களை முன்னிலைக்கு
கொண்டு வந்து நிறுத்துகிறார்கள்.
அது தகுதி அடிப்படையில் இருந்தால் கூட பரவாயில்லை . உண்மையில் அது வாரிசு அடிப்படையிலேயே தான் குடும்பச் சுயநலமாய் நிகழ்கிறது. என்பது ஒருபுறம் இருக்க
இப்படியான வாரிசு அரசியல் களால் இந்திய அரசியலின் ஸ்திரத்தன்மை பாதிக்கப்படுகிறது
என்பதோடு இந்திய அரசியல் கட்டமைப்புக்கு பலவகையான கோளாறுகள் ஏற்பட்டு விடுகின்றன. ஏனெனில் இந்த வாரிசு அரசர்கள் ஏதோ தாங்களுக்கு வாழ கிடைத்த தன்னுடைய சுயநலத்திற்கு கிடைத்த பதவி என்றும் தங்களின் குடும்பத்தின் உரிமை,அதிர்ஷ்டம் என்றும் அதைக் கருதுகிறார்கள். அதன் அடியில் மனம் போன போக்கில் சில ஏக போக முடிவுகளை எடுத்து அதற்கான சட்டம் அரசு போன்றவற்றையும் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இது அவர்களை முன்னெடுத்துக் கொண்டு வந்த அவர்களது தந்தைமார்களின் வாழ்க்கையில் பிற்காலத்தில் பெரும் சிக்கலை
உண்டாக்குகிறது.
இது பொதுவாக வெளியில் தெரிவதில்லை. சில நேரம் இந்த வாரிசுகள் தங்கள் தந்தைகளையே வீட்டு சிறையில் வைத்து தான் சொன்னபடி தான் கேட்க வேண்டும் என்கிற அதிகாரச் சிக்கலையும் உண்டாக்குகிறார்கள். நான் பெயரைச் சொல்ல விரும்பவில்லை உத்தரப்பிரதேசத்தில் இப்படித்தான் நடந்தது.
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இதுதான் அரசியல் நிலைமை.
இப்படியான குடும்ப சிக்கல்கள் கிடையே இந்தியா முழுக்க இருக்கக்கூடிய மாநிலங்களில் உள்ள தலைவர்கள் எப்படி நாட்டை வழி நடத்துவார்கள். இத்தகைய வாரிசு அரசியல் போக்குகள் தான் இந்தியாவின் பெரும் அரசியல் நோயாக சீரழிவாக மாறிக்கொண்டிருக்கிறது.
அத்தனை குடும்ப அரசியலும் மிக அவலமாக இப்போது வெளிவந்து கொண்டிருக்கிறது.
தற்போதுள்ள பதினெட்டாவது நாடாளுமன்ற த்தில் 543 மக்களவை உறுப்பினர்களில் 32 சதவிகிதம் உறுப்பினர்கள் வாரிசு அடிப்படையில் அரசியலில் நுழைந்தவர்கள் ஆவார்கள். இதில் இருபது சதவீதம் பேர் முதல் தலைமுறைகள் என்றும் 72% பேர் இரண்டாம் தலைமுறைகள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மிக மோசமான முறையில் அரச பதவிகளை அதன் லாப வீதங்களை குடும்பச் சொத்தாக மாற்றிக் கொண்டிருக்கும் இவர்களுக்கு அப்பால் இந்தியாவின் வளர்ச்சி தனிமைப்
படுத்தப்பட்டுள்ளது. என்பதுதான் மிக முக்கியமானது.
பிரதமர் மோடி “குடும்பக் கட்சி, வாரிசு அரசியல், ஊழல் கட்சித் தலைவர்கள், என்று மிக முக்கியமாக விமர்சிப்பது தமிழக முதல்வர் ஸ்டாலினையும் காங்கிரஸ் கட்சியின் இளவரசர் ராகுல் காந்தியையும் சமாஸ்வாடிக் கட்சி தலைவர் அகிலேஷ் யாதவையும் ராஷ்ரிய ஜனதாத் தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவையும்தான்!
