Wednesday, May 10, 2017

மங்கலதேவி கண்ணகி கோட்டம்.

இன்று  10-05-2017சித்திரா பௌர்ணமி. 
மங்கலதேவி கண்ணகி கோட்டம்.
சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு .
------------------------------------
சித்திரா பௌர்ணமி யொட்டி கம்பம் பள்ளத்தாக்கில்  வண்ணாத்திப் பாறை அருகே அமைந்துள்ள “கண்ணகி கோட்டத்திற்கு” தமிழகத்திலிருந்து பயணிகள் செல்வது வாடிக்கை.

1975லிருந்து கேரளா கண்ணகி கோட்டத்தை ஆக்கிரமித்துக் கொண்டு,  இங்கே வழிபடச் செல்லும் தமிழக மக்களை கேரள காவல் துறையினர் தாக்குவதும்,  தடுப்பதுமாக தமிழர் விரோத நடவடிக்கைகளை மேற்கொண்டு வருந்தனர்.

தேவையில்லாத பதட்டங்களை உருவாக்கி, வழிபடச் செல்லும் தமிழர்களை பீதிக்கு உட்படுத்தி கடந்த 40 ஆண்டுகளாக கேரள காவல்துறையினர் அலைக்கழித்து வருகின்றனர்.

30 ஆண்டுகளுக்கு முன்பே இந்த பிரச்சனை தீவிரத்தை அடைந்த போது, கண்ணகி கோட்டம் அமைந்துள்ள இடம் தமிழகத்திற்குச் சொந்தமானது என்ற தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுத்தேன்.

சென்னை உயர்நீதிமன்றமும் என்னுடைய வழக்கை விசாரித்து,
“அங்கு செல்லும் தமிழர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதோடு, அமைதியாக வழிபாடு நடத்தவும் உரிய நடவடிக்கைகள் இருக்கவேண்டும் ” என்று கருத்தைத் தெரிவித்தது. இதன்பின்  கேரள காவல்துறையினர் தங்கள் அத்துமீறல்களை நிறுத்திவிட்டு அடக்கி வாசித்தனர்.

அன்றைய முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர், அப்போதைய குடியரசுத் தலைவர் ஜெயில்சிங்கிற்கு இந்தப் பிரச்சனையில் தலையிடும்படி கடிதம் எழுதினார்.

இந்த சமயத்தில் பழ.நெடுமாறன் அவர்களோடு நானும் கம்பம் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள, கண்ணகி கோட்டத்திற்கே சென்று சேதாரமான கண்ணகி சிலையினை தூக்கி நிறுத்தி, வழிபாட்டுக்கு உரிய தேவைகளை சீர்செய்தோம். இந்நிகழ்வில்  குமரி அனந்தனும் திடீரென எங்களோடு இடையில் வந்து  கலந்துகொண்டார். 
இந்த செய்தி அன்றைய பத்திரிகைகளில் முக்கியச் செய்திகளாக வெளிவந்தன.

இன்றைக்கும் கண்ணகி கோட்டம் அமைந்துள்ள இப்பகுதி தமிழகத்தின் எல்லைக்குள் இருந்தும், கேரளா அது தங்களுடைய மாநில எல்கைக்குட்பட்ட பகுதி என்று நாட்டாண்மை செய்து வருவது ஏற்றுக்கொள்ள முடியாதது.

இதில் வேதனை என்னவென்றால், இடுக்கி மாவட்ட ஆட்சித்தலைவர் கடந்த 07-04-15 அன்று  தேக்கடி வனத்துறை விருந்தினர் விடுதியில் நடத்திய கண்ணகி கோட்டம் சம்பந்தமான கூட்டத்தில்,  தேனி மாவட்ட ஆட்சித் தலைவரும், தமிழக அதிகாரிகளும் கலந்து கொண்டுள்ளனர். 

அந்த கூட்டத்தில்,  இடுக்கி மாவட்ட ஆட்சியர் சதீஷ், கண்ணகி கோட்டம் கேரளாவுக்குச் சொந்தமானது என்று சொன்னபோது, தேனி மாவட்ட ஆட்சியர் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் மௌனம் சாதித்தது இன்னும் வேதனையைத் தருகின்றது.

1965 காலகட்டத்திலிருந்து சிரமமில்லாமல் கண்ணகி கோட்டத்திற்குச் சென்று ஏழு நாட்கள் தமிழர்கள் விழா நடத்தினார்கள். 1980லிருந்து கேரள அரசு ஏழுநாட்கள் நடைபெற்ற விழாவை மூன்று நாட்களாகக் குறைத்தது. 1986லிருந்து ஒருநாள் விழாவாகக் குறைத்து கடுமையான சோதனைகளை மேற்கொண்டு, ஒருகட்டத்தில் தமிழர்கள் மீது லத்தி சார்ஜும் செய்தார்கள் கேரள காவல்துறையினர்.

இப்படியாக தொடர்ந்து  முறையற்ற தன்மையில் நடந்துகொள்ளும் கேரளக் காவல் துறையோடு தமிழகம் ஏன் இணங்கிப் போகவேண்டும்?. இது மேலும் நம் உரிமைகளை இழக்கின்ற நிலைப்பாட்டுக்கே இட்டுச் செல்லும்.

பிரிட்டிஷ் ஆட்சிகாலத்தில் எடுக்கப்பட்ட சர்வேகளில் கூட கண்ணகி கோட்டம்  தமிழகத்தைச் சேர்ந்த பூமி என்றே கணக்கில் காட்டப்பட்டுள்ளது. 1913 மற்றும் 1915ம் ஆண்டுகளில் ஆங்கில அரசு வெளியிட்ட வரைபடங்களிலும் தமிழகத்தில் எல்லைகளிலேயே கண்ணகி கோட்டம் அமைந்துள்ளது.

நாடு விடுதலைக்குப்பின் 1976ம் ஆண்டு தமிழக, கேரளா அதிகாரிகள் கூட்டாக நடத்திய சர்வேயில் கூட, கண்ணகி கோட்டம் தமிழக எல்கைக்குள் அமைந்தது என்றுதான் முடிவெடுத்தனர்.

இவ்வளவு அடிப்படை ஆதாரங்கள் இருந்தும், கேரளா அரசு முல்லைப்பெரியாரிலும், நெய்யாறிலும், பம்பாறு  போன்ற நீராதாரப் பிரச்சனைகளில் காட்டுகின்ற அராஜகப் போக்கையே கண்ணகிக் கோட்டத்திலும் காட்டுகின்றது.

சென்னை உயர் நீதி மன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல வழக்கின் ஆவணங்களையும் இந்தப் பதிவில் இணைத்துள்ளேன்.

#சித்திராபெளர்ணமி 
#கண்ணகிகோட்டம் 
#KSRadhakrishnanpostings
#KSRpostings 
-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
10-05-2017
  

No comments:

Post a Comment

*Some believe holding on and hanging in there are signs of great strength*

*Some believe holding on and hanging in there are signs of great strength*. However, there are times when it takes much more strength to kno...