Saturday, May 13, 2017

ஒரே நாடு ஒரே தேர்தல்


        நாடளுமன்றத்திற்கும் சட்டமன்றத்திற்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது என்று நாடாளுமன்ற நிலைக்குழுவின் ஆலோசனைப்படி மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.
        இதுவரை 1989 பொதுத்தேர்தலிலிருந்து கணக்கிட்டால் 31 முறை மக்களவைக்கும் பேரவைக்கும் சில மாநிலங்களில் ஒரே சமயத்தில் தேர்தல் நடந்திருக்கிறது. ஆந்திரம் (1989,1999,2004,2009,2014), கர்நாடகம் (1989,1999,2004), சிக்கிம் (2009,2014), தமிழ்நாடு(1989,1991,1996), மகாராஷ்டிரம் (1999), அசாம் (1991,1996), உத்திரப்பிரதேசம் (1989,1991), மேற்கு வங்கம் (1991,1996), அருணாசலப்பிரதேசம் (2009,2014), தெலங்கானா (2014).
        சட்டப்பேரவைக்கும் மக்களவைக்கும் இம்மாநிலங்களில் ஒரே சமயத்தில் தேர்தல் நடந்த போது, 24 தேர்தல்களில் பேரவைக்கும் மக்களவைக்கும் ஒரே விகிதத்தில் வாக்களித்திருக்கின்றனர்; 7 சந்தர்ப்பங்களில் மட்டுமே மக்களவைக்கு ஒரு கட்சிக்கும், மாநிலத்திற்கு வேறு ஒரு கட்சிக்குமாக வாக்களித்திருக்கின்றனர். ஆனால், பேரவைத் தேர்தலும் மக்களவை பொதுத்தேர்தலும் வெவ்வேறு தருணங்களில் நடந்த மாநிலங்களில் இதே காலகட்டத்திர் பெரும்பாலான தேர்தல் முடிவுகள் வெவேறாகவே இருந்திருக்கின்றன.
        ஒரே நேரத்தில் இரண்டு தேர்தலை நடத்த வேண்டுமென்று விரும்புவர்கள் வெட்டியான செலவை கட்டுப்படுத்தவும், தேவையற்ற தேர்தல் பணிகளும் நேரவிரயம் என்று காரணம் கூறுகின்றனர்.
        ஒரே நேரத்தில் இரண்டு தேர்தலை நடத்தக்கூடிய சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய வேண்டும். இந்தியா என்பது நிலப்பரப்பில் பூகோள ரீதியாக பெரிய நாடு. பல்வேறு தேசிய இனங்கள், மொழிகள் உள்ள நாடு. வேற்றுமையில் ஒற்றுமை என்ற நிலையில் இருந்தாலும் மாநிலங்கள் இடையே பல்வேறு பிரச்சனைகள் உள்ளன. இப்படிப்பட்ட சூழலில் ஒரு நாட்டுக்கு ஒரே தேர்தல் என்ற முறை சரிவருமா என்பது நீண்ட விவாதத்துக்குரிய பொருளாகும். தேர்தல் ஆணையம் வருடம் முழுவதும் தனது பணிகளுக்காக இயங்கிக் கொண்டிருக்கிறது. தேர்தல் சீர்திருத்தம் என்று பல்வேறு முன்னெடுப்புக்கள் பேசப்பட்டாலும் கிடப்பில் போட்ட கல்லாகவே உள்ளன.
        தேர்தலில் பணபலமும், புஜபலமும் உள்ள கிரிமினல்கள் வெற்றி பெறுகின்றனர். தகுதியே தடை என்று நேர்மையாளர்கள் நாடளுமன்றத்திற்கும், சட்டமன்றங்களுக்கும் செல்ல முடியவில்லை. குற்றவாளிகனின் அவையாக இவை திகழ்கின்றன. இந்த அவைகளின் மாண்பும், கண்ணியமும் போய்விட்டது. தேர்தலில் நேர்மையாளர்களும், ஆற்றலாளர்களும் வெற்றிபெற வேண்டுமெனில் தேர்தல் சீர்திருத்தங்களில் மத்தியஅரசும், தேர்தல் ஆணையமும் இணைந்து செயல்பட்டு முடிவுகளை மேற்கொள்ள வேண்டும்.
        விகிதிச்சார பிரதிநித்துவ தேர்தல் முறை, தவறு செய்யும் மக்கள் பிரதிநிதிகளை திரும்ப அழைத்தல் (Recall), அனைவரும் கட்டாயமாக வாக்களிக்கும் முறை போன்ற சீர்திருத்தங்கள் மக்கள் பிரதிநிதித்துவ சட்டங்களை கொண்டுவர வேண்டும்.
       
#தேர்தல்_சீர்திருத்தம்
#election_reforms
#ksrpostings
#ksradhakishnanpostings
கே.எஸ். இராதாகிருஷ்ணன்

13/05/2017

No comments:

Post a Comment

Funeral Procession of Veer Savarkar In Bombay-1966

  Funeral Procession of Veer Savarkar In Bombay-1966 பாரத நாட்டிற்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த ஒப்பற்ற சுதந்திரப் போராட்ட வீரர்...