இன்றைய திமுகவை எடுத்துக் கொள்ளுங்கள்! தங்களது குடும்பச் செல்வாக்கால் சினிமாவில் தலை காட்டிக் கொண்டிருந்த கலைஞரின் பேரனும் ஸ்டாலினின் மகனும் ஆகிய உதயநிதி திடீரென்று அரசியலில் வந்து குதிக்கிறார்.
அத்தோடு மட்டுமல்லாமல் திமுகவை பற்றி எந்த சித்தாந்த அரசியல் கொள்கைகளும் புரியாத யாரோ முன்பின் தெரியாத தனது விசுவாசிகளான ராஜேந்திர குமார் மதிவேந்தன் போன்றவர்களை எல்லாம் அமைச்சராக்கி தனது பக்கத்தில் வைத்திருக்கிறார்.
போக யாரோ அப்துல்லாவாம் உதயநிதியின் சிபாரிசால் அவர் இன்று நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருக்கிறார்.
நான் கேட்கிறேன் இவர்களுக்கும் கலைஞர் திமுகவுக்கும் ஏதேனும் தொடர்புகள் இருக்கிறதா. ஸ்நான பிராப்தம் என்பார்கள். அது கூட இல்லை.
இப்படி லிப்டில் ஓடி வந்து ஏறிக் கொண்டவர்கள் எல்லாம் திமுகவில் தலைவர்கள் ஆகிவிடுகிறார்கள்! ஆதிலிருந்து உழைத்த தகுதியும் திறமையும் உள்ளவர்கள் அனேக நியாயம் பேசுவார்கள் என்கிற முறையில் நேர்மையாக படி வழியாக வருபவர்களை ஒதுக்கி வைக்கப்படுகிறார்கள்.
உண்மையில் இந்த மண்ணுக்கு தன் வாழ்நாள் முழுக்க உழைத்தவர்கள் இன்னும் அதற்காக உழைத்துக் கொண்டே தான் இருக்கிறார்கள். குறிப்பாக வயது மிகுந்த பல இடது இடதுசாரித் தோழர்கள் உதாரணமாகச் சொன்னால் தீக்கதிர் ஆசிரியர் எஸ் ஏ பெருமாள் இன்றும் சித்தாந்த முடிவுகள் நடைமுறைகள் சார்ந்தும் மக்கள் தொடர்பான போராட்டங்களிலும் தனது வயது கருந்தாது இடம் பெறுகிறார்.இதுவரை ஒருமுறையாவது இவரை சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுத்து அனுப்பி இருக்கிறார்களா?
அதே சமயம் சி பி எம் இல் சம்பத் இருக்கிறார். பிறகு சி பி ஐ என்று எடுத்துக் கொண்டால் சி மகேந்திரன் மிகச் சரியான பார்வையும் அரசியல் சித்தாந்தமும் அதற்கான உழைப்பும் எல்லாவிதப் போராட்டங்களிலிலும் முன்னணியாக நின்று கட்சிக் கொள்கைக்காக பாடுபடுபவர். அவருக்கு என்ன பதவி கிடைத்திருக்கிறது. வாரிசு அரசியலுக்காகத்தான் நாங்கள் எல்லோரும் வெளித்தள்ளப்பட்டோம் என்பது உண்மைதானே!
வைகோவும் கூட நாற்பது ஐம்பது ஆண்டுகளாக அரசியலில் இருந்தவர்தான் தீவிரமாகப் பேசியவர் தான்!படு மோசமாகப் பாதாளத்தின் கீழே விழுந்து விட்டார் . இப்போது அவருடைய நிலை என்ன? வாரிசுக்காக வழக்காடிக் கொண்டிருக்கிறார்!
எனக்கு தெரிய 75 ஆண்டுகளுக்கு மேலாக தமிழர் தமிழர் தம் வாழ்வு குறித்த அரசியல் பார்வையில் தெளிவும் அவர்களது உரிமைகள் பற்றி பேசக்கூடிய அறிவும் உடையவர் நெடுமாறன் அவருக்கு என்னதான் இந்த அரசியலில் மரியாதைக்குரிய இடம் கிடைத்திருக்கிறது. நாங்களெல்லாம் இப்படித்தானே வெளித் தள்ளப்பட்டு இருக்கிறோம்.
