Thursday, March 22, 2018

நிமிடத்திற்கு ரூ. 2,50,000 செலவு செய்யும் நாடாளுமன்ற அவைகள் சரிவர நடப்பதில்லையே ...

நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடக்க ஒரு நிமிடத்திற்கு ரூ. 2.50 லட்சம் ரூபாய் மக்களின் வரிப்பணம் செலவாகிறது. ஆனால் நாடாளுமன்றமோ ஆக்கப் பூர்வமாக கடந்த 35 ஆண்டுகளாக நடப்பதில்லை. கூச்சல் குழப்பம் ஒத்திவைப்பு என்பது தான் வாடிக்கையாகி விட்டது.
இந்நிலையில் சமீபத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரனாப் முகர்ஜி நாடாளுமன்ற கூட்டத் தொடரின் நாட்கள் அதிகரிக்கப்பட வேண்டுமென்று கூறியிருக்கிறார்.

சற்று பின்னோக்கி பார்த்தால், 1952 முதல் 57 வரை மக்களவை 677 அமர்வுகளை நடத்தியது. மொத்த அமர்வு நேரம் 3,784 மணி. சராசரியாக ஆண்டுக்கு 135 நாட்கள். அந்த ஆண்டுகளில் மாநிலங்களவை 565 அமர்வுகளை நடத்தியது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் தான் நாடாளுமன்ற அமர்வுகள் மிகவும் குறைந்தன. 2006ஆம் ஆண்டு மக்களவை 77 நாட்களே அமர்ந்தது. 2007 இல் 66 நாட்கள் மட்டுமே. அதாவது, 1952 – 57 உடன் ஒப்பிட்டால், அதில் பாதிக்கும் குறைவு. கடைசி பத்து ஆண்டுகளாக நாடாளுமன்றம், சராசரியாக 70 நாட்கள் மட்டுமே அமர்கின்றது. இங்கிலாந்தில் நாடாளுமன்றம் ஆண்டுக்கு 150 நாட்கள் அமர்கின்றது. அமெரிக்காவில் 175 நாட்கள். நம் நாட்டில் நாடாளுமன்ற அமர்வுகள் குறையக் காரணம், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கே நாடாளுமன்றத்தின் மீது மரியாதை குறைந்ததுதான்.

அரசியல் சாசன ஆய்வுக் குழு, ஆண்டுக்கு மக்களவை 120 நாட்களும், மாநிலங்களவை 100 நாட்களும் அமர வேண்டுமென பரிந்துரைத்தது. ஒரு மாநிலங்களவை உறுப்பினர், நாடாளுமன்றம் ஆண்டுக்கு அவசியம் 120 நாட்கள் அமர வேண்டும். அதற்கேற்ப அரசியல் சாசனம் மாற்றப்பட வேண்டும் என்று தனிநபர் மசோதாவே கொண்டு வந்தார். எனவே பிரணாப் முகர்ஜி கூறியுள்ளது சரியே.

என்ன செய்ய? தகுதியில்லாத கிரிமினல்கள் எல்லாம் பலர் மாபெரும் அவையில் புஜப் பலம், பணபலத்தைக் கொண்டு புகுந்துவிட்டனர். பிறகெப்படி நாடாளுமன்ற இரு அவைகளும் கண்ணியத்தோடு, நாட்டின் பிரச்சனைகளை விவாதிக்கும்?

#நாடாளுமன்ற_கூட்டத்தொடர்
#Parliamentary_Sessions
#KSRPostings
#KSRadhakrishnanPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.


21/03/2018

No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...