Wednesday, March 22, 2023

#யாழ் ஆறுமுகநாவலர். Arumuga Navlar - Jaffna

இன்றைய (22-3-2023)தினமணியில்
#அறிஞர் பெருமான் ஆறுமுகநாவலர் என்ற எனது கட்டுரை வெளிவந்துள்ளது

#யாழ் ஆறுமுகநாவலர்.

-வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

யாழ்ப்பாணத்திலிருந்து தமிழரசுக் கட்சி தலைவரும் நீண்டகாலம் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்த சகோதர்ர்  மாவை சேனாதிராஜா  கடந்த வாரம் ஆறுமுக நாவலருடைய சிலையை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி, திருக்கேதீச்சரம், சம்பூர், யாழ்ப்பாணம் சைவபரிபாலன சபை வளாகம் ஆகிய இடங்களில் நிறுவியுள்ளதாக 01.03.2023 அன்று தெரிவித்தார். 

இருமுறை யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசாமி கோவில் அருகே உள்ள ஆறுமுக நாவலர் பூர்வீக வீட்டிற்கு நான் சென்ற போது, இடிபாடான முட்டுச் சுவர்களாகவே அது காட்சியளித்தது. அங்கே ஆறுமுகநாவலரை நினைவில் சொல்லக் கூடிய அளவில் அவருடைய முழு உருவப் படம் கூட இல்லாமல் இருந்தது வேதனையை ஏற்படுத்தியது. 

சைவமும் தமிழும் வளர்ந்த மண் ஈழம். அங்கு தற்போது 360சிறு, நடுத்தர, பெரிய சைவ கோவில்கள் அழிக்கப்பட்டுள்ளன என்பதை நானே நேரில் சென்றபோது அறிந்தேன்.

நாவலர் என்று சொன்னால், அது  யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலர்தான். இவருக்குப் பின் நாவலர் சோமசுந்தர பாரதி. இதற்கு பின் மற்றவர்கள்  தங்களை ஒப்புக்கு நாவலர் என்று போட்டுக் கொள்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. 

இலங்கையும், இந்தியாவும் ஐரோப்பியர் ஆட்சியின் கீழ் இருந்த போது சைவமும், தமிழும் பெரும் ஆபத்துக்களை எதிர்நோக்க வேண்டியிருந்தது. இலங்கையில் சைவ சமயம் அந்நிய ஆட்சியின்போது சிறிது நலிவுற்றிருந்தது. அந்த காலகட்டத்தில் தோன்றியவர் தான்  ஆறுமுகநாவலர். 

இலங்கைக்கு வணிக நோக்கோடு வந்த அந்நிய ஆட்சியாளர், தமது  அரசியலாதிக்கத்தை ஏற்படுத்தவும், தமது சமயக் கொள்கையை பரப்பவும் எண்ணம் கொண்டனர். அதற்காக அவர்கள் கல்வி வழிப் பிரசாரம் செய்தனர். அதில் ஈடுபாடு கொண்ட மக்கள் தங்களுடைய சமய, கலாசார வழிகளை மறந்து வாழத்  தலைப்பட்டனர். 

இந்த நிலையில் சைவத்தையும் தமிழ்க் கல்வியையும் மீட்டு எடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் உழைத்தவர்தான் ஆறுமுக நாவலர்.  

கிறித்துவப் பாதிரிகளின் கல்விக் கொள்கையில் கிறித்துவத்துக்கும் கல்விக்குமிருந்த தொடர்பைப் போலவே, சைவத்தையும் கல்வியையும் இணைக்க வேண்டும் என்று ஆறுமுக நாவலர் முயற்சி செய்தார். இதுவே அவருடைய வாழ்வின் முக்கிய பங்களிப்பாக இருந்தது. 

