Monday, August 22, 2016

குமரப்பா, ராகுல் சாங்கிர்த்தியாயன்


ஆக்ஸ்போர்டு யூனிவர்சிட்டி பிரஸ் கடந்த வாரம் The Web of Freedom, A Life History of Rahul Sankrityayan வெளியிட்டுள்ளது. இது குறித்து சென்னை, ஆக்ஸ்போர்டு யூனிவர்சிட்டி பிரிவின் மேலாளர் அன்புத் தோழி மீரா ஜோஸ் அவர்கள் தொலைபேசியில் தெரிவித்தார். ஆனால் ஓராண்டுக்கு முன்பு இந்த நூல்களை ஆக்ஸ்போர்டு யூனிவர்சிட்டி புத்தக நிலையத்தில் பெற்றுக் கொள்ளலாம். கடந்த கால ப. சிதம்பரத்தின் பட்ஜெட்டால் இந்த வசதி இப்போது இல்லாமல் போய்விட்டது. ஆக்ஸ்போர்டு யூனிவர்சிட்டி வெளியீடுகள் அனைத்தும் நேரடியாக வாங்க முடியாமல் வேறு புத்தக அங்காடிகள் மூலமாகத்தான் வாங்க வேண்டிய நிலை.

இந்நிலையில் சென்னை ராயப்பேட்டையில் சட்ட புத்தகங்கள் விற்கும் சீதாராமன் கம்பெனி மூலமாக இந்த இரண்டு நூல்களை பெற்றேன். குமரப்பாவை பற்றி வேணு மாதவ் கோவிந்த், தீபக் எழுதிய நூல் மேலெழுந்தவாரியாக பார்த்தேன். படித்துக்கொண்டிருக்கின்றேன். குமரப்பாவைப் பற்றிய நல்ல பதிவு. பாரம்பரிய தொழில்கள், பொருளாதாரம் பற்றியதான செய்திகள் காந்திக்கும், அவருக்கும் இருந்த நெருக்கம், அயல்நாட்டு தொடர்புகள், உண்மையான கிறித்து மார்க்க ஊழியராகவும், கல்லுப்பட்டி ஆசிரம வாழ்க்கைப் பற்றியும் சொல்லியுள்ளார். இன்றைக்கு அரசியலில் தறுதலைகளும், அரை வேக்காடுகளும் வலம் வரும்போது குமரப்பா என்ற காந்தியிடமே நேருக்கு நேர் வினா எழுப்பிய நேர்மையாளரைப் பற்றி இன்றைய சமுதாயம் அறியவில்லையே என்பதுதான் கவலை.

குமரப்பாவை பற்றிய பாடங்கள், அவருடைய பொருளாதார சிந்தனைகள் யாவும் கல்லூரிகளில் கூட நுழைய முடியவில்லை. நேர்மையான தியாகிகளுக்கே இந்த பாடு என்றால் பலர் சொல்கின்ற இறைவன் இருக்கின்றானா, இயற்கையின் நீதி உள்ளதா என்பதுதான் புரியாத புதிர். நேர்மையாளர்கள் ஆராதிக்கப்பட வேண்டும். ஆனால் மது அருந்துகின்ற கீழ்த்தரமான எண்ணம் கொண்டோரெல்லாம் நாடாளுமன்றத்திற்கு உறுப்பினர்களாக செல்கின்றனர். குமரப்பாவை நாடாளுமன்றத்திற்கு வந்து பொறுப்பேற்று அமைச்சராக வேண்டும் என்று நேரு வேண்டியபோது, அவர் ஜவஹர் நான் மக்களோடு பணியாற்றுகிறேன் என்று மதுரை மாவட்ட கல்லுப்பட்டிக்கு வந்துவிட்டார். கிராமியப் பொருளாதாரம், உண்மையான கிறிஸ்து மார்க்கம், நேர்மையான அரசியல் என்று தஞ்சையில் பிறந்து கல்லுப்பட்டியில் இறுதிகாலம் வரை நெறியான வாழ்க்கை வாழ்ந்த உத்தமர்தான் ஜோசப் குமரப்பா.

மகிழ்ச்சியான செய்தி என்னவென்றால் பிரிட்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு யூனிவர்சிட்டி அவரைப் பற்றி விரிவான நூலை வெளியிட்டு கொண்டாடுகின்றது. ஆனால் நமக்கு அவர் யார் என்றே தெரியாத வெட்கக்கேடான நிலை.

ஆக்ஸ்போர்டு யூனிவர்சிட்டி வெளியிட்ட ராகுல் சாங்கிர்த்தியாயன் மாபெரும் ஆளுமை. பொதுவுடைமை தத்துவம், மானிட நேயம், பௌத்தம் மதங்களுக்கு இடையே நேரம் பிரச்சினைகள் என்றெல்லாம் உலகம் முழுவதும் சுற்றி ஆய்வு நடத்தியவர். வால்காவிலிருந்து கங்கை வரை என்று பல அரிய நூல்களை எழுதியவர். திருவள்ளூர் மாவட்டம் திருமழிசையில் தமிழையும் கற்றார். அவரைப் பற்றி விரிவான தொகுப்பு நூலாக வியன்னா பல்கலைக்கழக அல்கா ஆத்ரேய சூடால் என்ற பேராசிரியர் அம்மையார் எழுதியுள்ளார். இவரை வியன்னா பல்கலைக்கழகத்தில் பணியாற்றுகின்றார். இந்த நூலும் அவசியம் படிக்கவேண்டியது. எப்படியோ இந்தியர்கள் கொண்டாடாத குமரப்பாவையும், ராகுல் சாங்கிர்த்தியாயனையும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கொண்டாடுவதில் மட்டற்ற மகிழ்ச்சி.

No comments:

Post a Comment

ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு #Meeting with AP DyCM Shri Pawan Kalyan Garu

#ஆந்திர  துணைமுதல்வர்  பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு  #Meeting with  AP DyCM Shri Pawan Kalyan Garu —————————————————————- நேற்று பிற்பகலில்...