Friday, March 8, 2024

வலி வேதனை ஏமாற்றம் எல்லாம் வாழ்க்கையின் இறுதிக்கட்டமல்ல. வாழ்க்கையைப் புரிந்துக் கொண்டு பயணிப்தற்கான முயற்சிக் கட்டம்.

வலி வேதனை
ஏமாற்றம் எல்லாம்
வாழ்க்கையின் இறுதிக்கட்டமல்ல.

வாழ்க்கையைப் புரிந்துக் கொண்டு
பயணிப்தற்கான முயற்சிக் கட்டம்.

தயங்குபவர்களுக்கும் பயப்படுபவர்களுக்கும் யோசிப்பவர்களுக்கும், இந்த உலகில் எதுவும்
சாத்தியமில்லை.

உங்களுடைய துணிவும் முயற்சியும் தான் வெற்றியின் முதற்படிகள்.

எதிர்பார்த்துக் காத்திருந்த ஒன்று 
எதிர்பாராமல் கிடைக்காது போகும்பொழுது உடல் , உளவியல் ரீதியாக  ஒரு தாக்கம் ஏற்படும் என்பது யதார்த்தமான உண்மை

ஆனால் இந்தப் பின்னடைவை வெற்றியின் முதற்படியாக எண்ணிக் கொண்டு உங்களுடைய நகர்வுகளை நிதானமாக நகர்த்த வேண்டும்.

அதை விடுத்து எதிர்பார்த்தது கிடைக்கவில்லை என்றவுடன் துவண்டு போய் மனவிரக்தியில் நமது முயற்சிகளை கைவிடக்கூடாது.

விடாமுயற்சி என்பது முடிந்தவரை முயல்வது இல்லை!
அது கிடைக்கும் வரை முயல்வதே விடா
முயற்சியாகும்.

(எங்கோ கேட்டது….)
****

முன்னேற்றம் என்பது காலத்தைக் குறிக்கிறது, இல்லையா?

என்ன இருந்தாலும், மாட்டு வண்டியில் இருந்து ஜெட் விமானத்தை அடைய நமக்குப் பல நூற்றாண்டுகள் ஆனது.

இப்போது, நாம் சத்தியத்தை அல்லது கடவுளையும் அதே வழியில், காலத்தின் மூலமாக கண்டறியலாமென நினைக்கிறோம்.

நாம் இங்கே இருக்கிறோம், நாம் கடவுள் அங்கு இருப்பதாகவோ, அல்லது தொலைவில் எங்கோ ஓரிடத்தில் இருப்பதாகவோ நினைக்கிறோம். 

மேலும் அந்த தூரத்தை , அந்த இடைப்பட்ட இடைவெளியைக் கடக்க நாம் காலம் தேவைப்படுகிறது என்கிறோம்.

அங்கு துவங்குவதற்கு ஒரு நிலையான இடம் கிடையாது, ஒன்றை நோக்கி செல்வதற்கும் நிலையான இடம் கிடையாது.

மனோரீதியான பாதுகாப்பிற்கான காரணங்களால் நாம் ஒவ்வொருவருக்கும் ஒரு நிலையான இடம் இருக்கிறது என்ற, சத்தியமும் ஒரு நிலையான ஒன்று என்றக் கருத்தைப் பிடித்துக் கொண்டுள்ளோம்.

ஆனால் அது ஒரு மாயை ஆகும், அது உண்மையல்ல.

நாம் மனதுக்குள்ளாக, ஆன்மீக ரீதியாக பரிணமிக்க அல்லது முன்னேற காலம் தேவையெனக் கூறும் கணம், அதன்பிறகு நாம் செய்துகொண்டு இருப்பது  ஆன்மீகம் கிடையாது, ஏனெனில் சத்தியம் காலத்திற்கு உட்பட்டது கிடையாது.

காலத்தின் பிடியில் இருக்கும் ஒரு மனம் சத்தியத்தைக் கண்டறியக் காலத்தைக் கோருகிறது. 

ஆனால் சத்தியம் காலத்திற்கும் அப்பாற்பட்டது, அதற்கு ஒரு நிலையான இடம் கிடையாது.

மனம் அதன் அனைத்து சேகரிப்புகளில் இருந்தும், உணர்வுநிலையில் மற்றும் உணர்வு அற்றநிலை இரண்டின், (Conscious and unconscious) விடுபட்டு இருக்கவேண்டும், மேலும் அப்போது மட்டுமே அது சத்தியம் என்றால் என்ன, கடவுள் என்றால் என்ன எனக் கண்டறியும் தகுதியுடையதாக இருக்கிறது.

••••

மனதின் கூக்குரல்

இன்னும்
எவ்வளவு நாட்கள்தான்
உன்னை நீயே
ஏமாற்றிக் கொண்டிருப்பாய்?
போதும் 
இனியாவது நிறுத்திக்கொள்
என்கிறது
மனதின் கூக்குரல்!

அன்பின் கிரக்கத்தில்
எள்ளல்களையும்
ஏமாற்றங்களையும்
சுமக்கவியலா அளவிற்கு
முதுகில் ஏற்றிக்கொண்டாயிற்று!

ஒடிந்து வீழ்வதற்குமுன்
இனியேனும் 
ஒவ்வொன்றாய்
இறக்கிவைத்திட வேண்டும்!

இல்லாத ஒன்றை
இருப்பதாய் நம்பித் தொலைக்கும்
எண்ணங்களுக்கு
உண்மையை உணர்த்தும்படியான
ஒரு கடிவாளம் இடவேண்டும்!

எதற்குள்ளும் 
தன்னை அடைத்துக்கொள்ளாத
எதனின்றும் 
தாமரையிலை நீராய்
விலகி நிற்கின்ற பக்குவத்தை
வளர்த்தெடுக்க வேண்டும்! 

இருக்கும் சொற்ப காலத்தை
பாசாங்கில்லாப் பாதையில் 
பயணம் செய்வதற்காய்
பழக்கப்படுத்த வேண்டும்! 

இப்பயணத்தின் நிறைவாய்
தென்றலின் வருடலில்
கிளைநழுவும் இலைபோல
காற்றுவெளிதனில்
மெள்ள மெள்ள 
உயிர்நழுவும் சுவையை 
சுகித்திட வேண்டும்!

#வானதி_சந்திரசேகரன்

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
7-3-2024


No comments:

Post a Comment

Yoga day column by VP

  Yoga day column by VP @CPR_VP in Tamil Dinamani, today 20- 6-2026 @narendramodi @PMOIndia @AmitShah @nsitharaman @NitinNabin @...