Friday, September 4, 2015

ஈழத்தில் சர்வதேச விசாரனை நிலை என்ன?


 
            ஈழத்தில் நடந்த இன அழிப்பு குறித்து சர்வதேச விசாரனை குறித்து பல வினாக்கள் தற்போது எழுந்துள்ளன. அவை;

1.எதிர் கட்சி தலைவர் சம்பந்தன் சர்வதேச விசாரனை குறித்து அறிக்கை தயார் ஆகிவிட்டது என்று கூறுகிறார், அப்படியானால் எப்போது விசாரனை நடந்தது?

2. சர்வதேச நம்பகமான, சுதந்திரமான புலனாய்வு என்ற முதல் கட்டம்  முடிந்ததா?

3. இராண்டாம் கட்டமாக, அமெரிக்காவின் கருத்துப் படி விசாரனை இலங்கை அரசு உள்ளக பொறி முறையில் விசாரனை நடந்தினால் நியாமாக இருக்குமா? ஏற்கனேவே எல்.எல்.ஆர்.சி அறிக்கை நடை முறைக்கே  வரவில்லையே? இலங்கை அரசு நடத்துகின்ற விசாரனை அனைத்தும் பம்மாத்து வேலையாக இருக்கு பொழுது அதை உலக சமுதாயம் எப்படி ஏற்று கொள்ளும்?

4. அமெரிக்கா உள்ளக விசாரனைக்கு ஏன் திடீரென்று ஆதரிக்கிறது? நான்கு முறை ஐ.நா மனித உரிமை ஆனையத்தில் சர்வதேச நம்பகமான் சுதந்திரமான விசாரனை வேண்டுமென்று தீர்மானத்தை முன்மொழிந்து அமெரிக்காவின் மனமாற்றதிற்கு காரணம் என்ன?

5. ஐ.நா, இலங்கையிடம் ஒப்படைக்க போகும் அறிக்கை புலனாய்வு அறிக்கையா? விசாரனை அறிக்கையா?
6. சர்வதேச சுதந்திரமான புலானாய்வு செய்துப் பின் தான் தான் சர்வதேச சுதந்திரமான நம்பகமான விசாரானை நடத்த வேண்டும். அது தான் முறை. இந்த முறை கடைப்பிடிக்க  பட்டதா? ஐ.நா இதுவரை இது குறித்து தெளிவான விளக்கம் தரவில்லையே ஏன்?

7. உள்ளக விசாரனை இலங்கையில் நடத்தினால் சரியாக, நியாமாக இருக்குமா?

8. நவின் பிள்ளை இலங்கைக்கு சென்று விசாரனை நடத்தியது குறித்து முடிவுகள் என்ன?

9. வடக்கு மாகான முதல்வர் விக்னேஷ்வரன் சர்வதேச பொறி முறை என்ற விசாரனை வேண்டும் என்கிறார். ஆனால் அவர் கட்சியை சார்ந்த சம்பந்தன் ஏன் ஆதரிக்கவில்லை?
இப்படியான பல முடிச்சுக்கள் இப்பிரச்சனையால் உள்ளன. இதற்கு பதில் என்ன?

10. “சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் எடுத்த கணக்கின்படி,11 ஆயிரம் பேர் காணாமல் போயிருக்கிறார்கள். போரின்போது  வன்னியிலிருந்து வெளியேற்றப்பட்ட ஒரு லட்சத்து 47 ஆயிரம்பேர் என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை. இலங்கையில் இப்போது பெண்களை குடும்பத் தலைவராக கொண்ட 89 ஆயிரம் குடும்பங்கள் இருக்கின்றன.” இதை குறித்து இலங்கை அரசு என்ன மேல் நடவடிக்கை எடுக்க போகிறது ?

இலங்கையில் நடைபெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் குறித்து சர்வதேச உதவியுடன் விசாரணை நடத்தப்பட வேண்டுமென சர்வதேச அழுத்தக் குழுவான இன்டர் நேஷனல் க்ரைசிஸ் க்ரூப்பின் இலங்கைத் திட்ட இயக்குனர் ஆலன் கீனன் கூறியிருக்கிறார்.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கவுன்சிலில் இலங்கையுடன் இணைந்து தீர்மானத்தைக் கொண்டுவரப்போவதாக அமெரிக்கா கூறியிருப்பது குறித்துப் பேசிய ஆலன், போர்க்குற்றம் குறித்த எந்த ஒரு முயற்சியிலும் சாட்சிகளைப் பாதுகாப்பது உள்ளிட்ட விஷயங்களில் சர்வதேச உதவி தேவை என்று ஆலன் குறிப்பிட்டார்.

