Saturday, March 14, 2015

மோடியின் இலங்கை பயணம் .Modi's Srilanka visit.

மோடியின் இலங்கை பயணம் .Modi's Srilanka visit.
__________________________________




இரண்டுநாள் பயணமாக இலங்கைக்குச் சென்றுள்ள பிரதமர் மோடியின் பயணத்தில் , இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே விசா , இளைஞர் நலன், சுங்கவரி, கவிஞர் ரபீந்திரநாத் தாகூர் நினைவிடம்  என்ற நான்கு ஒப்பந்தகள் தான் கையெழுத்தாகியுள்ளன.

மேலும், இரயில்வே போக்குவரத்தும், கப்பல் போக்குவரத்தும், இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே துவக்கப்படும் என்ற பேச்சும் எழுந்துள்ளது.  ஒருகாலத்தில் போட்மெயில் என்ற இராமேஸ்வரம் எக்ஸ்பிரஸில் சென்னை எழும்பூர் இரயில் நிலையத்திலிருந்து இலங்கை தலைமன்னார் வரைக்கும் இரயில் டிக்கெட் வாங்குவதுண்டு.

தனுஷ்கோடி அழிந்தபின்னும், இலங்கைத்தமிழர் பிரச்சனைகள் எழுந்தபின்னும் இந்த போக்குவரத்து அறவே நின்றுபோனது.
இதெல்லாம் பழைய செய்தி. 1987ல் இராஜீவ்காந்திக்குப் பிறகு, இலங்கை செல்கின்ற இந்தியப் பிரதமர் மோடி ஆவார்.

பிரதமர் மோடியின் இலங்கை பயணத்தில்நாம்  என்ன எதிர் பார்த்தோம் என்றால்,

1. இலங்கையில் உள்ள வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள இராணுவத்தை திரும்பப்பெறவேண்டும் , இராணுவம் முகாமிட்டு தமிழர்களை பயத்தையும் பீதியையும் ஏற்படுத்தும் நிலை மாறவேண்டும் . அங்குள்ள தமிழர் வசிக்கும் கிராமங்களில் திருமண நிகழ்ச்சிகளில் மைக்செட் கட்டி பாடல்கள் இசைக்க வேண்டுமென்றால் கூட இராணுவத்தின் அனுமதி பெறவேண்டியுள்ளது.

2. தமிழர்கள் விவசாய நிலங்கள் அனைத்தையும் சிங்களவர்கள் பறித்துக்கொண்டார்கள். அந்நிலங்களின் உரிமையாளர்களிடம் அவற்றை திரும்ப ஒப்படைக்கவேண்டும்.

3. தமிழர்கள் வாழும் வடக்கு, கிழக்கு மாகாண கவுன்சிலுக்கு , காவல்துறை, நில நிர்வாகம், நிலவருவாய், மீன்பிடித்தொழில் போன்ற அதிகாரங்கள் பெற்றுத்தரவேண்டும். வரிகளும், வருவாயும் இல்லாமல் எப்படி மாகாண கவுன்சிலின் நிர்வாகத்தை நடத்த முடியும்.  மாகாண கவுன்சிலின் முதல்வர் விக்னேஸ்வரன் அலுவலகத்துக்கு பேனா பென்சில் வாங்கவேண்டுமென்றால் கூட ஆளுநர் மூலமாக கொழும்பு அரசாங்கத்தை கையேந்தவேண்டிய நிலை.

4. இந்தியப்பெருங்கடலில் இந்தியாவுடைய ஆளுமை நிலைக்கவேண்டும் என்றரீதியில் மோடி பேசியிருந்தாலும், அதை உறுதிபடுத்தும் நிலையில் எந்த ஒப்பந்தமும் இலங்கையோடு கையெழுத்தாகவில்லை. திரிகோணமலை பற்றி மோடி பேசியுள்ளார். ஆனால், அங்கு அமைய இருக்கின்ற எண்ணெய் கிடங்குகளைப் பற்றிய தீர்மானமான முடிவுகள் எதையும் மேற்கொண்டதாகத் தெரியவில்லை.

5. தொடர்ந்து நாம் குரல்கொடுத்துவருகின்ற, இலங்கையில் நடந்த இன அழிப்பைக்குறித்து சர்வதேச, சுதந்திரமான, நம்பகமான விசாரணை குறித்து தெளிவாகப் பேசி எந்த முடிவும்  மோடி மேற்கொள்ளவில்லையே?

6. இலங்கையில் அரசியல் தீர்வு ஏற்படும் வகையில், ஈழத்தமிழர், புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் ஐ.நாவின் மேற்பார்வையில் பொதுவாக்கெடுப்பு பற்றியும் மோடி வாய் திறக்கவில்லையே!?

இதையெல்லாம் விவாதப்பொருளாக மேற்கொண்டு இருநாட்டு முடிவுகள் வரவேண்டுமென்று நாம் எதிர்பார்த்தோம். ஆனால் மோடி சென்றார் வந்தார்.

எப்படி மைத்ரிபால் சிரிசேனா இந்தியாவுக்கு வந்து நாளந்தா உட்பட நான்கு ஒப்பந்தங்களில் கையொப்பமிட்டு வந்து போனாரோ, அதே பழைய குருடி கதவைத் திறடி கதையை மோடியும் கையாண்டுள்ளார். எல்லாமே பாசாங்கும் வேசமும்...........



#Modi_Srilanka_visit



-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்



No comments:

Post a Comment

6 august