Thursday, July 9, 2015

கி.ரா- Ki. Rajanarayanan .




கி.ரா- Ki. Rajanarayanan .
_________________________________

கதைசொல்லி 29-வது இதழின் பணிகள் நடந்துகொண்டிருந்த நேரத்தில்,நேற்றைக்கு (08-07-2015) கி.ரா தன்னுடைய படைப்புகளை அனுப்பி அத்துடன் ஒரு கடிதத்தையும் அனுப்பி இருந்தார். அந்தக் கடிதத்தைப் படித்தவுடன் பதட்டமான மனநிலையே ஏற்பட்டது. அவர் எழுதி இருந்த இறுதி வரிகள் கண்ணீர்த்துளிகளை வரவழைத்தது. 

 கி.ரா என்னிடம் அதிகமாக பேசமாட்டார். நேரிலோ, தொலைப்பேசியிலோ பேசும்போதுகூட, என்ன? எப்படி? அரசியல் நிலவரங்கள் என்ன? என்பதோடு சரி. கணபதியம்மாள் மட்டும் என்னிடம் குடும்பம், ஆரோக்கியம் மற்றைய விசயங்களை விரிவாகப் பேசுவார். கி.ரா தந்தை தனயன் என்ற உறவோடு என்னுடைய நிலையில் அக்கறை செலுத்துவார்.

கி.ரா அனுப்பியிருந்த கடிதத்தின் இறுதி வரிகளைப் பார்த்தவுடன், ஏன் இப்படி அவசியமில்லாமல் எழுதி இருக்கிறார்கள் என்று மன உறுத்தலையே தந்தது. கி.ரா அவர்கள் நூறாண்டுகளுக்கும் மேலாக வாழ வேண்டும். 

கி.ராவின் 85வது பிறந்தநாளை சென்னையிலும், 90வது பிறந்தநாளை டெல்லியிலும் விழாவாக எடுக்க காரணமானவன் என்ற நிலையில், கி.ராவின் நூற்றாண்டு விழாவினையும் எடுக்கவேண்டுமென்ற மனநிலையில் இருப்பவன். நூறாண்டுகளுக்கும் மேலாக அவரது பணி தமிழ்கூறு நல்லுலகம் பயன்பெற சிறக்க வேண்டும் என்ற மனதிடமும் என்னிடம் உள்ளது. 

சமீபத்தில் தினமணி ஆசிரியர் வைத்தியநாதன் அவர்களோடு, புதுச்சேரி லாசுப்பேட்டை இல்லத்தில் கி.ராவைச் சந்தித்த போது  92வயது நிரம்பியவர் என்று தெரியவில்லை. அவ்வளவு அபார நியாபக சக்தியும் செயல்பாடும் நிரம்பியவர்.

கரிசல் இலக்கியத்தின் முன்னத்தி ஏர் பிடித்தவர் படைப்பாளி, கதைசொல்லி, விவசாயி, உரிமை ஆர்வர்லர், பொதுவுடைமை வாதி, மனித நேயம் மிக்கவர், இளம்படைப்பாளிகளை ஊக்குவிக்கும் பிதாமகன், நாட்டுப்புறவியல் அறிஞர், ரசிகமணி டிகேசி வழியில் விவாதிப்பவர் என்ற பன்முகத் தன்மை கொண்ட கிரா நம்மிடையே இருக்கும் மூத்த எழுத்தாளர் ஆவார். 

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
09-07-2015

No comments:

Post a Comment

*Learn in life for every inch of sadness lies a foot of happiness ahead*

*Learn in life for every inch of sadness lies a foot of happiness ahead*. Learn that the simplest of times brings the grandest of pleasures ...