Sunday, April 30, 2017

நாட்டின் யதார்த்த நிலை.

நாட்டில் கோடிக்கணக்கில் கொள்ளையடிப்பவர்களை விட்டு விடுகிறீர்கள்; அவர்கள் எல்லாம் சுகபோகமாக வாழ்கிறார்கள். ஆனால் சேலை திருடியவரை பிடித்து சிறைக்குள் போடுகிறார்கள்," என்று போலீசாரைப் பார்த்துக் கேட்டாராம் நமது நாட்டின் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி.
ஓர் நிறுவனம் ஜூலை 2015 முதல் ஜனவரி 2017 வரை 16 ஆசிய - பசிபிக் நாடுகளில் ஒரு ஆய்வை நடத்தியது. அது இலஞ்சம் கொடுத்து, தங்கள் காரியத்தைச் சாதித்துக் கொள்வது பற்றிய ஆய்வு. இந்தியாவில் 69% மக்கள் இலஞ்சம் கொடுத்துத்தான் தங்கள் காரியங்களை சாதிக்க முடிகிறது என அந்த ஆய்வு கூறுகிறது. ஆசிய பசிபிக் நாடுகளில் இலஞ்ச ஊழலில் முதலிடம் பெறுவது நமது நாடுதானாம்! இலஞ்சம் பெறுவதில் முதலிடம் பெறுவது காவல் துறை; இரண்டாம் இடம் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு; மூன்றாமிடத்தைப் பிடிப்பவர்கள் அரசு அதிகாரிகள்.
ஐக்கிய நாடுகளின் சபை மனிதவள மேம்பாட்டுக் குறியீடு" பற்றி 188 நாடுகளிடையே ஒரு ஆய்வை நடத்தியது. ஏற்கனவே 130வது இடத்திலிருந்த இந்தியா தற்போதைய ஆய்வில் 131வது இடத்திற்கு சரிந்துள்ளது. நமது அண்டை நாடுகளான பாகிஸ்தான் மற்றும் மாலத்தீவுகளைக் காட்டிலும் பின்தங்கியுள்ளது நமது நாடு.
கடந்த இரண்டரை ஆண்டுகளாக ஊழலற்ற ஆட்சி நடததி வருவதாகவும், நாடு முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டு இருப்பதாகவும் மேடைகள் தோறும் முழங்கிக் கொண்டிருக்கும் மத்திய ஆட்சியாளர்களுக்கு மேற்கண்ட கூற்றுக்கள் சமர்ப்பணம். இவற்றைவிட அதிர்ச்சி தரக்கூடிய இலஞ்ச லாவண்யங்களும் நாட்டில் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.
‘தி இந்து’ ஆங்கில நாளேடு சில செய்திகளை வெளியிட்டு வருகிறது. பிரிட்டன் நாட்டு உச்ச நீதிமன்றம், அந்நாட்டைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவரும் ‘ரோல்ஸ் ராய்ஸ்’ என்ற எஞ்ஜினியரிங் நிறுவனத்திற்கு 809 மில்லியன் பவுண்ட் (ரூ. 5500 கோடி) அபராதம் விதித்தது. எதற்கு தெரியுமா? அந்நிறுவனம் எஞ்ஜினியரிங் தொடர்பான ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக இடைத் தரகர்கள் மூலம் இலஞ்சம் கொடுத்ததாம். இந்தியாவில் விமானப் படை மற்றும் கப்பல் படையில் இஞ்ஜினியரிங் தொடர்பான ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக இடைத்தரகர்கள் மூலம் மத்திய அரசின் உயர் அதிகாரிகளுக்கும், மத்திய ஆட்சியாளர்களுக்கும் பெருத்த தொகைகள் கொடுத்ததாம்.
இதேபோல அமெரிக்காவைச் சேர்ந்த ‘மோண்டெலஸ் இண்டர்னேசனல்’ என்ற நிறுவனத்திற்கு 1 கோடியே, 30 லட்சம் அமெரிக்க டாலர் அபராதம் விதிக்கப்பட்டது. ஏன்? இந்நிறுவனம் இந்தியாவிலுள்ள இமாசலப் பிரதேஷ் மாநிலத்தில் சாக்லேட் தயாரிக்க லைசன்ஸ்கள் பெறுவதற்காக அரசின் உயர் அதிகாரிகளுக்கும், ஆட்சியாளர்களுக்கும் கோடிக் கணக்கில் இலஞ்சம் கொடுத்தது. இதே காரணங்களுக்காக அமெரிக்காவைச் சேர்ந்த ‘காக்னிசண்ட்’ நிறுவனத்துக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. அபராதத்தின் அளவே பல ஆயிரம் கோடிகள் எனில், அவர்கள் கொடுத்த இலஞ்சத்தின் அளவு பல லட்சம் கோடிகளாக இருக்கும்! இலஞ்சம் கொடுத்தவர்கள் தண்டிக்கப்பட்டு விட்டனர். இலஞ்சம் வாங்கியவர்கள் தண்டிக்கப்படுவது எப்போது?
இன்றைய இந்தியாவின் சமூக, அரசியல் சூழ்நிலைகளில் ஒரு உயர்ந்த தத்துவத்தை சுவீகரித்துக் கொண்டு, மக்களுக்கு சேவை செய்பவர்கள் ஏமாளிகள் என ஏளனம் செய்யப்படுகிறார்கள். ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்திக் கொண்டு மக்களை கொள்ளையடித்து சம்பாதிப்பவர்கள் கெட்டிக்காரர்கள் என்று பாராட்டப்படுகிறார்கள். சாதி, மத வேற்றுமைகளைக் களைந்து, மக்களின் ஒற்றுமைக்காகப் போராடுபவர்கள் பிழைக்கத் தெரியாதவர்கள் என தூற்றப்படுகிறார்கள். சாதி, மத வெறியூட்டி மக்களைப் பிரித்து, அதன் மூலம் ஆட்சிக் கட்டிலில் அமர்பவர்கள் சாணக்கியர்கள் எனப் புகழப்படுகிறார்கள்! மனிதனின் வரலாற்றில் காலச்சக்கரம் ஒருபோதும் பின்னோக்கிச் சுழல்வதில்லை. ‘ஹிட்லர் போன்ற சர்வாதிகாரர்களால் காலச்சக்கரம் கொஞ்சம் பின்னோக்கித் தடுமாறக்கூடும் அல்லது சிறிது காலம் தேங்கி நிற்கக் கூடும். அதன் முன்னோக்கிய பயணத்தை யாராலும் தடுக்க முடியாது. இம்முன்னேற்றம் தானாக நிகழாது. உழைக்கும் வர்க்கத்தின் இடைவிடாத போராட்டங்களால்தான் இம்முன்னேற்றப் பயணம் சாத்தியம். இப்போராட்டங்களில் நம் ஒவ்வொருவர் பங்கும் அவசியம்.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
30-04-2017

No comments:

Post a Comment

*Learn in life for every inch of sadness lies a foot of happiness ahead*

*Learn in life for every inch of sadness lies a foot of happiness ahead*. Learn that the simplest of times brings the grandest of pleasures ...