Monday, April 6, 2015

புற்றுநோயை ஏற்படுத்தும் கைப்பேசியின் கதிர்வீச்சு. -Mobile Tower Radiation Leads to Cancer.




வானுயர்ந்த இரும்புக் கோபுரங்களாக செல்போன் டவர்கள் இன்றைக்கு பட்டிணக்கரையிலிருந்து பட்டிதொட்டி வரை காட்சியளிக்கின்றது. செல்போன் கோபுரங்களிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சு குறித்து பலசமயம் ஆய்வு நடத்தி, சுற்றுச் சூழல், மக்கள் நல்வாழ்வு, பறவைகள் குறிப்பாக சிட்டுக்குருவிகள் பாதுகாப்பு  ஆகியவற்றுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லையென்று தொடர்ந்து அரசுத் தரப்பில் சொல்லப்பட்டு வந்தது.

இப்போது திடீரென்று மத்திய தகவல் கமிசன் அரசின் பல துறைகளுக்கு இந்த செல்பேசி கோபுரங்களால் பாதிப்பு இருக்கின்றது என்றும் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் அறிவுறுத்தியுள்ளது.

இந்தப்பிரச்சனை சம்பந்தமாக பலகோணங்களில் ஆராய்ந்து ,
மத்திய தகவல் கமிசன் பரிசீலனை செய்து ஆணை பிறப்பித்துள்ளது. அந்த ஆணையில்,  உடல் மூலக்கூறுகள் பாதிப்பு , மூளை பாதிப்பு  புற்றுநோய் ஆகியவை இந்த செல்போன் கோபுரங்களிலில் வெளிப்படும் கதிரியக்கத்தால் ஏற்படும்  என்று அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டுள்ளது. ஆனால் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், அதன் வாரியம் இதுகுறித்து உரிய நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்று அதிர்ச்சியையும்  இந்தக் கமிசன் தெரிவித்துள்ளது.

மத்திய தகவல் ஆணையர் ஸ்ரீதர் ஆச்சார்யலு,
மத்திய சுற்றுச்சூழல், தகவல் தொடர்பு , மக்கள் நல்வாழ்வு அமைச்சகங்களுக்கும் , டெல்லி பெருநகர்  வளர்ச்சி குழுமத்திற்கும் இதுகுறித்து உரிய ஆணைகளை அனுப்பியுள்ளார்.

குறிப்பாக மக்கள் மத்தியில் இந்த பாதிப்புகள் பற்றி விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவதோடு, கல்வி நிலையங்கள் , மருத்துவமனைகள், பூங்காக்கள் , குழந்தைகள் அதிகம் நடமாடும் பகுதிகளில் செல்பேசி கோபுரங்கள் அமைக்கவேண்டாம் என்றும் தன் உத்தரவில் தெரிவித்துள்ளார்.

நமது உடலில்  சூரிய ஒளி காற்று மாசுகளைத் தடுக்கக் கூடிய, அளவினுடைய எதிர்ப்பு சக்தி  மிகவும் குறைவுதான். மேலும் வீரியமான செல்பேசி கோபுரங்களுடைய கதிவீச்சை நமது உடலமைப்பினால் ஒருகட்டத்திற்கு மேல் தடுக்க இயலாது என்ற உண்மை நிலை இன்றைக்கு வெளிப்பட்டுள்ளது.

கைப்பேசி இன்றைக்கு அவசியக் கருவி என்றாலும், தொடர்ந்து பேசுவதால் வரும் பாதிப்புகளை  அறியாவண்ணம் மக்கள் உள்ளனர். செல்பேசியே வாழ்க்கை என்று நினைப்பவர்கள் இந்த எச்சரிக்கையை உணரவேண்டும். அத்யாவசியத் தேவையான செல்போனால் பயனும் உள்ளது, அதே அளவு கெடுதலும் உள்ளது என்பதை அறிந்து இந்தப் பயன்பாட்டை கையாளவேண்டும்.

இப்படி பிரச்சனைகள் இருக்கும் பொழுது, மத்திய அரசு “செல்போன் கதிர்வீச்சுகளினால் அப்படி ஏதும் பாதிப்புகள் இல்லை என்றும், இதுவரை அதுபற்றி எந்த தகவலும் தங்கள் பார்வைக்கு வரவில்லை” என்றும் மழுப்பலாக பதிலளித்துள்ளது. இந்தக் கதையை எங்கே போய் சொல்ல?.

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
06-04-2015.




No comments:

Post a Comment

“One who believes in himself has no need to convince others.” @SabithaBojan

  “One who believes in himself has no need to convince others.” @SabithaBojan