Wednesday, December 5, 2018

கரிசகாடும் தின்னவேலியும் சாகித்ய அகாடமி விருதுகள் .........



——————————-

ரா.பி.சேதுபிள்ளையில் தொடங்கி ஆ.சீனிவாசராகவன், பி. ஸ்ரீ ஆச்சார்யா, தொ. மு. சிதம்பர ரகுநாதன், கு. அழகிரிசாமி, கி. ராஜநாராயணன், வல்லிக்கண்ணன், தி.க.சிவசங்கரன், தோப்பில் முகம்மதுமீரான், பூமணி, சு. சமுத்திரம், ஜோ டி குருஸ், மேலாண்மை பொண்னுசாமி,ருத்ர துளசிதாஸ்,திண்டுக்கல் டி.செல்வராஜ், வண்ணதாசன் இன்று எஸ்.ராமகிருஷ்ணன் (மல்லாங்கிணர்)என நீண்டபட்டியல் ;
இவ்வளவு சாகித்ய விருதினைப் பெற்றது எந்த மாவட்டத்துக்காவது, எந்த மாநிலத்துக்காவது சிறப்புகள் உண்டா? ரா.பி.சேதுபிள்ளை, வல்லிக்கண்ணன்ஆகிய இருவர் ராஜ வல்லி புரம் ; 
கு. அழகிரிசாமி, கி. ராஜநாராயணன் இடைச்செவல் என இரண்டு கிராமத்தில் 
இருவர் இந்த விருதை பெற்ற பெறுமை
எங்கும் கிடையாது.

கோவில்பட்டியில் எண்பதுகளில் தேவதச்சனின் நகைக்கடைச் சபையில் இருந்து கிளம்பிய எழுத்தாளர்களின் சிறுகுழு ஒன்று உண்டு. அன்றிருந்த இலக்கியத்தின் எல்லைகளை விரிவாக்கியவர்கள். மொழிபிலும் அமைப்பிலும் புதியவற்றை நிகழ்த்தியவர்கள். தமிழ்செல்வன், கோணங்கி, எஸ்.ராமகிருஷ்ணன், யுவன் சந்திரசேகர், உதயசங்கர் என சிலர் .....
காந்தி மைதான மாலை பொழுது விவாதங்கள்,சாத்தூர் டீ ஸ்டால் என
கோவில்பட்டி நகரில் நடந்த படைப்பாளிகளின்சந்திப்புகள்...... எஸ்.ராமகிருஷ்ணன் கோவில்பட்டியில் வருடத்தில் பல நாட்கள் 1980 களில் முகாம் இடுவார்.அப்போது அவருக்கு
இலக்கிய ஆர்வத்தை மேலும் அதிகப்படுத்தியது.
எஸ்.ராமகிருஷ்ணன்தமிழ்ச்சிறு
கதையில் கூரிய யதார்த்தக் கதைகள், பின்னர் மாயயதார்த்தப் புனைவுகளை எழுதினார். அவருடைய புகழ்மிக்க முன்னத்தி ஏர்கள் கு.அழகர்சாமி, கி.ராஜநாராயணன், பூமணி,போத்தையா,எஸ்.ஏ.பெருமாள்
(செம்மலர்முன்னாள் ஆசிரியர்)
போன்றவர்கள் எழுதிய அதே நிலத்தையும் மக்களையுமே அவர் எழுதினார். ஆனால் அவர்களின் உள்ளங்களை கட்டமைத்திருக்கும் தொன்மங்களையும் ஆழ்படிமங்களையும் எழுத்திற்குள் கொண்டுவந்தார். அவர்களை அந்த மண்ணில் நிகழ்ந்த நீண்ட தொல்மரபின் ஒரு பகுதியென நிறுத்தி ஆராய்ந்தார். அதனூடாக தமிழ் இலக்கியமரபில் புதிய அனுகுமுறையை 
முன் எடுத்தார்.

அட்சரம் காலாண்டு இதழை,விருதுநகர் இரயில்வே நிலையத்திற்கு அருகில் இதற்கு ஒரு அலுவலகம் வைத்து இரண்டு வருடங்கள் ஆசிரியராக இருந்து கொண்டு வந்தார். இந்த இதழ் அனைவராலும் வரவேற்கப்பட்டது. 

