Friday, November 29, 2024

கான மயிலாட வான்கோழி தன் பொல்லாச்சிறகை விரித்து ஆடுமாம்!

 கான மயிலாட வான்கோழி தன் பொல்லாச்சிறகை விரித்து ஆடுமாம்!

————————————— எனக்குத் தெரிந்தவரை முன்னாள் மத்திய அமைச்சர்கள் மாநில அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட மக்கள் பணியில் உள்ளவர்கள் அனைவரும் கருப்பு அல்லது ராயல் ப்ளூ என்று சொல்லக்கூடிய மையைப் பயன்படுத்தித்தான் அனைத்துக் கோப்புகளிலும் கையெழுத்து அன்று இடுவார்கள். இப்போது உள்ளவர்களைப் பார்த்தால் அவர்களுக்கு அரசியல் ஞானம் இருக்கிறதோ இல்லையோ இந்திய ஜனநாயக கான்ஸ்டிடியூஷன் அமைப்பு குறித்து எந்தப் பட்டறிவும் படிப்பறிவும் ஏதும் இல்லாமல் தான்தோன்றித்தனமாக இருக்கிறார்கள் ! பணம் செலவிட்டு நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினராகிவிட்டால் ஏதோ ஒரு பெரிய அதிகாரம் தன் கையில் கிடைத்து விட்ட மாதிரி நான் பச்சை மையில் தான் கையெழுத்துப் போடுவேன் என்பதாய் டாம்பீகம் செய்கிறார்கள். கெஜட்டட் அத்தாரிட்டியாம். அண்ணா சொன்னது போல நீங்கள் மக்கள் அலுவலர்கள் தான் அதிகாரிகள் இல்லை! என்னுடைய நீண்ட கால அரசியல் வாழ்வில் பார்த்து வந்தது உண்டு. அண்ணாவும் தான் எம்பி ஆனார் காமராஜரும் எம்பி ஆனார். இவர்கள் முதலமைச்சராகவும் இருந்தார்கள். போக மத்திய அமைச்சர்கள் சி சுப்பிரமணியம், அளகேசன் ஆர் வி சுவாமிநாதன் மற்றும் ஈவி கே சம்பத் மூத்த அரசியல்வாதிகளான நெடுமாறன் கலைஞர் மற்றும் பேராசிரியர் அன்பழகன் கம்யூனிஸ்ட் சார்பில் ஆகிய சங்கரையா, என். வரதராஜன் சோ.அழகர்சாமி எம்.கல்யாணசுந்தரம் போன்றவர்கள் எல்லாம் பொறுப்பில் இருந்த போது கோப்புகளில் கையெழுத்திட பச்சை மையைப் பயன்படுத்த மாட்டார்கள்! நெடுமாறன் போன்றவர்கள் நமது பெயர் தெரிந்தால் மட்டும் அதில் போதுமானது! நமது ஒப்புதல் இருக்கிறதா என்பது மட்டுமேதேவை! அது எந்த மையில் இருந்தால் என்ன என்று கேட்டார்கள்! அதெல்லாம் 30 40 ஆண்டுகளுக்கு முன்பு. அது மாதிரி ஒரு தகுதியும் இல்லாமல் இப்போது ஆட்சியில் இருப்பவர்களுக்கு அதிகாரம் கையில் கிடைத்து விட்டால் அந்தக்காலப் பிரபுத்துவ மனப்பான்மை வந்துவிடுகிறது. நான் பச்சைமையில் தான் கையெழுத்து விடுவேன் என்கிற பதவி இறுமாப்பும் கூடச் சேர்ந்து இருப்பதை நானும் பார்க்கிறேன். ஒரு புத்திசாலித்தனமும் இல்லாத பணத்தைக் கொடுத்துப் பதவியை வாங்கிய தான்தோன்றிகள் தான் இப்படி இருப்பார்கள். இதெல்லாம் அற்பப் பதவிச் சுகம் அன்றி வேறென்ன! கான மயிலாட வான்கோழி தன் பொல்லாச்சிறகை விரித்து ஆடுமாம்! #ksrpost #கேஎஸ்ஆர்போஸ்ட் 4-11-2024.

No comments:

Post a Comment

Funeral Procession of Veer Savarkar In Bombay-1966

  Funeral Procession of Veer Savarkar In Bombay-1966 பாரத நாட்டிற்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த ஒப்பற்ற சுதந்திரப் போராட்ட வீரர்...