Friday, February 20, 2015

குறையொன்றும் இல்லை எட்டப்பா!

இன்றைய (20-02-2015)  தினமணி நாளிதழில்,
தலையங்க பக்கத்தில்  “குறையொன்றுமில்லை எட்டப்பா” என்ற தலைப்பில் என் கட்டுரை வெளியாகியுள்ளது. .


****

குறையொன்றும் இல்லை எட்டப்பா! 
______________________________________________________________



ஷேக்ஸ்பியர் நாடகத்தில் ஜீலியஸ் சீசர் “யூ டூ ப்ரூட்டஸ்” என்றுசொல்லும் வாசகம்போல எட்டப்பர் பெயர் சொன்னாலே காட்டிக் கொடுத்தவர் என்ற பழிச்சொல்லாக மாறிவிட்டது. ஆனால் வரலாற்று ஆய்வாளர்கள் சிலர் இதனை மறுக்கிறார்கள். எட்டப்பர் ஆங்கிலேயர்களோடு நெருக்கமாக இருந்தது உண்மை. வீரபாண்டிய கட்டபொம்மன் என்ற வீரப்போராளிக்கு எதிராக காட்டிக் கொடுத்தார் என்றும், சூழ்ச்சிகள் செய்தார் என்றும்  வலம்வரும் செய்திகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டியவை. இது ஒருபக்கமிருக்க, எட்டையபுரத்தினை ஆண்ட எட்டப்ப வம்சத்தினர் கலை இலக்கியத்திற்கும், மக்கள்நலத்திற்கும் ஆற்றிய பணிகளை மறக்கமுடியாது. எட்டப்ப வம்சத்தைப் பற்றிய ஒரு பதிவு.



கி.பி.856ம் ஆண்டு சந்திரகிரி பகுதியினை ஆட்சி செய்த மன்னர்கள் பரம்பரையில் பிறந்தவர் நல்லமநாயக்கர். அவர் ஒருசமயம் விஜயநகரம் செல்லும்வழியில் சோமன் என்ற மல்யுத்தவீரன் பாதையை மறைத்துக்கொண்டு, தன்னுடன் யுத்தம்புரிய வேண்டுமென்று நிர்ப்பந்தித்தான். இரண்டுபேருக்கும் நடந்த போரின் இறுதியில் நல்லமநாயக்கர் சோமனை வென்றுவிடுகிறார்.

உயிர்போகும் தருவாயில் சோமன் தனது எட்டு தம்பிகளும் ஆதரவில்லாமல் போய்விடுவார்களே என்று வருந்தினான். “கவலை வேண்டாம் உன்தம்பியர் எட்டுபேரும் இனி என்பிள்ளைகள்” என நல்லமநாயக்கர் வாக்களித்தார்.
எட்டுப் பிள்ளைகளுக்கு தந்தை ஆகியதால் எட்டப்பர் என்றும், விஜயநகர அரசர் தன் உயிர்காத்தமைக்கு “அய்யன்” என்ற பட்டத்தை வழங்கியதால்  “எட்டையன்” என்றும் அழைக்கப்பட்டார்.

இளம்புவனம் பகுதியை எட்டையபுரம் என்று பெயர்சூட்டி தங்கள் தலைநகராக மாற்றிக் கொண்டு எட்டப்பநாயக்கர் வம்சாவழியினர் ஆட்சிபுரியத் துவங்கினார்.

ஆங்கிலேயர்கள் வருகைக்குப்பின், மூன்றாம் மைசூர் போரில் ஏற்பட்ட சீரங்கப்பட்டிண உடன்படிக்கை மூலம் தமிழகத்தின் தெற்குப் பகுதியில் வரிவசூலிக்கும் உரிமையினை கம்பெனியினர் பெற்றுக்கொண்டனர். நிலஅளைவையின் போது பாஞ்சாலங்குறிச்சிக்குச் சொந்தமான 3ஊர்களை எட்டையபுரத்திற்கு ஆங்கிலேயர்கள் வழங்கிவிட்டனர். இந்நிகழ்வு பாஞ்சாலங்குறிச்சிக்கும் எட்டையபுரத்திற்கும் இடையே பிரச்சனைக்குக் காரணமாக அமைந்தது.

