Sunday, June 12, 2016

ஈழப் பிரச்சினையில் என்னுடைய நீதிமன்ற சாட்சியம்

பாண்டிபஜார் சம்பவமும், இராஜா அண்ணாமலை மன்ற ஈழத்தில் நடப்பது என்ன என்ற நிகழ்வும்

கடந்த 21.10.2008 அன்று சென்னை, பாரிமுனையில் உள்ள இராஜா அண்ணாமலை மன்றத்தில் ஈழத்தில் நடப்பது என்ன என்ற தலைப்பில் அரங்கக் கூட்டம் ஏற்பாடு செய்தேன். இதெல்லாம் 2009 முள்ளி வாய்க்கால் துயரத்துக்கு முன்பு. அந்த நிகழ்ச்சியில் வைகோ சிறப்புரை ஆற்றினார். முன்னாள் மத்திய அமைச்சர், திமுக உயர்மட்ட செயல்திட்டக் குழு உறுப்பினர் கோவை மு. கண்ணப்பன், மற்ற ஈழ ஆதரவாளர்கள் எல்லாம் கலந்துகொண்டனர். அரங்கம் நிரம்பி எழுச்சியான கூட்டமாக இருந்தது.

இந்த நிகழ்ச்சிக்கு முன்பு இலங்கையில் 2007-2008ல் நடந்த துயரக் காட்சிகளும் திரையிடப்பட்டது. அதற்குப் பின் நிகழ்ச்சி துவங்கியது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற வைகோவும், மு. கண்ணப்பனும் பேசிய பேச்சுகள் சட்டவிரோதமானவை என்று கைது செய்து புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். வழக்கும் பிரிவுகள் 124 இந்திய குற்றவியல் சட்டம் மற்றும் தேசவிரோத நடவடிக்கைகள் சட்டம் 1967ன் படியும் இவர்களை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். ஆனால் இந்த வழக்கு குறித்து திடீரென என்னை சாட்சி சொல்ல வேண்டும் என்று மூன்றாவது அடிஷ்னல் சிட்டி சிவில் கோர்ட்டில் இருந்து சம்மன்-ஐ க்யூ பிரான்ச் குற்றப் புலனாய்வுத் துறை எனக்கு நேரடியாக வந்து கொடுத்துவிட்டு சென்றனர்.

சம்பவம் 2008, வழக்கு பதியப்பட்டது 2010 (வழக்கு எண் SC1/2010) இவ்வளவு கால தாமதமாக இந்த வழக்கில் ஆர்வம் காட்டவேண்டிய சூழல் எப்படி வந்தது என்று தெரியவில்லை. இந்த வழக்கு முடிந்திருக்கும் என்று நினைத்திருந்தேன். இதுவரை இந்த வழக்கு கிடப்பில் இருந்ததற்கான காரணமும் தெரியவில்லை. இருப்பினும் கடந்த வாரம் 9.6.2016 அன்று மூன்றாவது கூடுதல் சிட்டி சிவில் கோர்ட்டில் ஆஜராகி என்னுடைய சாட்சியங்களை ஒரு மணி நேரத்திற்கு மேலாக பதிவு செய்தேன்.

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான குரலாகவே என்னுடைய சாட்சியங்கள் அமைந்தன. உண்மையாக என்ன நடந்தது என்பதை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பாக இது அமைந்தது.

இதில் என்ன நிலைமை, முரண்பாடு என்றால் இதே நீதிமன்றத்தில் உள்ள இருக்கைகளில்தான் நானும் திரு. பிரபாகரனும், அவருடைய சகாக்களான பேபி போன்றவர்களும் அமர்ந்து அவருடைய பாண்டிபஜார் வழக்கை நடத்தியதும் உண்டு.  சற்று 32 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த சம்பவங்களை அசைப் போட்டுக் கொண்டு நீதிமன்ற இருக்கையில் அமர்ந்திருந்தேன். சாட்சி சொல்லும்பொழுது சாட்சிக் கூண்டுக்கு நேராக செயின்ட் ஜார்ஜ் கோட்டை கொத்தளம் ஜன்னல் வழியாக தெரிந்தது. சாட்சி சொல்லிக் கொண்டே தென்பக்கத்தில் தெரிந்த கோட்டையைப் பார்த்துக் கொண்டு வேடிக்கையாக மனதில் நினைத்துக்கொண்டேன். இலட்சியங்களையும், உழைப்பையும் கொண்டவர்கள் சட்டமன்றத்திற்குப் போகாமல் வழக்கு மன்றத்திலும், போராட்டக் களத்திலும் தங்களுடைய பணிகளை ஆற்றுகிறார்கள். ஆளுமைகளான இவர்கள் எல்லாம் மக்கள் மன்றத்தில். வணிக ரீதியிலான அரசியலில் திறம்பட செயல்படுபவர்கள் தெற்கே தெரிகின்ற சட்டமன்றத்திலும் மற்றும் நாடாளுமன்றத்திலும் செல்கின்றார்கள். வாழ்க நமது ஜனநாயகம்.

சாட்சியத்தில் என்னுடைய ஈழப் பிரச்சினை களப்பணிகள் 1979 காலகட்டத்திலிருந்து இருப்பதை வெளிப்படுத்தியதற்கு எனக்கு ஒரு வாய்ப்பாக அமைந்தது. இதைவிட என்னுடைய பணிகளை பதிவு செய்து ஆவணப்படுத்துவதற்கு வேறு என்ன சூழல் வேண்டும்?

https://www.facebook.com/ksradhakrish/posts/1766005047022510

No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...