Friday, August 26, 2016

திரு.வி.க.

வரலாற்றில் மறக்க முடியாத மாமனிதர்கள்
............................................
எளிய குடும்பத்தில் பிறந்து எளிய வாழ்வு மேற்கொண்டு எளியவர்கள் நலனுக்காக வாழ்ந்து மறைந்த தொண்டறச் செம்மல், தொழிற்சங்க மேதை, இலக்கியவாதி, தமிழறிஞர் 
சமயங்களில் பொதுமை வேண்டிய மனிதநேயர், கவிஞர், வரலாற்றாசிரியர் ஆய்வாளர், பத்திரிக்கையாளர்       "தமிழ்த்தென்றல்" திரு.வி.கல்பாணசுந்தரம் 
..... சு.குமார தேவன் .....
*திருவாரூரை பூர்வீகமாகக் கொண்ட திரு.வி.க. 1883ம் ஆண்டு இதே நாளில் தற்போது தண்டலம் ( திருப்பெரும்புதூர்) என்றழைக்கப்படும் துள்ளம் என்னும் ஊரில் பிறந்தார்.
* அவர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த அத்தனைத் தலைவர்களிடமும் அரசியல் வேறுபாடின்றித் தொடர்பு வைத்திருந்தார்.
* இளம் வயதில் சித்த வைத்திய மருந்து சாப்பிட்ட போது சாப்பிட்ட மருந்து பத்தியம் இல்லாமல் போனதால் பக்கவிளைவு ஏற்பட்டு கை கால்கள் முடமாக அதை சரி செய்தவர்  அயோத்திதாசப் பண்டிதர்.
* காந்தியார் சென்னைக்கு முதன்முதலாய் வந்தபோது
அவரின் ஆங்கிலப் பேச்சை மொழி பெயர்த்து அழகுத் தமிழில் விளக்கமளித்து காந்தியாரிடம் நற்பெயர் எடுத்தார்.1921ல் "மனித வாழ்க்கையும் காந்தியடிகளும் " என்ற நூலினை எழுதினார்.
* சமயம், அரசியல்.இலக்கியம், கவிதைகள்,வரலாறு, தன் வரலாறு என்று அனைத்துத் தளங்களிலும் மூழ்கி ஆய்வு செய்து எழுதிய நூல்கள் மொத்தம் 56. தமிழக வரலாற்றில் அரிய செய்திகள் சிந்தனைகள் விரவிக் கிடக்கும் அந்த நூல்களை ஆய்வு செய்து பட்டம் பெற்றோர் பலராவார்.
* சட்டசபையில் தமிழில் பேச வற்புறுத்தி அதைத் தன் வாழ்நாளில் கண்ட தமிழறிஞர் .
* மேடைப் பேச்சில் தனக்கென ஓர் பாணியை மேற்கொண்டு ஆற்றொழுக்கான தமிழ்ப்பொழிவை நிகழ்த்தினார். ஒரு மணி நேரம் பேசினால் அதில் கடைசி பத்து நிமிடம் இதுவரை தான் பேசியது என்ன என்பதை சுருக்கமாய்ப் பேசி முடிப்பார்.
* திரு.வி.கவின் மேடைத் தமிழ், எழுத்து நடையைப் பலர் பின்பற்றினர்.
* தற்போது அண்ணாசாலையில் உள்ள " Spencers" கட்டடத்தில் இருந்த நிறுவனத்தில் கணக்கு வழக்கு எழுதி வாழ்க்கை நடத்திய போது அந்த உரிமையாளரிடம் ஆங்கில ஆட்சிக்கு எதிராக நடந்து வருவதால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் பணியை ராஜினாமா செய்தார்.
* 20-04-1918ல் வாடியாவுடன் இணைந்து தொழிலாளர்கள் நலன் காக்க திரு.வி.க. உருவாக்கியதே"சென்னை மாகாணத் தொழிலாளர் சங்கம்" என்பதாகும்.
* 1919 முதல் 1922 வரை எட்டு மணி நேர வேலை மற்றும் வேலைக்கேற்ற ஊதியம் வேண்டி நடந்த பின்னி மில் வேலை நிறுத்தப் போராட்டம் தான் முதல் மாபெரும் தொழிலாளர்கள் போராட்டமாக வரலாறு பதிவு செய்கிறது. அதை முன்னின்று நடத்தியவர் திரு.வி.க.