தமிழ்நாட்டில் இருந்த 72பாளையங்களில் 30 பாளையங்கள் நெல்லைச் சீமையில்தான் இருந்து. அவற்றில் எட்டையபுரம் ஜமீனே அளவில் பெரியது. எட்டையபுரம் ஜமீன் சுமார் 500கிராமங்கள் அடங்கிய சமஸ்தானம். மூன்றாம் மைசூர்ப்போர் நடைபெற்றபோது, வெங்கடேஸ்வர எட்டப்பரின் மரணத்திற்குப்பின் வாரிசு இல்லாத நிலையில் வாரிசுரிமைப்படி, குருமலைதுரை ஜமீன் ஆட்சிக்குவந்தார்.

பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரர் எட்டையபுரத்தின் வெங்கடேஸ்வரபுரம் கோட்டைமீது படையெடுத்தார். இதனைத் தடுக்க எட்டையபுர தளபதிகளான ராமநாதபிள்ளை, மாணிக்கவாசகம் பிள்ளை ஆகிய இருவரும் செல்ல, போர்க்களத்தில் ராமநாதபிள்ளை இறந்துவிட்டார். பாஞ்சாலங்குறிச்சிக்காரர்கள் ஆதனூர் கோட்டையினைக் கைப்பற்றிக் கொண்டார்கள்.

மன்னர் குருமலைத்துரை 1783ல் இயற்கைஎய்த அவருடைய மூன்றாம் வம்சாவழிவந்த முத்துஜெகவீரராம குமார எட்டப்பநாயக்கர் ஆட்சிப் பொறுப்பேற்று தன் படைகளைப் பெருக்கினார். கம்பெனி ஆட்சியாளர்களுக்கும் கட்டபொம்மனுக்குமான வரிபாக்கி பிரச்சனையில் பகை வளர்ந்தது. நான்காம் மைசூர்போரில் திப்புசுதான் கொல்லப்பட அதைத்தொடர்ந்து வெள்ளையர்களை எதிர்த்த பாளையக்காரர்கள் அடக்கப்பட்டனர்.

1799 செப்டம்பர் 4ம் நாள்  பாஞ்சாலங்குறிச்சி  கோட்டை வெள்ளையர்களால் முற்றுகையிடப்பட கட்டபொம்மன் தன்னுடைய படைவீரர்களோடு கோலார்பட்டி வந்து பின், புதுக்கோட்டைக்குச் சென்று காடுகளில் மறைந்திருக்கிறார். அங்கு தொண்டைமான் உதவியால் கைதுசெய்யப்பட்டு 1799ம் ஆண்டு அக்டோபர் 16ம் நாள் கயத்தாறு சாலையிலிருந்த புளியமரத்தில்  தூக்கிலிடப்படுகிறார். தமிழக வரலாற்றில் முக்கிய நிகழ்வாக வீரபாண்டியக் கட்டபொம்மனின் வரலாறு அமைகின்றது. கீர்த்திகொண்ட வீரபாண்டிய கட்டபொம்மனுடைய வீரதீரம் இன்றைக்கும் போராளிகளுக்கான பாலபாடம்.

பாஞ்சாலங்குறிச்சிப் போர்களுக்குப்பின், அதன் 6பகுதிகள் எட்டயபுரத்தோடு சேர்க்கப்பட்டன. முத்துஜெகவீரகுமார எட்டப்பர் 1783முதல் 1816வரை  ஆட்சிசெய்தார். நாகலாபுரம், குமாரட்டையாபுரம், கழுகுமலை, குளத்துவாய்பட்டி, எட்டையபுரம், வேடநத்தம், புதியம்புத்தூர் ஆகிய ஊர்களில் கோயில்கள், குடிதண்ணீர் தெப்பங்கள், அன்னச் சத்திரங்கள் கட்டியெழுப்பினார்.

முத்துஜெகவீரகுமார எட்டப்பரின் மூத்த புதல்வர் ஜெகவீரராம குமார எட்டப்ப நாயக்கர் 1839முதல் 1852வரை ஆட்சிசெய்தார். அவருக்குப் பின், 1852  ஆட்சிக்குவந்த வெங்கடேஸ்வர எட்டப்பர் எட்டையபுரம் நடுவப்பட்டிக்குச் சாலையும், கழுகுமலைகோயிலில் பெரிய மண்டபமும், எட்டையபுரத்திலிருந்த மண்கோட்டைகளை இடித்துவிட்டு செங்கலும் சுண்ணாம்பும் கொண்டு சண்முகவிலாசம் என்ற புதியகோட்டையும்  கட்டினார். நடுவப்பட்டி, புதுப்பட்டி குளங்களும் தூர்வாரப்பட்டது.