யாழ்ப்பாணம், நல்லூர் என்னும் ஊரில் 1822 டிசம்பர் 18 - இல்  கந்தப்பிள்ளை – சிவகாமி அம்மையார் தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தார். இயற்பெயர் ஆறுமுகம்பிள்ளை. பூட்டன் இலங்கைக்காவல முதலியார், தகப்பனார் ப. கந்தப்பிள்ளை, பேரன் பரமானந்தர் ஆகிய அனைவருமே தமிழ் அறிஞர்கள். எல்லாருமே அரசுப் பணியாளர்கள். நாவலரின் நான்கு மூத்த சகோதரர்களும் அரசுப் பணியாளர்களே.  

ஆறுமுக நாவலரின் தொடக்கக் கல்வி அவருடைய  ஐந்தாவது வயதில் வீட்டிலேயே தொடங்கியது. நல்லூர் சுப்பிரமணிய உபாத்தியாயரிடம் நீதி நூல்களையும் தமிழையும் கற்றார். ஒன்பதாவது வயதில் தந்தையை இழந்தார். அவருடைய மூத்த தமையனாரால் முதலில் சரவணமுத்துப் புலவரிடமும் பின்னர் அவரது குருவாகிய சேனாதிராச முதலியாரிடமும் உயர் கல்வி கற்க அனுப்பப்பட்டார். 

தமிழ் இலக்கியம், இலக்கணம், சாஸ்திரங்கள், சிவாகமங்களைக் கற்றார்.  பன்னிரண்டாவது வயதிலேயே தமிழ், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளைக் கற்று புலமை பெற்றார். 

யாழ்ப்பாணத்தில் அக்காலத்திலிருந்த  ஆங்கிலப் பாடசாலையான வெஸ்லியன் ஆங்கிலப் பாடசாலையில் (இக்காலத்து யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி) கற்று ஆங்கிலத்திலும் திறமை பெற்றார். 1841 ஆம் ஆண்டு அவருடைய 19-வது வயதில் அப்பாடசாலையில் ஆசிரியராகப் பணியேற்றார். 

சைவத் தமிழ்ப் பண்பாட்டுக்கு இசைவான கல்வி, சைவசமய வளர்ச்சி, தமிழ் வளர்ச்சி ஆகிய நோக்கங்களுக்காகப் பணிபுரிய என்ற எண்ணமே ஆறுமுக நாவலருக்குள் முதன்மை பெற்று இருந்தது. 

இவரது முதல் சொற்பொழிவு வண்ணார்பண்ணை வைத்தீஸ்வரன் கோவிலில் 1847- ஆம் ஆண்டு டிசம்பர் 31- ஆம் தேதி நடைபெற்றது. பின்னர் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் சொற்பொழிவு ஆற்றினார். இவரது சொற்பொழிவைக் கேட்டு நிறையப் பேர் மது அருந்தும் பழக்கத்தைக் கைவிட்டனர். புதிதாகக் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிச் சென்றிருந்தவர்கள் மீண்டும் சைவ சமயத்திற்கே திரும்பினர். அப்படி மாறி வந்தவர்களுள் ஒருவர்தான் கிங்ஸ்பரி என்பவர். பின்னாளில் அவர் சி.வை.தாமோதரனார் என்னும் புகழ்வாய்ந்த தமிழறிஞர் ஆனார். சென்னைப் பல்கலைக்கழகத்தின் முதல் பட்டதாரி என்னும் பெருமைக்குரியவர் சி.வை.தாமோதரம்பிள்ளை. இவர் மாநிலக்கல்லூரியின் தமிழ்ப் பேராசியராகப் பணிபுரிந்தார்.  பின்னர், நாவலரைப் போல் பதிப்புப்பணியிலும் ஈடுபட்டார் என்பது குறிப்பிட வேண்டிய விடயமாகும்.

சைவ சமயத்தவர் ஒரு சிலரிடம் காணப்பட்ட தவறான பழக்க வழக்கங்கள், செயல்கள் ஆகியவற்றை நீக்க முயன்றார். அதற்காக அவர் 1848- ஆம் ஆண்டில் வண்ணார்பண்ணையில் சைவப்பிரகாச வித்தியாசாலை என்ற பெயரில் ஒரு சைவப் பாடசாலையைத் தொடங்கினார். சமய வளர்ச்சிக்குத் தமது முழு நேரத்தையும் செலவிடத் தீர்மானித்தார். அதற்காக செப்டம்பர் 1848 - இல் தமது மத்திய கல்லூரி 3 பவுன் மாதச் சம்பள ஆசிரியப் பணியைத் துறந்தார். 

