Thursday, June 29, 2017

தீப்பெட்டித் தொழிலையே தீயை வைத்து கொளுத்திவிட்டார்கள்

ஒரு காலத்தில் சிறுதொழில்கள் வளர்ந்து கிராமப்புறங்களில் வேலை வாய்ப்பை வழங்கி அன்றாட வாழ்க்கைக்கு உதவியாக இருந்த்து. 1991 இல் இந்தியாவில் நடைமுறைக்கு வந்த உலகமயமாக்கல் கொள்கைகளினால் இன்று அதற்கான அடையாமே இன்றி அழியும் நிலைக்குச் தள்ளப்பட்டு விட்டன என்றே கூறலாம். 1999 இல் மத்திய அரசு இயந்திரத்தால் செய்யக்கூடிய தீப்பெட்டி தொழிலுக்கு அனுமதி கொடுத்ததால் கிராமப்புற, நகரப்புற ஏழை எளியோரின் வாழ்வாதாரத்தை நாசப்படுத்தியது உலகமயமாக்கல் கொள்கை. 
அன்றே இந்த தீப்பெட்டித் தொழிலை நம்பி சுமார் 4 லட்சம் தொழிலாளர்கள் நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஈடுபட்டிருந்தனர். இத்தொழிலில் பெண்களுக்கு வேலைவாய்ப்பு இருந்தது. தமிழகத்தில் பட்டாசுக்கு அடுத்தபடியாக தீப்பெட்டியிலும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். தமிழகம் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன. செமி மெக்கானிச இயந்திரத்தின் வழியாக இயங்கும் 400 தொழிற்கூடங்களில் சுமார் 80,000 க்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்பை வழங்குகின்றது. 

முழுக்க இயந்திரமயத்தால் இயங்கும் 30 தொழிற்சாலைகளில் 4500 பேருக்கு மேல் வேலை செய்கின்றனர். இதன் சார்புத் தொழிலாக உள்ள அனைத்திலும் சேர்த்து சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் பயன் பெறுகின்றனர். தற்போது கையினால் செய்யப்படும் தீப்பெட்டி குடிசைத் தொழிலாக இருக்கிறது. அதில் இயந்திரத்தை கொண்டு உற்பத்தியாகும் தீப்பெட்டி தொழில் வளர்ச்சி அடைந்ததால் தற்போது விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் தான் சில தொழிற்சாலைகள் இயங்குகிறது. 
இதற்கு முன்பு வரை இதற்கு வரி கிடையாது. தற்போது ஜிஎஸ்டி அமலாக்கத்தினால் 5% வரி விதிக்கப்பட்டுள்ளது. 
கொன்று ஒழிக்கப்பட்ட தொழிலுக்கு கூட வரியாம். 


குச்சியில் மருந்தை மட்டும் வைத்து காய வைத்து வெளியே வரும் இயந்திரத்திற்கு (Semi Mechanism) தற்போது 6% வரி, இனி 18% ஆக உயர்த்துப்படுகிறது. இயந்திரமே முழுமையாக செய்து தரும் தீப்பெட்டிக்கு 12% வரி, 5% வாட் வரியாக இருந்தது; தற்போது இதற்கும் 18% வரி. செமி மெக்கானிசத் தொழில் ஈடுபடுவோருக்கும் புல் மெக்கானிசம் என்ற அடிப்படையில் செய்யப்படும் தீப்பெட்டிக்கும் ஒரே மாதிரி வரி என்றால் ‘எப்படி’ என்கின்றனர் செமி உற்பத்தியாளர்கள். 

அதனால் எங்களுக்கு வரியை குறைத்தாக வேண்டும் என்று கோருகின்றனர். செமி மெக்கானிச உற்பத்தியில் 600 தீப்பெட்டிக்கு 120 ரூபாய் உற்பத்தி செலவாகும். இதுவே புல்லி மெக்கானிச உற்பத்தியில் ரூ. 80/- மட்டுமே செலவாகிறது. கூடுதலாக முதலீடு செய்து புல்லி மெக்கானிசம் உற்பத்தியில் ஈடுபட வாய்ப்புகள் இல்லை. எனவே தொழிற்சாலையை மூடுவதை தவிர வேறு வழியில்லை என்று குமுறுகிறார்கள். 

இத்தொழில் தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி, கழுகுமலை, எட்டயபுரம், கயத்தாறு, நெல்லை மாவட்டத்தில் திருவேங்கடம், சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர், கடையநல்லூர், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், திருத்தங்கல், ஏழாயிரம் பண்ணை, விளாம்பட்டி, வேலூர் மாவட்டம் குடியாத்தம், தருமபுரி மாவட்டம் காவிரிப்பட்டணம் போன்ற இடங்களில் இந்த வரியால் தீப்பெட்டித் தொழில் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. சிவகாசியில் பட்டாசு, அச்சுத் தொழிலும் இதனால் முடங்கிவிட்டன. 

#தீப்பெட்டித்_தொழில் 
#தென்மாவட்ட_தொழில்_முடக்கம் 
#சிறுதொழில் 
#match_factory 
#village_industries 
#small_industries
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
29-04-2017

No comments:

Post a Comment

Funeral Procession of Veer Savarkar In Bombay-1966

  Funeral Procession of Veer Savarkar In Bombay-1966 பாரத நாட்டிற்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த ஒப்பற்ற சுதந்திரப் போராட்ட வீரர்...