Sunday, June 20, 2021

தினத்தந்தி_விடையம்

#தினத்தந்தி_விடையம்
————————————-
இன்றைக்கு பழைய கோப்புகளைத் தேடிக் கொண்டிருக்கும் பொழுது நண்பர்கள் வழக்கறிஞர்கள் பாத்திமாநாதன், அறிவுடைநம்பி ஆகியோரின்  பழைய நகல் கடிதங்கள் கிடைத்தன. 

இந்தக் கடிதம் என்னவென்றால் அன்றைக்கு தினத்தந்தி  நிர்வகத்தை ஒரு பொது அறக்கட்டளையாக அமைக்க வேண்டும் என்று ராமச்சந்திர ஆதித்தனாருக்கும், சிவந்தி ஆதித்தனாருக்கும் இடையே நடந்த ஒரு சிவில் வழக்கு தொடர்பானது. அந்த சிவில் வழக்கு மேற்சொன்ன வழக்கறிஞர்கள் பாத்திமா நாதனும்,அறிவுடை நம்பியும், தாக்கல் செய்திருந்தார்கள்.அட்வகேட் ஜெனரலாக  1989இல்  இருந்த மூத்தவழக்கறிஞர் மறைந்த அழகிரிசாமியின் ஆலோசனை பெற்று இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.





(Case No-Application No:33/1994 in
CS No…./1994on the file Highcourt,Madras-original side)
அப்பொழுது மதிமுக பிரிந்த நேரம் 1993-1994 கட்டம். ஒருநாள் வைகோ அழைத்து, “சிவந்தி ஆதித்தனார் என்னிடம் பேசினார். அவருடைய வழக்கில் ஒரு சிக்கல் இருக்கின்றதாம்… அதை நீங்கள் சட்ட பூர்மாக முடித்துக் கொடுக்க வேண்டும்.  அவருக்கும் அவருடைய சகோதரருக்கும் இடையே சமாதானம் செய்து வைக்க வேண்டும்…” என்று கூறினார். ஆனால் எனக்கு என்ன என்று புரியவில்லை. 

அதன்பிறகு சிவந்தி ஆதித்தனார்
என ஒரு நாள் என்னுடைய அடையார் இந்திராநகர் வீட்டிற்கு தினத்தந்தி தலைமை செய்தி ஆசிரியர் திருவடியுடன்
வந்திருந்தார்.

அவர்கள் வந்த நேரம் விடியற்காலை என்பதால்,  நான்  நடைபயிற்சி முடித்துக்கொண்டு, பத்திரிகைகளை பார்த்துக்கொண்டிருந்தேன். அவர்கள் திடீரென்று வந்ததால் எனக்கு ஒன்றும் புரியவில்லை.

அப்போது,சிவந்தி  “வைகோ உங்களிடம் பேசினாரா…” என்று கேட்டார்.“ஆமாம் பேசினார்..” எனக் கூறினேன். அது குறித்த முழு விவரங்களையும் என்னிடம் எடுத்துக் கூறினார் சிவந்தி ஆதித்தனார்.

அதாவது இந்த வழக்கு தினதந்தி சொத்து குறித்த வழக்கு. இதில் நீங்கள் தலையிட்டு, அதை திரும்பப் பெற்றால் தான் நான் (தினத்தந்தி)இயங்க முடியும். அதை நீங்கள்தான் செய்ய வேண்டும். நீங்கள் நிச்சயமாக செய்வீர்கள் என்று வைகோ சொன்னார். 

உங்களை காமராஜர்-நெடுமாறன் காலத்திலிருந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன். நீங்கள் நிச்சயமாக இதைச் செய்து தர வேண்டும். உங்களால் முடியும்” என்று சொல்லிவிட்டு சென்று விட்டார்கள். 

பிறகு, பாத்திமாநாதன் மற்றும் அறிவுடை நம்பியை சந்தித்துப் பேசி அந்த வழக்கு சட்டப்படி திரும்பப் பெறப்பட்டது. அந்த மார்ச் 1994 இல் வழக்கு  சென்னை உயர்நீதி மன்றத்தில் அன்றைக்குத்  திரும்ப பெறவில்லை என்றால், பல சிக்கல்கள் தந்தி நிர்வாகத்தில் ஏற்பட்டு, அந்த தினத்தந்தி கட்டிடமும் தினத்தந்தி பத்திரிகையும் வேறு விதமாக வேறொரு டிரஸ்ட் நிர்வாகத்திற்கு சென்றிருக்கும். 
இவை அனைத்தும் பலருக்கு இன்று தெரியாது. 

இதுநடந்து28ஆண்டுகளுக்கு முன்னதாக நடந்தது. இதைப் பதிவு செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடனே செய்துள்ளேன். தவறான எந்த நோக்கத்துடனும் செய்யவில்லை. 

இது சகோதரர்களிடையே நடந்த சண்டை. அவர்கள் இருவரும் இன்றைக்கு இல்லை. இதற்கெல்லாம் சாட்சியாக இருப்பது மாலை மலரில் உள்ள செய்தியாளர்முருகன்(சுசீந்திரம்). இந்த வழக்கை முடித்துத் தரும்வரை தினமும் என்னைச் சந்தித்துப் பேசுவார். நீதிமன்றத்திற்கும் வருவார். அவர் தான் இதற்கெல்லாம் இன்று சாட்சி. 

காலங்கள் ஓடிவிட்டன. செய்த பணியை சிலர் மறந்து விடலாம், அல்லது கவனிக்கப்படாமல் இருக்கலாம். நல் பணியை செய்தோம் எனக்கு ஒரு திருப்தி. அவ்வளதான்.ஆனால், நடந்தவற்றைச் சொல்ல வேண்டுமல்லவா, அதற்காகத் தான் இந்தப் பதிவே தவிர,  வேறு எந்த நோக்கத்திற்காகவும் அல்ல.

#KSRPostings
#KSRadhakrishnan_Postings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
20-6–2021.

No comments:

Post a Comment

#கொடுக்காய்புளி - #அழகர்கோவில்

#கொடுக்காய்புளி காலம்(சீசன்) மதுரை- #அழகர்கோவில் சிலம்பாறுபாயும் தென் திருமாலிருச் சோலையே... -#பெரியாழ்வார் # அழகர்கோவில் #கேஎஸ்ஆர்போஸட் #ks...