* தொழிற்சங்கப் போராட்டம் தீவிரமாதல் கண்டு அவரை நாடு கடத்த ஆங்கில அரசு முற்பட்ட போது அன்றைய நீதிக்கட்சித் தலைவர்களான சர்.பிட்டி தியாகராயர். பனகல் அரசர் ஆகியோர் திரு.வி.கவை நாடு கடத்தினால் பதவியை ராஜினாமா செய்து விடுவோம் என்று கூறியதால் நாடு கடத்தும் பேச்சு முடிவுற்றது.
*தேசபக்தன், நவசக்தி ஆகிய பத்திரிக்கைகளை நிறுவி அதன் மூலம் தான் கொண்ட கொள்கைகளைப் பரப்பினார்.
* 1919 ல் முதன் முதல் மேடையேறிப் பேசியது "திராவிடரும் காங்கிரசும் " என்ற தலைப்பில்.
* 1925ல் பெரியார் காங்கிரசை விட்டு வெளியேறி சுயமரியாதை இயக்கம் காண ஒரு வகையில் திரு.வி.க.வும் காரணம். பின்னாளில் பெரியார் கூட்டிய மாநாட்டில் பேசிய போது
சுயமரியாதை இயக்கத்தின் தந்தை என் நண்பர்  பெரியார் என்றால் தாய் நான் தான் என்றார்.
* சுதந்திரம் பெற்ற 1947ம் ஆண்டில் டிசம்பர் 9 வரை திரு.வி.க. தொழிற்சங்கம் அமைத்துக் கம்யூனிசம் பேசுவார் என்று கருதிய காங்கிரஸ் அரசு அவரை வீட்டுக்காவலில் வைத்தது.
* எண்ணற்ற கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் பெரியாருடன் அவருக்கிருந்த நட்பின் தன்மை மாறாமல் இருந்தது. எனக்காகக் கண்ணீர் சிந்த இருக்கும் ஒரே நண்பர் நாயக்கர் தான் என்றார். அதன்படியே அவர் 17-091953ல் மறைந்த போது வெளியூரில் இருந்த பெரியார் ஓடோடி வந்து இரங்கல் கூறி அவருக்கு செய்ய வேண்டிய அனைத்து இறுதிச் சடங்குகளையும் முன்னின்று அறிஞர் அ.ச.ஞானசம்பந்தம் மூலம் செய்தார்.
* "எனக்கு மீண்டும் பிறவி வேண்டும் பிறந்து தமிழ்ப் பணியும் சமூகப் பணியும் ஆற்றவேண்டும்" என்று கூறிய திரு.வி.க.வள்ளலாரின் கொள்கை வழிநின்றவர்.
* திரு.வி.க.நடத்திய நவசக்தியில் துணை ஆசிரியராக இருந்த கிருஷ்ணமூர்த்தி அவர் மேல் கொண்ட பற்றால் "கல்கி" என்று அறியப்பட்டார்.
* பல்வகையிலும் தமிழுக்கும் தமிழர்க்கும் தொண்டாற்றிய திரு.வி.க வின் நூற்றாண்டை 1983ல் அரசு கொண்டாடி விட்டு மறந்து விட்டது. அவர் நினைவாக அவர் பிறந்த இடத்தில் மணிமண்டபம் அமைக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்திரவிட்டும் அரசு அசைந்து கொடுக்க மறுப்பது கேவலம்.
* " தேனருவித் திரு.வி.க
செந்தமிழ்ப் பேச்சும் எழுத்தும் இன்பத் தேனருவி  பெண்ணின் பெருமையைத் தொழிலாளி உரிமையைக் கண்ணான தமிழின் கவினார்ந்த உண்மையைப் புண்ணான இந்தி புகுத்தும் சிறுமையை எண்ணிய எண்ணத்தில் எழுந்த தமிழனைத்தும் தேனருவித் திரு.வி.க." என்றார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்.
வாழ்க தமிழ்த்தென்றல் திரு.வி.க.

No comments:

Post a Comment

ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு #Meeting with AP DyCM Shri Pawan Kalyan Garu

#ஆந்திர  துணைமுதல்வர்  பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு  #Meeting with  AP DyCM Shri Pawan Kalyan Garu —————————————————————- நேற்று பிற்பகலில்...