இப்படி தங்கள் மகள்களையோ மகன்களையோ பாதம் தாங்கி விசுவாசிகளையோ வாரிசு அரசியலில் கொண்டு வந்து எம்எல்ஏவாகவும் எம்பி ஆகவும் நியமித்து அது ஒரு 10 ஆண்டு காலம் பிணைப்பில் இருந்து ஓடிக்கொண்டே இருக்கிறது. இறுதியில் தங்களது வாரிசுகளின் தான்தோன்றிச் செயல்களால் மனது துன்பப்படும் தந்தைகள் அதாவது அவர்களை உருவாக்கிய தலைவர்கள் அவமானப் படுவது தான் வாடிக்கையாகி இருக்கிறது.
இந்தியா முழுக்கப் பாருங்கள்!
அகிலேஷ் யாதவ் தன் தந்தையான முலாயம் சிங் யாதவை வீட்டுச் சிறையில் பூட்டுப் போட்டு அடைத்துப் போட்டார். முலாயம் சிங் யாதவ் அந்த காலத்தில் சோசலிஸ்ட் ஜெயபிரகாஷ் நாராயணன் , லோகியா போன்றவர்களுடன் இயங்கிய மூத்த தலைவர்! அவரையே அவரது வாரிசுகள் வீட்டுச் சிறையில் அடைத்துப் போட்டு விட்டார்கள். அவரை மகனே கட்சியலிருந்து நீக்கினர்.அதேபோல் மகாராஷ்டிராவில் சரத் பவார் குடும்பத்திலும் வாரிசுகளால் படு பயங்கரமான தொல்லைகள் வந்தது!
அதேபோல கர்நாடகாவில் தேவகவுடாவிற்கும் அவரது மகன்கள் குமாரசாமி- ரேவண்ணாக்கும் நடந்தது. ஏறக்குறைய கட்சியின் ஒழுங்குக்குள் வராமல் தன் போக்கில் காதலில் திரிந்த ரேவண்ணாவிற்கு சொத்தில் ஒரு பைசா கூட எழுதி வைக்க மாட்டேன் என்று தேவகவுடா சொன்னார். இதேபோல்தான் என்டி ராமாராவிற்கும் அவரது மருமகனான சந்திரபாபு நாயுடுவிற்கும் ஏற்பட்ட பிரச்சினைகள் ஊரறிந்தது தானே! மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் மருமகன் அவருடன் முரண்பட்டு ஏறக்குறைய கட்சியைத் தெருவில் இழுத்து விட்டார். பிகாரில் லாலு வாரிசு அரசியலில் தனது மூத்த மகனை கட்சிலிருந்து நீக்கம. காஷ்மீர், பஞ்சாப், அரியான, அஸ்ஸாமில் வாரிசு அரசியல் பாடுகள்….
தமிழகத்தில் தன் குடும்பத்தின் வாரிசுத் தொல்லைகளால் திமுகவுக்குள் ஏற்படும் பிரச்சனைகளைக் கலைஞர் ஏற்கனவே அறிந்து தான் விடை பெற்றுப் போயிருந்தார். இப்படி இந்தியாவின் மாநிலங்கள் அனைத்தும் அதன் தந்தைகளின் வாரிசுகளால் பெரும் தொல்லைகளைச் சந்தித்து கொண்டு தான் இருக்கிறது.
வடக்கே இமயம் காஷ்மீரில் இருந்து
ஷேக் அப்துல்லா பருக் அப்துல்லா பஞ்சாபில் பிரதாப் சிங் பலாலா அவரது பையன் அடுத்து தேவிலால் குடும்பம் சவுதாலா உத்திரபிரதேசத்தில் கன்சிராம் மாயாவதி முலாயம் சிங் யாதவ் மகன் அகிலேஷ் யாதவ் பீகாரில்
லல்லு பிரசாத் யாதவின் மகன்கள் மகள்கள் மற்றும் ராம் விலாஸ் பஸ் வானுடைய சகோதரர்கள் மகன்கள்
மகாராஷ்டிராவில் சரத் பவார் மகன் மகள்கள் மற்றும் குடும்பத்தினர்
சிவசேனா சிவசேனா முழுவதும் குடும்பம் தான். கர்நாடகாவில் தேவகவுடா குமாரசாமி பிள்ளைகள் ஆந்திராவில் என் டி ஆர் சந்திரபாபு நாயுடு ஒய் எஸ் ஆர் ராஜசேகர ரெட்டி அவரது மகள் காங்கிரஸ் தலைவர் மகன் ஜெகநாத ரெட்டி
கேரளாவில் பினராய் விஜயன் அவரது மருமகள்இங்கே தமிழ்நாட்டைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். ஸ்டாலின் கனிமொழி உதயநிதி மகன் மகள் சகோதரி பேரன் என மூன்று தலைமுறைக் கன்னுக் குட்டிகள். போதாதற்கு முரசொலி மாறன் குடும்பததின் தயாநிதி கலாநிதி பிள்ளைகள்.
