Sunday, July 24, 2016

சாதியப் பிரச்சினைக்குத் தீர்வு; புத்தர் போதாது! அம்பேத்கரும் போதாது! மார்க்ஸ் அவசியம் தேவை!

புக்லேண்ட் சீனிவாசன், "சாதியப் பிரச்சினைக்குத் தீர்வு; புத்தர் போதாது! அம்பேத்கரும் போதாது! மார்க்ஸ் அவசியம் தேவை!" என்ற ரங்கநாயகம்மா தெலுங்கில் எழுதி ஆங்கிலத்தில் பி.ஆர். பாபுஜி மொழியாக்கம் செய்து, ஆங்கிலத்திலிருந்து தமிழில் கொற்றவை மொழிபெயர்த்து குறளி பதிப்பகம் வெளியிட்ட நூலினை நேற்றைக்கு அனுப்பி வைத்திருந்தார். 416 பக்கங்கள், நல்ல கட்டமைப்பு, வெறும் 80 ரூபாய்க்கு இந்த நூலை விற்பது ஆச்சர்யமாக இருந்தது.  நேற்று ஒரே இரவில் படிக்க முடிந்தது. ரங்கநாயகம்மா தெலுங்கில் அறிந்த படைப்பாளி. நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள் எழுதியவர். அம்பேத்கர் படைப்புகளை ஆய்வு செய்தவர். ஆந்திர ஜோதி என்ற தெலுங்கு வார இதழில் 1999 முதல் 2000 வரை ரங்கநாயகம்மா எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு டிசம்பர் 2000ல் தெலுங்கில் நூலாக வந்து, தமிழிலும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.  சாதிய பிரச்சினைகள், நிலப்பிரபுத்துவ முறைகள், உழைப்பு, தலித் இலக்கியங்கள், அம்பேத்கர் என கடந்தகால நிகழ்வுகளையும், இன்றைய சூழலையும் எழுதியுள்ளார். காந்தி மீதும், அம்பேத்கர் மீதும் விமர்சனங்கள். புத்தர் மீது எதிர்வினைகளும், ரங்கநாயகம்மா சொல்லியுள்ளார்.  மார்க்ஸின் தத்துவங்களை ஆய்வு கண்ணோட்டத்தோடு குறிப்பிட்டுள்ளார். இதில் அனைவரும் படிக்கவேண்டிய, கவனிக்கவேண்டிய சில சிந்தனைகளும் உள்ளன. இதன் மீது விருப்பமோ, எதிர்வினையோ கொண்டவர்கள் அவசியம் வாசிக்கவேண்டிய ஆவணமாகும்.

No comments:

Post a Comment