சைவப் பிள்ளைகளுக்குப் பாடநூல்கள் அச்சிடுவதற்கு அச்சியந்திரம் வாங்குவதற்காக நல்லூர் சதாசிவம்பிள்ளையுடன் 1849 ஆண்டு சென்னை சென்றார்.  திருவாவடுதுறை ஆதீனத்தில் சைவப்பிரசங்கம் செய்து தமது புலமையை வெளிப்படுத்தி நாவலர் பட்டத்தைப் பெற்றார். சென்னையில் சிலகாலமிருந்து சூடாமணி நிகண்டுரையும் சௌந்தரியலங்கரி உரையையும் அச்சில் பதிப்பித்தார்.   ஓர் அச்சியந்திரத்துடன் யாழ்ப்பாணம் திரும்பினார். 

தமது இல்லத்தில் வித்தியானுபாலனயந்திரசாலை என்னும் பெயரில் ஓர் அச்சுக்கூடம் நிறுவி பாலபாடம், ஆத்திசூடி, கொன்றைவேந்தன் உரை, சிவாலயதரிசனவிதி, சைவசமயசாரம், கொலை மறுத்தல், திருச்செந்தினிரோட்டக யமகவந்தாதியுரை, திருமுருகாற்றுப்படையுரை போன்ற பல நூல்களை அச்சிட்டார். திருத்தொண்டர் பெரியபுராணத்தை வசன நடையில் எழுதி அச்சிட்டார். ஞானக்கும்மி, யேசுமதபரிகாரம், வச்சிரதண்டம் ஆகிய நூல்களை வெளியிட்டார்.

தமிழ் நூல்களை முதன் முறையாகச் செவ்வையான வகையில் பதிப்பித்தவர் ஆறுமுகநாவரே. திருக்குறள் பரிமேலழகர் உரை திருவிளையாடல் புராணம், பெரியபுராணம் போன்ற இலக்கிய, இலக்கண நூல்களையும் நூல்களையும் பிழையின்றிப் பதிப்பித்தார். 

இவரது பணி, இலங்கையில் மட்டுமன்றி, தமிழ்நாட்டிலும் பரவியிருந்தது.  சென்னையில் திருவாசகம், திருக்கோவையார் நூல்களை 1859 ஆண்டு வெளியிட்டார். பெரிய  அச்சியந்திரம் ஒன்றை வாங்கி, சென்னை தங்கசாலைத் தெருவில் வித்தியானுபாலன இயந்திரசாலை என்ற அச்சகம் நிறுவினார். அங்கே பல நூல்களையும் அச்சிட்டார். 

சென்னையிலும் திருவாவடுதுறை மற்றும் திருநாகைக்கோராணம் ஆகிய இடங்களிலும் தங்கி சைவப் பிரசங்கங்கள் செய்தார். அதற்குப் பிறகு 1862 பங்குனி மாதம் யாழ்ப்பாணம் திரும்பினார்.

 அவரின் கல்விப் புலமையையும், நாவன்மையையும், சைவத் தமிழ் பணிகளையும் பாராட்டி திருவாடுதுறை ஆதீனம் அவருக்கு ‘நாவலர்’ என்ற பட்டத்தை வழங்கியது. சைவம் காத்த நாவலர் பெருமானை சைவமக்கள் ஐந்தாம் சமயக்குரவர் எனப் போற்றுகின்றனர். 

1863 இல் மீண்டும் தமிழகம் சென்று, அங்கு இராமநாதபுர சமஸ்தானத்தில் பிரசங்கம் செய்தார்.  

1863 இல் சென்னை வந்தபோது தமிழ்நாட்டில் தொடர்ந்து நான்கு வருடங்கள் தங்கினார். 

