Saturday, August 6, 2016

இலங்கை அரசியலமைப்பில்.....??

இலங்கை அரசியலமைப்பில் உள்ள மாகாண சபைக்கு உரிய பொலிஸ் , காணி அதிகாரத்தையே வழங்க முன்வராதவர்கள் எவ்வாறு தமிழ் மக்களுக்கு தீர்வினை வழங்க போகிறார்கள் என யாழ்.ஊடகவியலாளர்கள் , நல்லிணக்க பொறிமுறைக்காக மக்கள் கருத்தறியும் செயலணியிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். 

நல்லிணக்க பொறிமுறைக்காக மக்கள் கருத்தறியும் செயலணியின் அமர்வு இன்று காலை யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. குறித்த அமர்வில் யாழ்பாணத்தை சேர்ந்த நான்கு ஊடகவியலாளர்களை தமது கருத்துக்களை முன் வைத்தனர். 

அதன் போதே அவ்வாறு தெரிவித்து இருந்தனர், இதில் ஊடாகவியலாளர்களான மயூரப்பிரியன் , லோகதயாளன் ,சாளின் , வினோஜித் ஆகியோர் பங்கு கொண்டிருந்தனர். 

இதில் இவர்கள் 
மேலும் தெரிவிக்கையில் , 

கொல்லப்பட்ட ஊடகவியலாளர் தொடர்பில் விசாரணை தேவை.

கொல்லப்பட்ட , மற்றும்  காணாமல் போன தமிழ் ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக பணியாளர்கள் தொடர்பிலான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

கொல்லப்பட்ட சிங்கள ஊடகவியலாளர்கள் தொடர்பில் விசாரனைகளை முன்னெடுக்கும் போது தமிழ் ஊடகவியலாளர்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க அரசாங்கம் தொடர்ந்து தயக்கம் காட்டியே வருகின்றது. இதுவரை விசாரணைகள் எதுவும் ஆரம்பிக்கப்படவில்லை. 

தமிழ் மக்களின் அடிப்டை பிரச்சனை தீர்க்கப்படாது நல்லிணக்கம் ஏற்படாது.

தமிழ் மக்களின் பிரச்சனைகள் எதுவும்  தீர்க்கப்படாத நிலையில் எவ்வாறு அந்த மக்களின் மனங்களில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும். 

யுத்தம் முடிவடைந்து ஏழு ஆண்டுகள் கடந்த நிலையிலும் , எதுவரை எந்த விதமான காத்திரமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 

யுத்த காலத்தில் , வடக்கு கிழக்கில் கடத்தப்பட்டவர்கள் , காணாமலக்கப்பட்டவர்கள் , காணாமல்  போனோர் , மற்றும் சரணடைந்தவர்கள் தொடர்பில் , யுத்தம் முடிவடைந்து ஏழு ஆண்டுகள் கடந்த பின்னரும் எந்த விதமான விசாரணைகளும் இன்னமும் ஆரம்பிக்கப் படவில்லை. 

தற்போது கூட காணாமல் போனோர் காரியாலயம் அமைப்பது  தொடர்பில் பேச்சு மட்டுமே நடக்கின்றது, எங்கே ? எப்போ ? யார் யார் அதற்கு பொறுப்பாக நியமிக்கப்பட  வேண்டும் என்பது தொடர்பில் இன்னமும் முடிவாகவில்லை பேச்சுகளில் மட்டுமே நிற்கின்றது. இப்பொழுது தான் அவை  தொடர்பில் மக்களிடம் கருத்துக்கள் கேட்கப்படுகின்றன. இவ்வாறான செயற்பாடுகள் காலத்தை இழுத்தடிப்பு செய்வதற்கான செயற்பாடுகளே.

காணாமல் போனோரை கண்டறிவதற்கான ஜனாதிபதி ஆணைக்குழு முன்பாக கடத்தப்பட்டவர்கள்  , காணாமலக்கப்பட்டவர்கள் , காணாமல்  போனோர் , மற்றும் சரணடைந்தவர்கள் தொடர்பில் பல  சாட்சியங்கள் முன் வைக்கப்பட்டு உள்ளன.

அவற்றில் சில எந்த இராணுவ முகாமை சேர்ந்த ,இன்ன  பெயருடைய இராணுவத்தினரால்  என்ன திகதி எத்தனை மணிக்கு கடத்தப்பட்டார் அல்லது கைது செய்து காணாமல் போனார் என்பது தொடர்பில் சாட்சியங்கள் அளிக்கப்பட்டு உள்ளன இவ்வாறு தேவையான தகவல்கள் தரவுகள் கொடுக்கப்பட்ட சாட்சியங்களின் பிரகாரம் கூட விசாரணைகளை மேற்கொள்ள அரசாங்கம் தயார் இல்லை. 

சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்பட வேண்டும்.

சட்டம் ஒழுங்கை காப்பாற்ற வேண்டிய பொலிசார் கூட யாழில் தனியார் காணிகள் தனியார் வீடுகள் கட்டடங்களை அடாத்தாக பிடித்தே பொலிஸ் நிலையம் அமைத்து உள்ளனர். யாழில் அவ்வாறு 80 சத வீதத்திற்கு அதிகமான பொலிஸ் நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. 

