1. அர்ச்சிரம் / அற்சிரம் – பனிப்பருவம்
மார்கழி, தை மாதங்கள் முன்னிரவில் பனி பொழியும் முன்பனிக்காலம் மாசி, பங்குனி மாதங்கள் பின்னிரவில் பனியுதிரும் பின்பனிப்பருவம். எனவே, இந்த நான்கு மாதங்களையும் பனிக்காலம் பனிபருவம் என்கிறோம். புலவர் ஒருவர் பனிக்காலம் நன்று என்று கூற அருகிருந்தவர்கள் என்ன பனிக்காலம் என்கிறீர்கள் என வியப்புடன் வினவ உடனே அந்தப்புலவர், ஆமாம், கடுமையான பனியின் கொடுமையை நோக்க ஆலம் நஞ்சு நல்லதாகையால் பனிக்கு ஆலம் நன்று எனக்கூறினேன் என விளக்கமளித்ததாக நகையாடல் செய்தியொன்று உண்டு. தற்போது நாம் வழங்கும் பனிக்காலம் பனிப்பருவம் என்பதை பழந்தமிழர் அச்சிரம், அற்சிரம் என வழங்கினர்.
”அர்ச்சிரக்கால் ஆர்த்து அணிமழை கோலின்றே
வச்சிரத்தான் வான வில்லு”
(பரிபாடல் 18:38,39)
முழங்கி வச்சிராயுதத்தையுடைய இந்திரனின் வானவில்லை வளைத்தது என்பது பொருள்.
2. ஊன் சோறு – பிரியாணி
“மட்டுவாய் திறப்பவும் மைவிடை வீழ்ப்பவும்
அட்டான் றானாக் கொழுந்தவை ஊன் சோறும்”
(புறம்: 113)
3. சேமச்செப்பு: வெப்பக்குடுவை (Thermo flask)
“அற்சிர வெய்ய வெப்பத்தண்ணீர்
சேமச்செப்பில் பெறீஇயாரோ நீயே
மின்னிடை நடுங்கும் கடைப்பெயல்வாடை
எக்கால் வருவது என்றி
அக்கால் வருவர் எம்காத லோரே”
(குறுந்தொகை: 277)
வாடைக்காலத்தில் திரும்பிவருவேன் எனச் சொல்லிப் பிரிந்து சென்றான் தலைவன். வாடைக்காலம் வந்து உடலை நடுக்குகின்றது. தலைவன் எப்பொழுது வருவான் எனக் கணித்துக் கூறும் படியாகக் கணியனை – சோதிடனைக் கேட்கும் தலைவி அவ்வாறு நீ சரியாகக் கூறினால் குளிர் நடுக்கும் இப்பருவத்திற்குரியதாகச் சேமச்செப்பில் உள்ள வெந்நீரைப் பெறுவாயாக சூடான வெந்நீரைச் சேமிப்பாக ஊற்றி வைப்பதற்குரிய கலன் பாத்திரம் அதாவது தற்காலம் – குடயளம் எனப்படுவது சேமச் செப்பு எனப்பட்டமை. ஆக, வெந்நீரைச் சூடு குறையாது பாதுகாக்கும் பண்டம் பண்டும் உண்டு என்பதும் அதற்கான பெயர் சேமச்செப்பு என்பதும் சுவையான மகிழ்வான செய்தியாகின்றது.

No comments:
Post a Comment