Tuesday, March 27, 2018

நச்சும், ஆட்கொல்லி அபாயத்தினை உருவாக்கு திட்டங்களை டெல்லி பாதுஷாக்களால் தமிழகத்தில் திணிக்கப்படுகிறதே...

இன்றைக்கு (27/03/2018), தேனி மாவட்டம், தேவாரம் - பொட்டிபுரம் கிராமத்தில் உள்ள மலையில் சுமார் 1500 கோடி மதிப்பீட்டில் நியூட்ரினோ ஆய்வுக் கூடம் அமைக்க மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும் அந்த திட்டத்திற்கு அனுமதி அளித்தது மட்டுமல்லாமல், முல்லைப் பெரியாறு அணையிலிருந்து நாளொன்றுக்கு 3.5 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுத்துக் கொள்ளலாம் என்ற கொடுமையான உத்தரவும் வந்துள்ளது. காந்தத் தூண்டுதலால் துகள்களை ஆய்வு செய்யும் பொருட்டு அண்ட வெளியில் சக்தி மிகுந்த கதிரலைகள் உருவாகும். அதை உருவாக்க 1000 டன் ஜெலட்டின் வெடிமருந்துகளை 800 நாட்களுக்கு வெடிக்கச் செய்து 11,25,000 பாறைகளுடன் மலைகளும் தகர்க்கப்படும். சுற்றுச் சூழல் மாசுபடுவது மட்டுமல்லாமல் தேனி மாவட்டத்துடன், கேரளத்தின் இடுக்கி மாவட்டமும் சேர்ந்து பாதிக்கப்படுகிறது. பூமியே சிதறுண்டுவிடும் போன்ற விளைவுகள் ஏற்படுமென்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இப்படிப்பட்ட ஆபத்தான திட்டங்கள் தமிழகத்திற்கு தேவைதானா? குப்பை கூழம் போல தமிழகத்தில் திணிக்கப்படுகிறதே. இது என்ன நியாயம்? ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி இருபத்தைந்து ஆண்டுகளாக வைகோவுடன் இணைந்து களப்பணியாற்றி பல்வேறு போராட்டங்ளை செய்துள்ளேன். இன்றைக்கு தூத்துக்குடி மக்களே வெகுண்டெழுந்து அதை தடுக்க சதுக்கத்தில் போராடுகின்றனர். கூடங்குளம் அணுமின் திட்டத்தை அறிவித்தவுடன் அது மிகவும் ஆபத்தானது என்று 1989ஆம் ஆண்டிலேயே வழக்க தொடுத்தவன் அடியேன். இரண்டாவது முறையாக கூடங்குளம் போராட்டம் நடைபெறுவதற்கு முன்பே சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தேன் *(வழக்கு எண் / WP No. 22771 of 2011)*. எங்கள் கரிசல் பகுதியில் ராஜபாளையத்திலுள்ள தமிழ்நாடு சிமெண்ட் ஆலையை நவீனப்படுத்தாமல் ஆயிரக்கணக்கான ஏக்கர்கள் பாதிக்கப்பட்டு, குடிநீர் வசதியில்லாமல், மக்களுக்கு சுவாச நோய், புற்று நோய் என 1970களில் பெரும் பாதிப்பை உண்டாக்கியது. அதை எதிர்த்து விவசாயிகள் சங்கத் தலைவர் நாராயணசாமி நாயுடு, சட்டப்பேரவைத் துணைத் தலைவரும், விருதுநகர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரான பெ. சீனிவாசன் (காமராஜரை தோற்கடித்தவர்), அன்றைய மக்களவை உறுப்பினராக இருந்த சிவகாசி வி.ஜெயலட்சுமி போன்றோர் போராடி எந்தவித தீர்வும் எட்டப்படவில்லை. சென்னை உயர் நீதிமன்றத்தில் இதுகுறித்து ரிட் மனு (*வழக்கு எண். 10589/1986*) தாக்கல் செய்து அதன்படி, உயர்நீதிமன்ற உத்தரவு பெற்று ஆலையிலிருந்து தூசி வெளியேறாமல் பலகோடி ரூபாய் மதிப்பிலான இயந்திரங்களும் கருவிகளும் பொறுத்தப்பட்டன. அப்போதே ஆலையினை விற்றுவிடலாம் என்று தமிழ்நாடு அரசு யோசித்தபொழுது 1986ல் என்னுடைய மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்ததனால் ஆலையினை விற்கமுடியாமல் போனது. மேலும், 2015ம் ஆண்டு (*WP No. 4696 of 2015*) சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தேன். அந்த வழக்கின் தீர்ப்பின்படி 80 கோடி ரூபாயை தமிழக அரசு ஒதுக்க