வெங்கடேஸ்வர எட்டப்பநாயக்கருக்குப் பின், 1868ம் ஆண்டு ஜமீனாக ஆட்சிப் பொறுப்பேற்றவர் குமார எட்டப்பர். 1877-78 காலங்களில் எட்டையபுரத்தில் கடும்பஞ்சம் ஏற்பட்டது. திருவாங்கூரில் செயல்பட்டுவந்த “ஊட்டுப்பாறை” என்னும் உணவுவிடுதிகளைப் பார்த்து, எட்டையபுரத்திலும் 64உணவுவிடுதிகள் அமைத்து மக்களுக்கு உணவும், கால்நடைகளுக்குத் தீவனங்களும் இனாமாக வழங்கினார். திண்ணைப் பள்ளிக் கூடங்களைக் கட்டியெழுப்பினார். தாமிரபரணிக்குக் குறுக்கே திருவைகுண்டம் பாலம்கட்ட 3500ரூபாய் நன்கொடையாக அளித்தார்.

எட்டையபுரம் கடிகை முத்துப்புலவர் மரணதருவாயில் அவரைக் காணவந்த எட்டப்பர் புலவரின் மகளிடம், “பஞ்சில் பாலைப்பிழிந்து தந்தையின் வாயில் ஊற்று” என்று சொல்ல, பாலைச் சுவைத்த புலவர் முகம் மாறினார். “அப்பா! பாலும் கசக்கிறதோ” என்று மகள் கேட்க, புலவரோ அந்நிலையிலும் “பாலும் கசக்கவில்லை; பால் பிழிந்த துணியும் கசக்க (துவைக்க) வில்லை” என்று தமிழில் விளையாடினார். தவித்த தன் மகளிடம் “இந்த அப்பன் போனால் என்ன அம்மா உனக்கு எட்டப்பன் இருக்கிறான்” என்று ஆறுதல்மொழி கூறினார். எட்டப்பர் இருக்க என்ன கவலை என்பது மக்களின் வார்த்தையாக இருந்தது.

சுப்புராம தீட்சிதர் மகாபாரதத்தை மொழிப்பெயர்த்தது. கடிகை நமச்சிவாய புலவர் “வில்லிபாரதம்” என்ற நாட்டிய நாடகத்தில் உள்ள பாடல்களுக்கு வர்ணமெட்டுக்களையும், முத்தாயிரம் ஸ்வரங்களையும் ஏற்படுத்தியது. சுவாமி தீட்சிதர் தமிழில் “வம்சமணிதீபிகை” என்ற நூலை இயற்றியது, அனைத்தும் வெங்கடேஸ்வர எட்டப்பரின் சமஸ்தானத்தில்தான்.

1890ல் வெஙகடேஸ்வர எட்டப்பரின் மறைவுக்குப் பின் அவருடைய மகன் 12வயது சிறுவனாக இருந்ததால், 1890முதல் 1899வரை ஆங்கிலேய சர்காரின் கையில் ஆட்சிப் பொறுப்பு இருந்தது. 1899ல் தன் 21ம் வயதில் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற மைனர் ராஜா, எட்டையபுரத்தில் நவீனமுறையில் 64 விவசாயப்பண்ணைகள் அமைத்து வேளாண்மையைப் பெருக்கினார். 1905ம் ஆண்டு கோவில்பட்டியில் கால்நடைக் கண்காட்சி நடத்தினார். பண்ணை விவசாயத்தினால் விளைபொருட்கள் களஞ்சியத்தில் சேர்க்கப்பட்டு தானியங்களே மக்களுக்கு கூலியாக வழங்கப்பட்டது.

