Wednesday, March 28, 2018

தண்ணீர் பெற ரேசன் கடை வாசலில் வரிசையில் நிற்கும் மக்கள்.



தண்ணீர் தட்டுப்பாடும், பஞ்சமும் உலகளவில் ஆரம்பித்துவிட்டது. தென்ஆப்பிரிக்காவில் கேப் டவுன் நகரில் தொடங்கிய இந்த தட்டுப்பாடு காரணமாக அங்குள்ள மக்களுக்கு உணவுப் பொருட்களை வரிசையில் வழங்குவதைப் போல தண்ணீரையும் ரேசனில் விநியோகம் செய்யும் அளவுக்கு பிரச்சனை தலைதூக்கிவிட்டது.
இந்த டே ஜீரோவை (தண்ணீர் முற்றிலும் தீர்ந்து போகும் நிலை) எதிர்நோக்கி இந்தியாவின் பெங்களூரு, சீனாவின் பீஜிங், துருக்கியின் இஸ்தான்புல் போன்ற நகரங்கள் மட்டுமல்லாமல் சென்னை நகரும் தண்ணீர் இன்றி வற்றிவிடுமென்ற அச்சம் எழுகிறது.
இந்த செய்தியை ஈரோட்டில் நடந்த திமுக மாநாட்டில் நதிநீர் சிக்கல்கள் என்ற தலைப்பிலும் பேசினேன். தண்ணீர் தானே என்று சாதாரணமாக நினைத்துவிட முடியாது. நீர் என்பது திரவத் தங்கம். அதை சரியாகவும், அளவாகவும் பயன்படுத்துவது மட்டுமின்றி நீர் மேலாண்மை  வேண்டும். ஐ.நா. மன்றத்தின் அறிக்கைகளும் தமிழகம் எதிர்காலத்தில் பாலைவனம் ஆகிவிடும் என்று பலமுறை எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக டவுன் டு எர்த் (Down To Earth) என்ற மாதாந்திர இதழ் உலகளவில் தண்ணீர் தட்டுப்பாடு தொடர்பாக விரிவான கட்டுரையை வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் இதை படித்து தெரிந்து கொள்ளவும்.
இப்படிப்பட்ட தகவல்களை வருங்கால சந்ததிகளுக்கு சொல்ல வேண்டியது என் கடமை என்பதால் இந்த பதிவை இடுகிறேன்.
ஏனெனில் தண்ணீர் தட்டுப்பாடு செய்திகளை விட ஒரு பெண் எம்.பி. யின் இரண்டாவது திருமணம் போன்ற புறந்தள்ள வேண்டிய செய்திகள் வெளி வருவதையே ஊடகங்களும், மக்களும் விரும்புகின்றனர்.
இப்படியான நிலையில் தமிழக உரிமைகள் யாவும் காவு கொடுக்க வேண்டியது தான். தமிழகத்தின் பிரச்சனைகளை எல்லாம் நாடாளுமன்றத்தில் புரிதலுடன் சொல்லக்கூடியவர்கள் அந்த அவையில் இல்லை. தகுதியே தடை என்ற நிலையில் தரமானவர்கள், நுண்மான் நுழைபுலம் கொண்டவர்கள், தகுதியானவர்கள் நாடாளுமன்றம், சட்டமன்றம் செல்ல வழியில்லை.
இப்படியான நிலையில் பிறகு எப்படி முக்கிய பிரச்சனைகளுக்கு நாட்டில் தீர்வு கிடைக்கும்.
கே. பாலச்சந்தர் இயக்கிய தண்ணீர்.. தண்ணீர்.. திரைப்படத்தை கரிசல் மண்ணான கோவில்பட்டி வட்டாரத்திலும், எட்டயபுரம் அருகேயுள்ள ஏழுபட்டி கிராமங்களிலும் எடுக்கப்பட்டது. அந்தப் படம் வந்த சமயத்தில் நான் கோவில்பட்டியில் திமுக வேட்பாளராக தேர்தலில் போட்டியிட்டேன். எனது வட்டாரங்களில் தண்ணீர் பஞ்சம் எப்படியிருந்தது என நேரடியாக கண்டவன். அதே நிலைமை எதிர்காலத்தில் அனைத்து வட்டாரங்களிலும் வந்துவிடுமோ என்ற அச்சத்தில் இதை பதிவிடுகிறேன்.
இந்தியா தண்ணீருக்கு வரிசையில் நிற்கும் கேப் டவுன் மாதிரி மாறிவிடக் கூடாது. இந்த பிரச்சனையில் விழிப்புணர்வும், கவனமும் மக்களிடம் ஏற்பட வேண்டும்.


#தண்ணீர்_தட்டுப்பாடு
#ஜீரோ_டே
#Water_Scarcity
#Zero_day
#TamilNadu_Farmers
#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
28-03-2018

No comments:

Post a Comment