Saturday, July 23, 2016

''தாட்டிகொண்ட நம்பெருமாள்'' செட்டி


19ஆம் நூற்றாண்டில் சென்னையின் மிகப் பெரிய கட்டட காண்ட்ராக்டரான நம்பெருமாள் செட்டி.
விக்டோரியா ஹால், சென்னை உயர்நீதிமன்றம், சட்டக்கல்லூரி,  எழும்பூரில் உள்ள சிற்பக் கலை கல்லூரி,  அருங்காட்சியகம், கன்னிமாரா நூலகம் என பல முக்கிய கட்டடங்களுக்கும் செங்கல் கொடுத்த சீமான் இவர்தான். இந்த பணியை சிறப்பாக செய்வதற்காகவே இவர் பச்சையப்பன் கல்லூரிக்கு அருகில் ஒரு பிரத்யேக செங்கல் சூளையை வைத்திருந்தாராம். கட்டடப் பணிக்கு தேவையான பொருட்கள் தரமானதாக இருக்க வேண்டும் என்பதால் சில பொருட்களை வெளிநாடுகளில் இருந்தும் இறக்குமதி செய்வாராம். 

''தாட்டிகொண்ட நம்பெருமாள்'' செட்டி என அழைக்கப்பட்ட இவர், ஆரம்ப காலத்தில் ஜார்ஜ் டவுனில் தான் வசித்து வந்தார். பின்னர் 1905இல் சேத்துப்பட்டில் 'க்ரையாண்ட்' என்ற வீட்டை விலைக்கு வாங்கி குடியேறினார். ஹாரிங்டன் சாலையில் உள்ள இந்த வீட்டுடன் சேர்த்து நம்பெருமாள் செட்டிக்கு சொந்தமாக 99 வீடுகள் இருந்தன. 100வது வீட்டை வாங்கினால் துரதிர்ஷ்டம் வந்துவிடும் என நம்பியதால், செட்டியார் செஞ்சுரி அடிக்கவில்லை என்கிறார்கள். சேத்துப்பட்டு பகுதியில் இவருக்கு மொத்தம் 2000 கிரவுண்டு நிலம் இருந்திருக்கிறது.

காசநோய் அதிகமாகி இங்கிலாந்தில் இருந்து திரும்பிய கணிதமேதை ராமானுஜத்தை நம்பெருமாள் செட்டியார் தனது க்ரையண்ட் இல்லத்தில் தங்க வைத்து சிறப்பு வைத்தியங்களுக்கு  ஏற்பாடு செய்தார். பின்னர் ராமானுஜத்தின் வசதிக்காக க்ரையண்டிற்கு எதிரில் இருந்த கோமேத்ரா என்ற தன்னுடைய இன்னொரு வீட்டில் தங்க வைத்தார். ஆனால் சிறிது காலத்திலேயே ராமானுஜம் காலமானார்.

No comments:

Post a Comment