எட்டையபுரம் 13 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு பேஸ்கார் என்ற ரெவென்யூ இன்ஸ்பெக்டர்கள் நியமிக்கப்பட்டார்கள். வெங்குஐயர் எட்டையபுரத்தின் முதல்தாசில்தாராக பொறுப்பேற்றார். ஆசிரியராகவும், வளர்ப்புத் தந்தையாகவும் இருந்த ராவ்பகதூர் ஜெகந்நாத செட்டியாரையே திவான் பொறுப்பேற்க வைத்து நிர்வாக ஒழுங்குமுறைகளைக் கவனித்தார்.

கிராம கணக்குவழக்குகள் ஜாமபந்தி முறையில் சரிபார்க்கப்பட்டது. விளாத்திகுளம் சாலை சுமார் 12மைல்தூரம் அமைக்கப்பட்டது. மருத்துவமனை, உயர்நிலைப்பள்ளிகள், பெண்களுக்குத் தனிப்பள்ளிகள், மாணவர்களுக்கு இலவச உணவு, உடை குழந்தைகளுக்கு பால் என்று கல்விக்கும் பசிக்கும் வகை செய்தார் எட்டப்பநாயக்கர். அதனாலோ காமராஜர் முதல்வராக இருந்தபொழுது பள்ளிமாணவர்களுக்கு இலவச மதிய உணவுத் திட்டத்தினை எட்டையபுரத்தில் தொடங்கிவைத்தார்.

தமிழ், ஆங்கிலம், சமற்கிருதம் நூல்கள் அமைந்த நூல் நிலையம் அமைத்தார்.  “இளசை வித்தியாவிலாசினி” என்ற அச்சுக்கூடம் நிறுவப்பட்டு முதன்முதலில் ஆந்திராவிலிருந்து தெலுங்கு அச்சு எழுத்துக்களைக் கொண்டுவந்து “சங்கீத சம்பிதாய பிரதர்சினி” என்ற இசைநூல், மேலும் பலநூல்கள் அச்சாக்கப்பட்டது.

எட்டையபுரம் ஜமீன்தார் தானே “ஞானவல்லி”, “சுத்தசேனன்” என்ற இரண்டு நாடகங்களை எழுதினார். ஜமீனின் ஆங்கிலப் பேராசிரியர் அதனை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்தார். நாடகஅரங்குகள் கட்டிக்கொடுத்து நடிகர்களை ஆதரித்தார். வந்தேமாதரம் பாடலை அரங்கில் ஒலிக்கச் செய்தார். வாழையிலை மீதினில் மண்பானையினைக் கவிழ்த்துவைத்து அதன்மீது சித்திர நடனமாடிய கொல்லபட்டு பொன்னம்மாளைப் பாராட்டி பரிசளித்தார்.

சீறாப்புராணம் எழுதிய உமறுப்புலவர், மகாகவி சுப்பிரமணிய பாரதி, நாவலர் சோமசுந்தர பாரதி, சங்கீத வரலாற்றில் முத்திரை பதித்த முத்துசாமி தீட்சதர், பாலுசாமி தீட்சதர், நாடக உலகில் மும்மூர்த்திகளில் ஒருவரான் காசி விஸ்வநாதப் பாண்டியன் ஆகியோர் எட்டையபுரம் ஜமீன்களால் ஆதரிக்கப்பட்டவர்கள். இசைப்பள்ளு என்ற நாடோடி இலக்கியம், ராமநூத்து மணிமுத்துப் புலவர் இயற்றிய வைணவ பாசுரங்கள் எட்டையபுர சமஸ்தானத்தில் வழங்கப்பட்டவையே. இசைஞானி விளாத்திகுளம் சாமிகளை சீராட்டவேண்டுமென்று நினைத்த எட்டப்பருக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லையென்று வருத்தமும் கொண்டிருந்தார்.

ஒரே காலகட்டத்தில், பாரதியார் மற்றும் வ.உ.சிதம்பரனாருடைய தந்தையார்கள் எட்டையபுரம் சமஸ்தானத்தில் பணியிலிருந்தவர்கள். இதன் காரணமாகவே இவர்களுடைய இரண்டு குடும்பங்களுக்குமிடையே நெருக்கம் ஏற்பட்டது. பாரதியாரின் தந்தையார் எட்டையபுரம் அருகிலிருந்த பிதப்புரத்தில் அப்போதே பருத்தி அரவைஆலை அமைத்து நஷ்டப்பட்டிருந்தார். அவரை ஆறுதல்படுத்தியவரும் எட்டப்பரே.