பாமக ராமதாஸ் ராமதாஸ் மகன் மருமகள் மகள் தமிழ் மாநில காங்கிரஸ் மூப்பனார் மகன் வாசன் சிதம்பரம் அவரது மகன் கார்த்திக்
இப்படியானவாரிசுகளாகவும் குடும்பங்களாகவும் இந்தியா முழுக்க அரசியல் களத்தில் வேலை செய்வது இவர்களுக்குள் அதிகாரப் போட்டி அரசியல் சூழ்ச்சிகள் தந்தை பேச்சை மகன் கேட்பதில்லை மகன் பேச்சை சகோதரன் கேட்பதில்லை. ஒவ்வொரு ஒவ்வொருவருக்கும் அவரவர் சார்ந்த ஆதரவாளர்கள்.
இப்படி மொத்த இந்தியாவே வாரிசுகளால் சூழப்பட்டிருக்கிறது. தேச நலன்களுக்காக வாங்கும் அந்நியக் கடன்களையும் நாட்டு வருமானங்களையும் இவர்கள் தங்கள் குடும்பச் சொத்தாக ஊழல் முறையில் மடைமாற்றிக் கொள்கிறார்கள். இவையெல்லாம் நெடுநாள் நீடிக்காது ஏனெனில்
சுதந்திரப் போராட்ட காலத்தில் எவ்வித அரசியல் பின்புலமும் இல்லாத இளைஞர்கள் தான் தீவிரமாகச் செயல்பட்டு நாட்டுக்கு விடுதலை பெற்று தந்தார்கள்! எனவே அப்போது தேச விடுதலை குறித்து இளைஞர்களுக்கு ஏற்பட்ட உத்வேகம் இப்போது தேச வளர்ச்சிக்காக மீண்டும் எழ வேண்டும்! ஜாதிய வாதம் குடும்ப வாரிசு அரசியல்த் தொடர்பு இல்லாத ஒரு லட்சம் இளைஞர்கள் பொது வாழ்விற்கு வரவேண்டும்! தாங்கள் விரும்பும் எந்த கட்சியிலும் அவர்கள் இணையலாம்! உள்ளாட்சி முதல் மக்களவைப் பிரதிகளாக உருவெடுக்கும் வகையில் அரசியலில் பாய்ச்சப்படும் இந்த புதிய ரத்தம் புதிய மனநிலையையும் ஜனநாயகத்தையும் பெரிதும் வளப்படுத்தும்! என்று சுதந்திர தினத்தன்று இளைஞர்களுக்கு பிரதமர் விடுத்த அழைப்பானது மிக முக்கியமான ஒன்று. இத்தகைய முடிவுகள் நாடு முழுவதும் இளைஞர்களுக்கிடையே உற்சாகமான எழுச்சியை ஏற்படுத்தி இருப்பதோடு நாட்டுக்குச் சேவையாற்றத் தாங்கள் தயாராக இருப்பதையும் அவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.
அரசியல் பின்புலம் இல்லாத இளைஞர்களை அரசியலுக்குக் கொண்டு வருவதன் மூலம்தான் இப்படியான சமூக நோய் பிடித்திருக்கும் வாரிசு அரசியலுக்கு நல்லதொரு முடிவு கட்ட முடியும் என்பதுதான் இன்றைய புதிய பார்வை என்றும் சொல்லலாம்.

No comments:

Post a Comment

Funeral Procession of Veer Savarkar In Bombay-1966

  Funeral Procession of Veer Savarkar In Bombay-1966 பாரத நாட்டிற்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த ஒப்பற்ற சுதந்திரப் போராட்ட வீரர்...