Friday, February 13, 2015

வியர்வையை விதைத்து வேதனையை அறுவடை செய்யும் விவசாயிகள்.

கரிசல் காட்டுப் பருத்திக்கு விலையில்லை.  










நெல்லைமாவட்டம் சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர் தூத்துக்குடிமாவட்டம் ஒட்டப்பிடாரம், விளாத்திகுளம், கோவில்பட்டி, விருதுநகர் மாவட்டம் சாத்தூர், சிவகாசி, இராஜபாளையம், திருவில்லிபுத்தூர், விருதுநகர் மற்றும் தேனிமாவட்ட எல்லைவரை இந்தவருடம் நல்ல மழைப்பொழிவு இருந்தும் பருத்தி சாகுபடி அப்பகுதிவிவசாயிகளுக்கு திருப்தியாக இருந்தாலும், பருத்திப்பஞ்சுக்கு விலையில்லை.

இன்று காலை பிள்ளையார்நத்தம் கிராமத்திலிருந்து தம்பி பிரபாகர் ராஜகோபால் புகைப்படத்தோடு அனுப்பியிருந்த செய்தி.


  “அண்ணா நம் தென்மாவட்டத்தில் கடந்த பத்து வருடங்களாக மழையில்லை என்பது உங்களுக்கு தெரிந்தது தான். இந்த வருடம் நல்ல மழை. நம்ம ஊரு சுற்று வட்டாரப் பகுதிகளில் முழுவதும் இந்த வருடம் பருத்தி தான் அதிகம் பயிரிட்டு இருக்கிறார்கள். நல்ல விளைச்சல் ஆனால் பாவம் விலை இல்லை அண்ணா நான் தற்போது கலிங்கப்பட்டி யல் எங்க தோட்டத்தை பார்த்து விட்டு வரலாம் என்று அப்படியே நடந்து சென்ற போது விவசாயிகளிடம் பேசினேன்
இந்த வருடம் பருத்தி விளைச்சல் நன்றாக இருக்கும் போல என்று நான் கேட்டேன் அதற்கு அந்த விவசாயிகள் நல்ல விளைச்சல் தான் ஆனால் வழக்கம் போல விலை தான் இல்லை என்று கண்ணீர் மல்க கூறினார்கள் பாடுபடுவது ஒருவன் ஆனால் அனுபவித்து யாரே என்று என் மனதில் நினைத்துக் கொண்டு அந்த விவசாயிகளுக்கு ஆதரவாக இரண்டு வார்த்தைகள் பேசி விட்டு வந்தேன் நீங்க இதுபற்றி ஒரு பதிவு செய்தால் நல்லது அண்ணா நம் தென்மாவட்டத்தை காக்க நாம் தான் அண்ணா முயற்சி செய்ய வேண்டும்”.




  *
என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில்?
ஏன் கையை ஏந்தவேண்டும் வெளிநாட்டில்!!
ஒழுங்காய் பாடுபடு வயல்காட்டில்!
உயரும் உன் மதிப்பு அயல்நாட்டில்! -என்று பாட்டிலும் ஏட்டிலும் தான் இருக்கிறது போலும்.

வானம் பார்த்த பூமியில் விதைகளை வயல்களில் இறைத்துவிட்டு, அவை வளர்ந்து, பின் வாடுவதைப் பார்த்து தானும் வாடும் உழவர்கள் நாள்தோறும் வானம் பார்க்கத் தொடங்குகின்றனர். பருவமழைப் பொய்க்காமல் எப்போதாவது பூமியை நனைக்கிறது. ஆனாலும், வருடம் முழுவதும் பாடுபட்டு விளைவிக்கும் விவசாயிகள் நிறைவடைகிறார்களா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். கரும்புக்கு  விலையில்லை. நெல்லுக்கு விலையில்லை. மிளகாய்வற்றலுக்கு விலையில்லை. பருத்தி விவசாயிகள் மழையிருந்தும், அமோக விளைச்சலுக்குப் பிறகும் விலையில்லாமல் படாதபாடு படுகின்றனர்..


இதேபோல, 1994ல் விளைந்த பருத்திக்கு விலையில்லை. கோவில்பட்டி பேரூந்துநிலையம் எதிரே உள்ள காசி - கன்னியாகுமரி நெடுஞ்சாலையில் விளைந்த பருத்திகளை எல்லாம் கொட்டி விவசாயிகள் பங்கேற்ற மாபெரும் மறியல்போராட்டம்  என் தலைமையில் நடைபெற்றது. அதன்பின் எட்டையபுரம் பேரூந்து எதிரே பருத்தியைக் கொட்டி, பருத்திக்கு இலாபமான விலையும், எட்டையபுரத்தினை தலைமையாக்க் கொண்ட “தாலுகா” என அறிவிக்கவேண்டும் என்ற இரண்டுகோரிக்கைகளும் வைத்து என் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. முதன்முதலாக எட்டையபுரத்தினை தாலுகாவாக அறிவிக்க கோரிக்கை வைத்ததும் அடியேன்தான்.



நாட்டின் முதுகெலும்பு விவசாயம் என்று சொல்லிக்கொண்டு முதுகெலும்பை முறிக்கின்ற நிலைதான் இன்றைக்கு உள்ளது. ஒரு அமெரிக்க பருத்தி விவசாயியால் ஒரு ஏக்கருக்கு 230அமெரிக்க டாலர்களை அரசிடமிருந்து மானியமாகப் பெற முடியும், ஆனால் மூன்றாம் உலக நாடுகளிலும் உள்ள விவசாயிகள் இது இல்லாமலேதான் விவசாயம் செய்கின்றனர்.

விலைகள் வீழ்ச்சியடையும்போது, அதிக அளவில் மானியம் பெற்ற அமெரிக்க விவசாயி தனது உற்பத்தியைக் குறைத்துக் கொள்ளும்படி நெருக்கடிக்கு ஆளாவதில்லை, இதனால் பருத்தி விலைகள் குறைவதில் பிரச்சினையில்லை. உலக அளவில் இப்படியான நிலைகள் இருக்கும் போது, நமக்கு மட்டும் இந்த சீரழிவா?


கி.ரா குறிப்பிட்டவாறு, “விவசாயிகள் கிணறுவெட்டுவதற்காக அரசிடம் கடன் வாங்கி, (இலஞ்சம் போக எஞ்சியதை) அதனால் ஒன்றுக்கும் பயனில்லாமல் போக, சொந்த தோட்டத்தையும், கடனில்கட்டிய கிணற்றையும் விற்று விவசாயி கூலியாக  மாறும் நிலைதான் இன்றுள்ளது.

 “உழதவன் கணக்குப் பார்த்தால் உழக்குக்கூட மிஞ்சாது” என்பதற்கேற்ப விவசாய உற்பத்திப் பொருட்களுக்கு இலாபகரமான விலையில்லாமல் போய், கடனுக்கு வட்டிகட்ட முடியாமல் நாடுமுடுவதும் விவசாயிகளின் தற்கொலைகள் தான் நிகழ்கின்றன.


விவசாயிகள் வியர்வையை விதைத்து வேதனையை அறுவடை செய்கிறார்கள். 

-கே.எஸ். இராதாகிருஷ்ணன்.

No comments:

Post a Comment

*ஈழவேந்தன் Eelaventhan

#*ஈழவேந்தன் மறைவு*.. ———————————— என்னுடன் 1985 - 86 பிப் வரை தங்கி இருந்தார். சொந்த ஊர்  ஈழம் பருத்திதுறை. இலங்கை முன்னாள் நாடாளுமன்ற உறுப்...