"குற்றங்களுக்கு பொறுப்பானவர்களைக் கண்டுபிடிக்கும் எந்த ஒரு முயற்சியிலும் நம்பகத்தன்மை இருக்க வேண்டுமானல், சாட்சிகளின் பாதுகாப்பு, புலனாய்வு, விசாரணை, ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க அளவில் சர்வதேச தலையீடு தேவை என்று நினைக்கிறோம்" என ஆலன் தெரிவித்தார்.


இலங்கையில் காவல்துறை, நீதித்துறை போன்றவற்றில் திறமையானவர்கள் இருந்தாலும் கடந்த 30 - 40 ஆண்டுகளில் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டவர்கள் வெகுகுறைவாகவே தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும் ஆலன் சுட்டிக்காட்டினார்.

"கடந்த 30-40 ஆண்டுகளில் மனித உரிமை மீறலுக்காகத் தண்டிக்கப்பட்டவர்களை நீங்கள் விரல்விட்டு எண்ணிவிடலாம். பெரும்பாலும் கீழ்நிலை வீரர்களும் காவல்துறையினருமே தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு ஆணையிட்டவர்கள் தண்டிக்கப்படுவதில்லை" என்கிறார் ஆலன்.


அதனால், சர்வதேச உதவியின்றி போர்க் குற்றம்போன்ற அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்களை விசாரிப்பதற்கு இலங்கையால் முடியுமா என்ற சந்தேகம் இருப்பதாகவும் அவர் கூறினார்.
இலங்கையில் நிரந்தத் தீர்வு வேண்டுமெனில், மாகாண சபைகளை வலுப்படுத்தத் துவங்க வேண்டுமென ஆலன் குறிப்பிட்டார்.

"வடக்கு, கிழக்கு மாகாணம் போன்றவற்றுக்கு போதுமான வள ஆதாரங்களை அளிக்க வேண்டும். மேற்கு தெற்கு மாகாண சபைகள் கூடுதல் அதிகாரங்களை விரும்பினால் அவற்றுக்கும் அளிக்க வேண்டும். தமிழ் தேசிய கூட்டமைப்பு, குறிப்பாக வட மாகாண சபை முதல்வர் அந்த அமைப்பை செயல்பட வைக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறார். பணம், பயிற்சி போன்றவற்றை அளிப்பதன் மூலம் மத்திய அரசு அதனை ஆதரிக்க வேண்டும்" என்கிறார் ஆலன்.

தமிழ் மக்கள் தற்போது சந்திக்கும் பிரச்சனைகளுக்கு முதலில் தீர்வளிப்பதன் மூலம் அவர்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்த முடியும் என ஆலன் கூறினார்.

வடக்கிலும் கிழக்கிலும் தமிழ் மக்கள் சந்திக்கும் முக்கியமான பிரச்சனைகள், குறிப்பாக, காணாமல் போனவர்கள் குறித்த பிரச்சனைகள், ராணுவம் தன் பிடியில் வைத்திருக்கும் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களுக்கு மக்களைத் திரும்பச் செய்வது, ராணுவத் தலையீடின்றி சிவில் நிர்வாகம் நடக்க உதவுவது, பாதுகாப்பு அமைப்புகளின் தீவிர கண்காணிப்பைக் குறைப்பது போன்றவற்றின் மூலமாக மக்களிடம் நம்பிக்கையை உருவாக்க முடியும் என்கிறார் ஆலன்.

இலங்கை, வலுவான வளமான நாடாக இருக்க வேண்டுமானால், எல்லா சமூகங்களுக்கிடையிலும் ஒருங்கிணைப்பை ஏற்படுத்த வேண்டும் என ஆலன் குறிப்பிட்டார்.

இலங்கையில் மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள் இருந்தாலும் ராஜபக்ஷே ஆட்சிக்காலத்தில் அவர்களிடம் பெரும் அச்சம் நிலவியதாகவும் ஆனால் நிலைமை இப்போது மாறியிருப்பதாகவும் ஆலன் கூறியிருக்கிறார்.

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
04-09-2015.

No comments:

Post a Comment

Funeral Procession of Veer Savarkar In Bombay-1966

  Funeral Procession of Veer Savarkar In Bombay-1966 பாரத நாட்டிற்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த ஒப்பற்ற சுதந்திரப் போராட்ட வீரர்...