கொக்கிளாய் பகுதியில் தனியார் காணிக்குள் அடாத்தாக கட்டப்படும் விகாரையின் கட்டட பணிகளை உடனடியாக நிறுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு இட்டுள்ள போதிலும் , நீதிமன்ற உத்தரவை மீறி இராணுவ பாதுகாப்புடன் விகாரையின் கட்டட பணிகள் தொடர்கின்றன. 

வடக்கிலே இராணுவத்தினரால் கையகபடுத்தப்பட்டுள்ள காணிகளில் விவசாயம் செய்யும் இராணுவம் எங்களது பிரதேச விசவசாயிகளுக்கு போட்டியாக சந்தையில் விவசாய பொருட்களை குறைந்த விலைக்கு விற்பனை செய்கின்றார்கள்.

சாலவ இராணுவ முகாமில் ஏற்பட்ட வெடி விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு கிழமைக்கு நிவாரணம் , இழப்பீடு , வழங்கியவர்கள் , யுத்தம் முடிவடைந்து ஏழு வருடங்கள் கடந்த போதிலும்  யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ தயக்கம் காட்டுகின்றார்கள். 

இவ்வாறான சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது எவ்வாறு நல்லிணக்கத்தை தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுத்த முடியும். 

மக்கள் மத்தியில் தானாகவே நல்லிணக்கம் ஏற்பட வேண்டும்.

எனவே உண்மை கண்டறியப்பட  வேண்டும் , குற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்பட  வேண்டும், பாதிக்கப்பட்டவர்களுக்கு தீர்வு வழங்கப்பட வேண்டும், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் , அடிப்படை பிரச்சனைகள் தீர்க்கப்பட வேண்டும். வடக்கு கிழக்கில் இராணுவ ஆக்கிரமிப்பு அகற்றப்பட வேண்டும். அதன் பின்னரே மக்கள் மத்தியில் நல்லினக்கத்தினை ஏற்படுத்த முடியும். இவைகள் தீர்க்கப்பட்டால் மக்கள் மத்தியில் தானாகவே நல்லிணக்கம் ஏற்படும். 

சர்வதேச விசாரணை தேவை.

சர்வதேச விசாரணைகளின் ஊடாகவே உண்மையை  கண்டறிய முடியும். சாதரணமாக நீதிமன்றம் ஒன்றில் நடைபெறும் வழக்கில் சம்பந்தப்பட்டாவர்கள் குறித்த மன்றின் நீதிபதிக்கு அறிமுகமானவராகவோ அல்லது உறவினர் , நண்பராகவோ , இருப்பாராயின் நீதிபதி அந்த வழக்கு விசாரணையை நடாத்த மாட்டார் வேறு ஒரு நீதிபதியே வழக்கினை நடாத்துவார். 

ஆகவே தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றங்ககள் தொடர்பிலான விசாரணைகளை குற்றம் இழைத்தவர்கள் என குற்றம் சாட்டப்படுபவர்களால் விசாரணைகளை முன்னெடுக்க முடியாது, அதன் ஊடாக நீதி நிலை நாட்டபப்டும் என நம்பவில்லை.

சர்வதேச நீதி விசாரணையே வேண்டும். சர்வதேச நீதி விசாரணையை முன்னெடுக்க முடியாது என  அதற்கு தற்போது நாட்டின் இறைமையை காரணம் காட்டுகின்றார்கள். 

இன்னுமொரு நாட்டின் இராணுவத்தினை நாட்டுக்குள் அமைதிப்படை எனும் பெயரில் இறக்கும் போது இறைமை எங்கே போனது ?.

ஒரு நாட்டில் வாழும் இரு இனங்களுக்கு இடையிலான பிரச்சனைக்காக இன்னுமொரு நாட்டு பிரதமருடன் கைச்சாத்து இடும் போதும் , இன்னமொரு நாட்டின் இராணுவத்தினரை அமைதிப்படை எனும் பெயரில் நாட்டுக்குள் அனுமதிக்கும் போது இறைமை எங்கே போனது ? 

பாதிக்கப்பட்டவர்களே தமக்கு எந்த விதமான விசாரணை தேவை என்பதனை தீர்மானிக்க வேண்டும். எனவே பாதிக்கப்பட்டவர்கள் கோரும் சர்வதேச விசாரணையே தேவை. அதற்கு நாட்டின் அரசியலைப்பில் இடமில்லை எனில் பாராளுமன்றில் அரசியலமைப்பில் மாற்றம் செய்வதன் ஊடாக சர்வதேச விசாரணயை முன்னெடுக்க முடியும். 

ஆகவே தமிழ் மக்களின் பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீர்வுகள் கிடைத்த பின்னரே தமிழ் மக்கள் மத்தியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும். இல்லை எனில் நல்லிணக்கம் என்பது பேச்சளவிலையே இருக்கும். என தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

Funeral Procession of Veer Savarkar In Bombay-1966

  Funeral Procession of Veer Savarkar In Bombay-1966 பாரத நாட்டிற்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த ஒப்பற்ற சுதந்திரப் போராட்ட வீரர்...