நெல்மரக்கால் அளக்கும் போது, எட்டையபுரம் மக்கள் ஒன்று,இரண்டு, மூன்று என எண்ணும் போது ஆறு ஏழுக்குப் பிறகு, மகராஜா, என்று எண்ணுவார்களாம். எட்டாம் எண் மகாராஜாவின் பெயர் என்பதால்  தங்கள் அரசனை பெயர்சொல்லி அழைக்கக் கூடாதென்று இப்படி எண்ணி இருக்கிறார்கள். பதினெட்டுக்கு பத்து மகராஜா என்று எண்வரிசை நீளும். இம்மண்ணின் மக்களுக்கிருந்த இராஜ விசுவாசத்திற்கு இது சின்னசான்று.

1949ல் ம.பொ.சி கட்டபொம்மனின் வரலாற்றை எழுதினார். அந்த நூலில் இருக்கும் சிலகுறிப்புகளுக்கு எட்டயபுரம் அரண்மனை மறுப்பு தெரிவித்தது. இந்நூலையொட்டி 1959ல் பி.ஆர்.பந்தலு இயக்கத்தில் வெளியான “வீரபாண்டியக் கட்டபொம்மன்” திரைப்படத்தில்,  “காட்டிக் கொடுத்தான் எட்டப்பன்” என்ற வசனம் இடம்பெற, அது பொதுமக்கள் மனத்தில் பசுமரத்தாணிபோல் நஞ்சாய் பதிந்துவிட்டது.

வீரபாண்டிய கட்டபொம்மனுக்கும் எட்டப்பருக்கும் பகை இருந்தது ஒருபக்கமிருருந்தாலும், எட்டையபுரம் வீரத்திற்கும் அதிற்விற்குமான மண். எட்டப்பநாயக்க வம்சத்தினர் ஆற்றின அரும்பணிகளின், நற்கொடைகளின் மறுபக்கத்தைத் தான் நாம் பார்க்கின்றோம்.

1994காலகட்டத்தில் எட்டையபுரத்தினை தலைமையாகக் கொண்டு  தாலுகாவாக அறிவிக்கவேண்டுமென்று முதன்முதலில் உண்ணாவிரதப் போராட்டங்கள் என் தலைமையில்  நடந்தது. எட்டையபுரம் அடங்கிய கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் இரண்டுமுறை போட்டியிட்டேன்.

அப்போது நான்கொடுத்த வாக்குறுதி  “எட்டப்பரும் முண்டாசுக்கவியும் பிறந்த மண்ணில் நாட்டுப்புற கலைகளுக்கும் இசைக்கும் ஒரு கலாசாலையை உருவாக்க பாடுபடுவேன்” என்றேன். ஏனோ பெருநகரமாக வளர்ந்திருக்கவேண்டிய எட்டையபுரம் வளர்ச்சியடையவில்லையே என்ற கவலை எங்கள்போன்ற கரிசல் மைந்தர்களுக்கு எப்போதும் உண்டு.



 “ஆடு அழுக மாடு அழுக அஞ்சு லட்சம் ஜனம் அழுக பட்டத்து யானையெல்லாம் பாதையிலே நின்றழுக” என்னும் நாட்டுப்புறப்பாடல் எட்டையபுரம் மன்னரின் மரணத்தை நெகிழ்ச்சியோடு விவரிக்கின்றது.

குறையொன்றுமில்லை எட்டப்பா.....

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.

1 comment:

  1. குறையொன்றும் இல்லை எட்டப்பா! - radhakrishnan ks = அனைவரும் படிக்க வேண்டிய பதிவு. நன்றி சார் திரு radhakrishnan ks - நன்றி திரு கார்த்திக் புகழேந்தி - எனது பக்கத்தில் பகிர்கிறேன்.

    ReplyDelete

*ஈழவேந்தன் Eelaventhan

#*ஈழவேந்தன் மறைவு*.. ———————————— என்னுடன் 1985 - 86 பிப் வரை தங்கி இருந்தார். சொந்த ஊர்  ஈழம் பருத்திதுறை. இலங்கை முன்னாள் நாடாளுமன்ற உறுப்...