Tuesday, September 7, 2021

“#கொடுமையிலும்_கொடுமை_வருத்தமான_செய்தி” #கீழ்ப்பாக்கம்_மனநல_மருத்துவ_மனையில் ———————————————————

 #கொடுமையிலும்_கொடுமை_வருத்தமான_செய்தி

———————————————————
தமிழ்த்திரை இயக்குநர் ருத்ரன், தனது "வெற்றிச் செல்வன்' படத்தின் காட்சிகளை 20நாட்களுக்கும் மேலாக கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவ மனையில் படமாக்கியிருக்கிறார் அந்த அனுபவங்களைக் கேட்கச் சென்ற ஒரு பத்திரிகையாளர் எழுதுகிறார் ...
"யாவரும் நலம்' படத்தில் இயக்குநர் விக்ரம் குமாரின் உதவியாளராக நான் பணியாற்றியபோது லொகேஷன் பார்ப்பதற்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு சென்றிருந்தேன். அப்போது நான் சந்தித்த ஒரு நபர்தான் எனது "வெற்றிச் செல்வன்' படத்திற்கான ஆரம்ப விதையாக இருந்தார்.
நான் சந்தித்த அந்த நபர் –
காமராஜரின் ஆட்சியில் அமைச்சராக இருந்த கக்கனின் மகன் நடராஜ மூர்த்தி.
நேர்மையான அரசியல்வாதியாக கக்கனை எங்களுக்குத் தெரியும்.
ஆனால், அவரின் மகன் நடராஜ மூர்த்தி கீழ்ப்பாக்கம் மருத்துவ மனையில் சுமார் 30 வருடங்களாக --அனைவராலும் கைவிடப் பட்ட நிலையில்-- கால்கள் சங்கிலியால் பிணைக்கப்பட்டு இருக்கிறார்
என்றால் அது, தமிழருக்கு எவ்வளவு பெரிய அவமானம்...?
அவரை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சரியான முறையில் நடத்துகிறார்களா என்றால் அதுவும் இல்லை. அவர் சொன்ன சில கதைகளை வைத்துத்தான் இந்தப் படத்தை எடுத்தேன்.
கீழ்ப்பாக்கத்தில் சுமார் 3000 பேர் வரை இருக்கிறார்கள். அதில் சுமார் 500 பேருக்கு மேல் முற்றிலும் குணமானவர்கள். ஆனால், அவர்களை அழைத்துச் செல்ல யாருமே இல்லாததால், இன்னும் அங்கேயே இருந்து மேலும் மேலும் மனச் சிதைவுக்கு உள்ளாகிறார்கள்.
கீழ்ப்பாக்கத்தில் படப்பிடிப்பு நடத்த என்னிடம் சுமார் ஒரு லட்சம் ரூபாய் வரை அன்பளிப்பாக மருத்துவமனை நிர்வாகம் கேட்டது. அந்தப் பணத்தில் நோயாளிகளுக்கு ஏதாவது செய்கிறேன் எனக் கேட்டபோது, அதற்கு அனுமதிக்க வில்லை. மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் கூட சாதாரணமான மனிதர்கள் தானே...?
கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் எல்லா நோயாளிகளும் இரவு ஆறு மணிக்கே இரும்புக் கதவுகளின் பின்னால் அடைக்கப்படுகிறார்கள். அந்த இரும்புக் கதவுகள் ஆங்கிலேயர் காலத்தில் செய்யப்பட்டவை. சிறிதளவு காற்றுகூட அந்தக் கதவு வழி புகமுடியாமல் முழுவதுமாக மூடி இருக்கும். நான் அங்கு பார்த்த பெரும்பாலான நோயாளிகள் தங்களைப் பிணைத்திருக்கும் சங்கிலிகளை அவிழ்த்து விடுமாறு கதறுவார்கள். ஆனால், கேட்பதற்கு யாரும் இல்லை. பறவைக்கு கூட தான் விரும்பிய இடம் எல்லாம் பறக்க முடியும். ஆனால், அங்கிருப்பவர்களால் அந்த வாசலைத்தாண்டி போக முடியாது.
சமைப்பது, துணி துவைப்பது, உட்பட அங்குள்ள சகல வேலைகளையும் நோயாளிகள் தான் செய்கிறார்கள். தோட்ட வேலை களைக் கூட அவர்கள்தான் செய்கிறார்கள். சும்மா ஒரு லாஜிக்கிற்காக
கேட்கிறேன்,அவர்கள் மனநலம் சரியில்லாதவர்கள் என்றால் அவர்கள் கைகளில் கடப்பாறை போன்ற கூரிய ஆயுதங்களைக் கொடுக்கலாமா?
அங்கு இருக்கும் காவலர்கள் எல்லாம் அடியாட்கள்போல இருப்பார்கள். ஒரு சிறிய தவறு நடந்து விட்டால் கூட நோயாளிகளை தூக்கிப் போட்டு ரத்தம் வரும் வரைக்கும் மிதிப்பார்கள். ஒரு நோயாளிக்கு அவர் விரும்பிய உணவை நான் வாங்கிக் கொடுத்ததற்காக, அவரை எனது கண்முன்னால் அவர் மயக்கமாகும் வரைக்கும் அடித்தார்கள்.
இன்றுவரை கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு பத்திரிகையாளர்கள்
யாருமே செல்ல முடியாது. பத்திரிகையாளர்கள் சென்றால் அவர்கள் அங்கு நடக்கும் அநீதிகளை வெளி உலகிற்கு அடையாளம் காட்டி விடுவார்கள் என்றுதான் அவர்களை நிர்வாகம் அனுமதிப்பதில்லை. அங்கு நடக்கும் கொடுமைகளுக்குப் பதிலாக அந்த நோயாளிகளை கருணைக் கொலை செய்து விடலாம்.
நான் பார்த்த ஒரு நோயாளி சுமார் 10 வருடங்களாக யாருடனும் பேசுவது இல்லை. அங்கு நடக்கும் கொடுமைகளால் மனம் உடைந்து அவர் பேசுவதில்லை எனச் சொன்னார்கள்.
தமிழக அரசு இந்த விஷயத்தில் தலையிட வேண்டும்.
ஊடகங்கள் இந்த நோயாளிகளுக்காகக் குரல் கொடுக்க வேண்டும். குரல் கொடுத்தால் என்னைப்போன்ற 3000 சக மனிதர்கள் நல வாழ்வு பெறுவார்கள்' என முடித்துக் கொண்டார்.

No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...