வேண்டுமென உத்தரவிட்டு, தமிழக அரசு ஆலங்குளம் சிமெண்ட் ஆலையை நவீனப்படுத்தியதெல்லாம் நினைத்துப் பார்க்கிறேன். சுற்றுச்சூழல் குறித்தான விழிப்புணர்வு இல்லாத காலத்திலேயே இது போன்ற வழக்குகள் நான் தொடுத்துள்ளேன். கேரளாவின் மருத்துவக் கழிவுகள், குப்பைகளை தமிழக எல்லைப் பகுதிகளான பாலக்காடு, நெல்லை மாவட்ட செங்கோட்டையில், குமரி மாவட்டத்தின் எல்லைகளில் லாரிகளில் வந்துகொட்டுவது என இந்த பிரச்சனையை தேசிய மனித உரிமை ஆணையத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றேன். தமிழகத்தின் கெயில் குழாய்கள் பதிப்பு கொங்கு மண்டலத்தில் மட்டுமல்லாமல் திருத்தணி அருகே இருந்து மதுரை வரை பதிக்கும் பணிகளும், கடலூர் முதல் சேலம் வரை பதிக்கும் திட்டங்களும் பரிசீலனையில் உள்ளது. விவசாயத்தை பாதிக்கும் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் கிணறுகளை தமிழகத்தில் பல பகுதிகளில் தோண்ட திட்டமும் உள்ளது. ஏற்கனவே இது நடைமுறைக்கு வந்துவிட்டது. இறால் பண்ணைகளும் விவசாய நிலங்களை களர் நிலங்களாக்கியது. விவசாய நிலங்களில் மின்சார கடத்தி கோபுரங்களை அமைத்து பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளன. இம்மாதிரி ஆலைகளால் ஆறுகளிலும், நீர்நிலைகளிலும் இருக்கும் தண்ணீர் ஒரு பக்கம் மாசடைகின்றது. இன்னொரு பக்கம் தொற்று வியாதிகள் பரவுகிறது. இது மாதிரி பல ஆலைகள் பல வட்டாரங்களில் பல்வேறு கேடுகளை மக்களுக்கு விளைவிக்கின்றன. அந்த ஆலைகள் வருமாறு.
- அரியலூர் சிமெண்ட் தொழிற்சாலை, - மதுரை பொய்கைக்கரைப்பட்டியிலுள்ள கெமிக்கல் தொழிற்சாலை, - தூத்துக்குடி சிப்காட், - கடலூர் சிப்காட், - திருப்பூர் பின்னலாடை - நொய்யலாற்றின் மரணம், - சேலம் கஞ்சமலை தாது கம்பெனி, - மேட்டுர் அனல்மின் நிலையங்கள், - மதுரை அபிலாஷ் கெமிக்கல்ஸ், - நெய்வேலி நிலக்கரி சுரங்கம், - கெயில் திட்டம், - திருவண்ணமாலை - ஜிண்டால் தாது கம்பெனி (இன்னும் தொடங்கப்படவில்லை), - ஊட்டி ஸ்டெர்லிங் ஆலை, - கொடைக்கானல் பாதரச (மெர்குரி) தொழிற்சாலை, - நாகர்ஜூனா ஆலை தமிழகத்திற்கு பலனளிக்க வேண்டிய சேது சமுத்திரத் திட்டம், மீனவர்களுக்கு பாதுகாப்பளிக்கும் கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தது மத்திய அரசு. மேலும் 1959ஆம் ஆண்டு முதல் பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு சேலத்தில் 1982ஆம் ஆண்டு நிறுவப்பட்ட சேலம் இரும்பாலை தற்போது முடக்கப்படுகிறது. ஊட்டியில் முக்கியமாக இயங்கிவந்த இந்துஸ்தான் போட்டோ பிலிம் தொழிற்சாலையை மூடி நைனிட்டாலுக்கு மத்திய அரசு அனுப்பிவிட்டது. இவ்வாறு பல்வேறு ஆபத்தான நஞ்சைக் கக்கும், சுற்றுச் சூழுலுக்கு தீங்கிழைக்கும் தொழிற்சாலைகளே அதிகம். இப்படி தமிழகத்திற்கு ஆக்கப்பூர்வமான திட்டங்களை முடக்கிவிட்டு, சுற்றுச் சூழல் விரோத திட்டங்களுக்கு தாராளமாக அனுமதியை வழங்கும் மத்திய அரசின் நடவடிக்கைகள் கடும் கண்டனத்துக்குரியது. #KSRadhakrishnanPostings #KSRPostings கே.எஸ்.இராதாகிருஷ்ணன். 27-03-2018


No comments:

Post a Comment

*Live in joy. Life goes by in the blink of an eye*

*Live in joy. Life goes by in the blink of an eye*. Don't live in upset, angry  or ungrateful. Look for the good, you'll find it. Ch...