Thursday, August 11, 2016

தலைவர் கலைஞரும், விவேகானந்தர் இல்லமும் (ஐஸ் ஹவுஸ்)

2010 கட்டத்தில் விவேகானந்தர் இல்லத்தின் குத்தகை காலம் முடிய நான்கு, ஐந்து நாட்கள்தான் இருந்தது. தினமணி ஆசிரியர் நண்பர் திரு. கே. வைத்தியநாதன் இது குறித்து அன்றைய முதல்வர் கலைஞர் அவர்களின் பார்வைக்கு கொண்டு சென்று உதவுங்கள் என்றார். இராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி கௌதமானந்தா ஜி மகாராஜா, மேலாளர் சுவாமி அபிராமினந்தா ஆகிய இருவரும் என்னைத் தொடர்பு கொண்டு பிரச்சினைகளை குறித்து தெரிவித்தனர். தலைவர் கலைஞருடைய பார்வைக்கு கொண்டு சென்றபின், அந்த குத்தகை காலம் நீட்டிக்கப்பட்டு, உரிய ஆவணங்களும் கையொப்பமாகி ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி கௌதமானந்தா ஜி மகாராஜா அவர்களிடம் வழங்கயிபோது, மிக்க மகிழ்ச்சி. குழப்பத்தில் இருந்து நிம்மதியாகிவிட்டேன். பெரிய கடமையை உங்கள் தலைவர், முதலமைச்சர் கலைஞர் செய்துகொடுத்துள்ளார். நன்றி மறவேன் என்று என்னிடம் குறிப்பிட்டார். அது குறித்து விரிவான கட்டுரையை எழுதி அப்போதைய முரசொலியிலும் வந்துள்ளது. அந்தக் கட்டுரையின் இணைப்பும் இத்தோடு உள்ளது. ராமகிருஷ்ண மடம் குறித்த பதிவும் வருமாறு:

http://ksradhakrishnan.in/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A/

ஐஸ் ஹவுஸ் விவேகானந்தர் இல்லமான கதை


அன்றைய மெட்ராசில் வெளிநாட்டுக் கார் (French Dideon) வைத்திருந்த முதல் இந்தியர் செட்டியார்தான். கார் என்ன பெரிய விஷயம், அவர் சொந்தமாக ரயிலே வைத்திருந்தார். திருவள்ளூரில் இருக்கும் வீரராகவ பெருமாள் கோவிலுக்கு சென்று வர செட்டியார் நான்கு பெட்டிகள் கொண்ட அந்த தனி ரயிலைத்தான் பயன்படுத்தினார்.

வணிகர்களைப் போன்றே மெட்ராசை சுற்றியிருந்த மயிலாப்பூர், மாம்பலம் போன்ற பகுதிகளில் வசித்த பிராமணர்களும் கிழக்கிந்திய கம்பெனிக் காலத்தில் மிகுந்த செல்வாக்குடன் இருந்தனர். அவர்களில் பலர் நீதித்துறையில் புகழ்பெற்று விளங்கினர். அவர்களில் மெட்ராசிற்கென ஒரு அடையாளத்தை தந்துவிட்டுப் போனவர் பிலிகிரி அய்யங்கார்.
மெரினா கடற்கரையில் மெகா சைஸ் பிறந்தநாள் கேக் போல நின்றுகொண்டிருக்கும் ஐஸ் ஹவுசிற்கு விவேகானந்தர் இல்லம் என்ற அடையாளம் கிடைக்க காரணமாக இருந்தவர் இந்த பிலிகிரி தான். இங்கிலாந்தில் இருந்து கப்பலில் கொண்டு வரப்படும் ஐஸ் கட்டிகளை பாதுகாப்பதற்காக 1842ஆம் ஆண்டு டூடர் என்ற ஆங்கிலேயர் இதனை கட்டினார். இங்கு சேமிக்கப்பட்ட ஐஸ் கட்டிகள்தான் ஆங்கிலேய அதிகாரிகளின் மாலை நேர மது விருந்துகளை சிறப்பித்தன. 1880களில் இந்தியாவிலேயே நீராவி முறையில் ஐஸ் கட்டிகள் தயாரிக்கும் உத்தி கண்டுபிடிக்கப்பட்ட பின் டூடரின் வியாபாரம் கலகலத்துப் போனது.
எனவே, இந்த கட்டடத்தை பிலிகிரி அய்யங்கார் என்ற மெட்ராஸ் உயர்நீதிமன்ற வழக்கறிஞருக்கு விற்றுவிட்டார் டூடர். குடோனாக இருந்த அதனை வட்டமான வராண்டாக்களையும், நிறைய ஜன்னல்களையும் வைத்து வீடாக மாற்றினார் பிலிகிரி.

இந்நிலையில்தான் சிகாகோ மாநாட்டில் உலகப் புகழ்பெற்ற உரையை ஆற்றிவிட்டு பெரும் புகழுடன் தாய்நாடு திரும்பிய சுவாமி விவேகானந்தர், ஊருக்கு செல்லும் வழியில் சென்னை வந்தார். விவேகானந்தரின் சீடரான பிலிகிரி அய்யங்கார், சுவாமிகளை ஊர்வலமாக அழைத்துவந்து தனது ஐஸ் ஹவுசில் தங்க வைத்தார்.

1897ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 6-14ந் தேதி வரை இங்கு தங்கிய சுவாமி விவேகானந்தர், எழுச்சிமிக்க ஏழு உரைகளை ஆற்றினார். ஒருகாலத்தில் ஜில்லென்ற ஐஸ் கட்டிகள் இருந்த கட்டடத்தில் அக்னிப் பிழம்பான அந்த வீரத் துறவியை, பிலிகிரி அய்யங்கார் தங்க வைத்ததால்தான் அந்த கட்டடம் பின்னர் விவேகானந்தர் இல்லம் எனப் பெயர் பெற்றது.
இப்படி அடிமட்ட கூலித் தொழிலில் தொடங்கி அரசுக்கு ஆலோசனை வழங்கும் அதிகார மையம் வரையில் அன்றைய மண்ணின் மைந்தர்கள் பல தளங்களிலும் பரவிக் கிடந்தனர். இவர்கள் அனைவரின் உழைப்பும், சிந்தனையும் தான் வங்கக் கடலோரத்தில் வறண்டு கிடந்த சாதாரண பொட்டல் மணல்வெளியை மெட்ராஸ் என்ற மாநகரமாக மாற்றி அமைத்திருக்கிறது.

படத்தில் இடப்புறத்தில் இருந்து இரண்டாவதாக தரையில் அமர்ந்திருப்பவர் தான் பிலிகிரி அய்யங்கார், சுவாமி விவேகனந்தருடன்.


No comments:

Post a Comment

Funeral Procession of Veer Savarkar In Bombay-1966

  Funeral Procession of Veer Savarkar In Bombay-1966 பாரத நாட்டிற்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த ஒப்பற்ற சுதந்திரப் போராட்ட வீரர்...