Friday, June 23, 2023

'ஏனல் காவலர் மா வீழ்த்துப் பறித்த பகழி அன்ன சேயரி மழைக் கண்’…

சங்கப் பாடல்களில் இயற்கையின் அத்தனை வசீகரங்களும் சொல்லப்பட்டு உள்ளன. அரசனுடைய வீரத்தைச் சொல்வதானாலும், பெண்களின் மனநிலையைச் சொல்வதானாலும் அது இயற்கையின் ஊடாகத்தான் சொல்லப்பட்டு இருக்கின்றன. ஒவ்வொரு பாட்டிலும் ஏதோ ஒருவகையில் இயற்கை வந்து சேர்ந்துகொள்ளும். இப்போது சூழலியல் பற்றி பேசுகிறோம். ஆனால், நமது மூதாதையர் இயற்கையோடு ஒன்றி வாழ்ந்திருக்கிறார்கள் என்பதற்கு பாடல்களில் கிடைக்கும் உவமைகளே சான்று.

நற்றிணை 13 -ல்

'ஏனல் காவலர் மா
வீழ்த்துப் பறித்த பகழி
அன்ன சேயரி
மழைக் கண்’ என்ற வரிகள் வரும். 'காவலர்களின் அம்புகள் குத்தி விலங்கின் உடம்பில் ரத்தம் வடிவதுபோல சிவந்த கண்கள்!’ என்னே ஓர் உவமை பாருங்கள்!

புறநானூறு 237. பாடியவர் பெருஞ் சித்திரனார். பாடப்பட்டோன், இளவெளிமான். மூத்த வெளிமான் இறந்தபோது மனைவியர் மார்பிலே அடித்து அழுகின்றனர். அதனால் வளையல்கள் உடைந்து கீழே சிதறுகின்றன.

'ஊழின் உருப்ப எருக்கிய
மகளிர் வாழைப் பூவின்

வளை முறி சிதற’ என்கிறார் புலவர். 'நெஞ்சிலே அடித்து அழும் பெண்களின் உடைந்த வளையல்கள் வாழைப் பூக்கள் போல நிலத்தில் சிதறிக் கிடக்கின்றன!’ சோகத்தைச் சித்திரிக்கும்போதும் எத்தனை நயமான உவமை!

இந்த உச்ச நிலையை எட்ட, அதற்கு முன் எத்துணை நூற்றாண்டுகள் தமிழ் மொழி வளர்ந்திருக்க வேண்டும்! இப்படி உயர்ந்து நிற்கும் பழைய இலக்கியம், உலகத்தில் வேறு எங்கும் கிடைக்காது. ஆனால், நம்மிடம் 2,000 வருட காலமாக இருக்கிறது. அதன் அருமையை  இங்கே நம்மில் பெரும்பாலானவர்கள் உணரவில்லை!'

No comments:

Post a Comment

Yes… brutal killings

  Yes… brutal killings Quote Rishi Bagree @rishibagree · Aug 20 ”India lost 15000 citizens in Sri Lanka because of Rajiv Gandhi.” Reveals h...