Thursday, January 25, 2018

மதுரை சிறையில் வாடும் ஆயுள் கைதி இரவிச்சந்திரன்

மதுரை சிறையில் வாடும் ஆயுள் கைதி இரவிச்சந்திரன்*
------------------------

இன்று வீரவணக்க நாள் 25.01.2018 கூட்டத்துக்கு தேனிக்கு சென்ற போது, மதுரை மத்திய சிறையில் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனைக் கைதியாக இருக்கும் இரா.போ.இரவிச்சந்திரனை சந்தித்தேன். எனக்கு நெருங்கிய குடும்பத்தைச் சார்ந்தவர் இரவிச்சந்திரன். எங்களுடைய பகுதியைச் சேர்ந்தவர். பலமுறை நான் சந்திக்கவில்லை என்று வருத்தப்பட்டாராம். 26 ஆண்டுகளுக்கு மேல் சிறைவாசம், 1985இல் இருந்து விடுதலைப் புலிகளோடு ஈழத்தில் முதல் இரண்டு ஈழப்போர்களில் பங்கேற்றவர். இன்றைக்கு வியாழக்கிழமை என்பதால் அவரைச் சந்திக்க வேண்டிய சூழல் நிலவியது. அவருடைய மதுரை வழக்கறிஞர் திருமுருகன், அவருடைய தாயார் திருமதி. ராஜேஸ்வரி உடன் வந்தனர். 
தனது குடும்பச் சொத்துக்களை பாகப்பிரிவினை செய்யவேண்டி அவர் ஏற்கனவே பரோல் விண்ணப்பித்தது மனு நிலுவையில் உள்ளது. தன்னுடைய இளமையைப் பலிகொடுத்து வாழவேண்டிய நாட்களை எல்லாம் சிறையில் கழித்துக் விட்டாரே என்று ஆதங்கத்தோடு அவரிடம் ஆறுதல்படுத்த முயன்றபோது, அவர் அதை பற்றியெல்லாம் கவலைப்படாதீர்கள் அண்ணே என்றார் . நெறி சார்ந்த வாழ்க்கையில் பகத்சிங் போன்றோர் தியாகம் செய்யவில்லையா என்று நமக்கு தைரியம் அளித்தார். 

“சிவராசன் டாப் சீக்ரெட்" நூல் வெளியீட்டு விழா வெளியீட்டின் போது நான் எழுதிய அணிந்துரையில் முப்பதுக்கும் அதிகமான விடைதெரியாத கேள்விகளை  படித்ததாகக் கூறி ,"அன்றே இவ்வளவு புரிதலுடன் துல்லியமாகக் கேட்டுள்ளீர்கள் அண்ணே" என்றார். 

அவருடன்  பேசிக் கொண்டிருந்த போது 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்தால் விடுதலை செய்ய முடியும் என்ற நிலை இன்று ஏற்பட்டுள்ளது என்று சொன்னேன். இந்திய அரசியலமைப்பின் பிரிவு 161ன்படி உங்களை மாநில அரசே விடுதலை செய்யலாம். உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு நீண்டகாலம் சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்யுங்கள் என்று அறிவுறுத்தியுள்ளது. எல்லா நிலையிலும் உங்களுடைய விடுதலைக்கு நியாயங்கள் இருக்கின்றது என்று எடுத்துச் சொன்னேன். அவரும் ஆமாண்ணே என்று சொன்னார். 

எனக்கு பார்க்கவே சற்று சிரமான நிலையில்; மீசை முளைக்காத சிறுவயதில் ஈழத்தில்  போருக்கு போய் இன்று தலைமுடி கொட்டும் வயதுவரை சிறையில் இருப்பது, அதை பற்றி சற்றும் சிந்திக்காமல் மகிழ்ச்சியாக இருப்பது எல்லோராலும் முடியாது. பொது வாழ்க்கைக்கு வந்துவிட்டால் சுகபோகங்களும், மகிழ்ச்சியும், வசதியான வாழ்க்கை தான் என்று  கருதுவோர் மத்தியில் இரவிச்சந்திரனுடைய அணுகுமுறையும், தியாக வாழ்வும் பொது வாழ்வுக்கு வருவோருக்கு பாலபாடம் ஆகும். 

நீண்ட விவாதத்திற்கு பிறகு அற்புதமான தியாக உணர்வுள்ள இளைஞனை சந்தித்தோம் என்ற மகிழ்ச்சி மனதுக்குள் ஏற்பட்டு; மதுரை சிறையில்யுள்ள அவரிடம் விடை பெற்றேன்.

பா. ஏகலைவன் தொகுத்து வெளிவந்த தன்னுடைய 'சிவராசன் டாப் சீக்ரெட்' நூலில் ராஜீவ் படுகொலை பல்வேறு சதிகளுக்கு மத்தியில் நடந்தது. ஆனால் அப்பாவிகளான நாங்கள் சம்மந்தமில்லாமல் பாதிக்கப்பட்டுள்ளோம் என்று தன்னுடைய தரப்பின் நியாயத்தை தெளிவாக எடுத்துரைத்தார்.தேவை இல்லாமல்  பழி பலரை பாதித்தது.அது கவனிக்கப்பட வேண்டியதே.

#இரவிச்சந்திரன்
#ராஜீவ்_படுகொலை
#ஆயுள் கைதிகள்
#ravichandran
#rajiv_assassination
#Life_Prisoners
#KSRadhakrishnanPostings 
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
25-01-2018

No comments:

Post a Comment

#*இ.ந்.தி.யா தேர்தல்க்கூட்டணி* ⁉️

#*இ.ந்.தி.யா தேர்தல்க்கூட்டணி* ⁉️ ••••• இந்த இ.ந்.தி.யா தேர்தல்க் கூட்டணிகளின் விசித்திரங்களை  எவ்வாறு அணுகுவது என்று மிகச் சிறந்த பத்திரிகை...