ஆனந்த விகடனில் அவர் எழுதிய துணையெழுத்து, கதாவிலாசம், தேசாந்திரி கேள்விக்குறி போன்ற தொடர்கள், இந்திய வரலாற்றைக் குறித்தான பதிவுகள் பரவலாக வாசகர்களால் ஈர்க்கப்பட்டது. எஸ்.ரா அருப்புக்கோட்டைக்கு அருகே மல்லாங்கிணறில் பிறந்தாலும், கரிசல் மண் மக்களைக் குறித்த தேடுதலில் கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், ஒட்டப்பிடாரம், விளாத்திக்குளம் ஆகிய பகுதிகளில் தேசாந்திரியாக 1970, 80 வலம் வந்தவர். தனது தேடுதலுக்காக தேசிய நெடுஞ்சாலைகளின் லாரிகளிலும் ஏறி நீண்டதூரம் தொடர்ச்சியாக வடஇந்தியா வரை பயணம் செய்தததுண்டு.

தின்னவேலி அதனை சுற்றியுள்ள கரிசகாட்டு எழுத்தாளர்களும் குடிக்கின்ற தாமிரபரணி நீரும், கரிசல் காட்டு சவறு நீரும் அவர்களுக்கு எழுத்துலகில் போசாக்கு சக்தியை தருகிறது. ஒருபுறம் பாடுபடும் வெள்ளந்தி கரிசகாட்டு-செவக்காட்டு விவசாயிகளின் போர்குணமும், நெல்லை மக்களின் யதார்த்தமான இயல்பும் இவர்களை அற்புதமான படைப்புகளை உருவாக்கும் காரணிகளாகும். மேற்கே ஸ்ரீவில்லிபுத்தூர் பென்னிங்டன் நூலகத்தில் துவங்கி ஆண்டாளுடைய திருப்பாவை, சிவகாசி, ராஜபாளையம், சாத்தூர், அருப்புக்கோட்டை பந்தல்குடி, கோவில்பட்டி, பாரதியின் எட்டையபுரம், விளாத்திகுளம், வேம்பார், ஒட்டப்பிடாரம், கயத்தார் கரிசல் காட்டுடைய பருத்தி,மிளகாய் விளைச்சல் காடுகளும், ராஜபாளையம் மணிமேகலை மன்றமும், கோவில்பட்டி காந்தி மைதானம், விளாத்திக்குளம் வானம் பார்த்த பூமி, கடற்கரையும் ஒட்டப்பிடாரத்தின் வேலிக்காடும், தூத்துக்குடியின் கருவாட்டினுடைய வாசமும், புழுதிபரந்த நகர்க்கோலமும், தாமிரபரணியின் ஆற்றோரமும், நெல்லையின் இலக்கிய வாசமும், பொதிகையின் தமிழ் தொட்டிலும், தென்காசியின் திருவள்ளுவர் மன்றமும், சங்கரன்கோவிலில் புதிய பார்வை அமைப்பும், தெற்குச் சீமை இலக்கிய படைப்பாளிகளிடம் பின்னிப் பினைந்தவை. 

ஒரு , வறட்சிக் காடு, மற்றொரு பக்கம் தாமிரபரணி தீரவாசம், கொட்டித் தீர்க்கும் குற்றால, பாநாசம் ஶ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள தாணிப்பாறை அருவிகளும், மனப்பாடு,திருச்செந்தூர், தூத்துக்குடி, புன்னைக்காயல், வேம்பாறு கடற்கரையும் சிந்தனையை தூண்டுகின்ற களங்களாகும். இந்த களத்தில் படைக்கப்படுகின்ற இலக்கியங்கள் சாமானிய மக்களின் அன்றாட வாழ்க்கைத் தத்துவங்கள் ஆகும். 

கரிசல் காட்டிலே தின்னவேலியில பொறக்கும் படைப்பாளிகள் மட்டும் சாகித்ய அகாடமி விருதுகளை வழக்கம் போல அள்ளிச் செல்லுகின்றனர்.

தின்னவேலி, பாளையங்கோட்டை விருதுநகர் கலாச்சாலைகள் இப்படிப்பட்ட இலக்கிய படைப்புகள் அமைய நாற்றாங்கால்களாகும். நிமிர வைக்கும் கரிசகாட்டுக்கும், நெல்லைக்கு பல அடையாளங்களும், முத்திரைகளும் உண்டு. கோவில்பட்டியில் தமிழ்த்தாயி நெல்லையில் வாக்கப்பட்டு நல்லஇலக்கியங்களைபடைத்திருக்கிறார். என்னை பிரசவித்த பூர்வீக நெல்லை மண்ணை மிடுக்கோடும், பெருமையோடும் வணங்குகிறேன். 

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
5-12-2018
#நிமிரவைக்கும்நெல்லை
#சாகித்யஅகாடமிவிருதுகளை 
#KSRadhakrishnan_postings
#KSRpostings

No comments:

Post a Comment

Yes… brutal killings

  Yes… brutal killings Quote Rishi Bagree @rishibagree · Aug 20 ”India lost 15000 citizens in Sri Lanka because of Rajiv Gandhi.” Reveals h...