குன்றக்குடியிலுள்ள திருவண்ணாமலை ஆதீனத்தில் அவர் செய்த பிரசங்கத்தைப் பாராட்டி, தம்பிரான்கள், ஓதுவார்கள் சூழ்ந்து வர ஆறுமுக நாவலரைப் பல்லக்கில் ஏற்றித் சகல விருதுகள், மங்கல வாத்தியங்களுடன் பட்டணப் பிரவேசம் செய்வித்தார்கள். அங்கிருந்து திருப்பெருந்துறை, திருப்பள்ளிருக்குவேளூர், சீர்காழி ஆகிய தலங்களை வணங்கிச் சிதம்பரம் சேர்ந்தார். 1864-ஆம் ஆண்டு சிதம்பரத்தில் சைவப் பிரகாச வித்தியாசாலை எனும் பெயரில் பாடசாலையொன்றை நிறுவினார். சிதம்பரத்தில் இவரின் பணிகள் அதிகம். அங்கிருக்கும் நடராஜரை மிகவும் பூஜித்தார்.

1866 - இல் சிதம்பரத்திலிருந்து சென்னைக்குத்  திரும்பி சைவப் பிரசங்கங்கள் செய்வதிலும் நூல்கள் அச்சிட்டு வெளியிடுவதிலும் நாவலர் ஈடுபட்டார்.

ஆங்கிலேயர் நிறுவிய கல்விக்கூடங்களுக்குப் பதிலாக 1870-இல் நாவலர் கோப்பாயில் ஒரு தமிழ்ப்பாட சாலையைத் தொடங்கி தமது செலவில் நடத்தினார்.  ஆனால் மக்கள், ஆங்கில ஆட்சிப் பணிகளுக்கு தமிழ்ப் பாடசாலைகளில் படித்தால் வாய்ப்புக் கிடைக்காது என்று நினைத்ததால், தங்களுடைய பிள்ளைகளைத் தமிழ்ப் பாடசாலைக்கு அனுப்பவில்லை. 

ஆறுமுக நாவலருக்கும் வள்ளலாருக்கும் சிக்கல்கள் ஏற்பட்டு அது வழக்குமன்றம் வரை போன பிறகும் கூட, நாவலர் அதைப் பொருட்படுத்தாமல், வள்ளலாரின் மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் கொண்டிருந்தார்.. 

1871 - இல் வண்ணார்பண்ணையில் ஜோன் கில்னர் என்பவர் நடத்திய வெசுலியன் ஆங்கிலப் பாடசாலையில் சைவ மாணாக்கர் விபூதி அணிந்து சென்றதற்காகப் பாடசாலையிலிருந்து வெளியேற்றப்பட்டனர். அப்பிள்ளைகளின் நன்மை கருதிய நாவலர், சைவ ஆங்கிலப் பாடசாலை ஒன்றை வண்ணர்பண்ணையில் 1872 - இல் தொடங்கி நடத்தினார். ஆனால் அந்த ஆங்கிலப் பாடசாலைக்கும் தங்கள் பிள்ளைகளை மக்கள் அனுப்பவில்லை. எனவே 1876 - இல் அதுவும் மூடப்படவேண்டியதாயிற்று. 

1872 ஆம் ஆண்டு யாழ்ப்பாணச் சமய நிலை என்ற நூலை எழுதி வெளியிட்டார்.  

ஆறுமுக நாவலர் 1874- ஆம் ஆண்டு வெளியிட்ட ‘இலங்கைப் பூமி சரித்திரம்’ என்ற நூலில், “வறுமைக்கும் துன்பத்துக்கும் சகல பாவங்களுக்கும் பிறப்பிடம் மதுபானம்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

1875- 1878 காலகட்டத்தில் நன்னூல் விருத்தியுரை, நைடதவுரை, திருவிளையாடல் புராணம், நன்னூல் காண்டிகையுரை, சிவபூசா விதி, மூன்றாம் அனுட்டான விதி, குரு சிஷ்யக் கிரமம், பூசைக்கு இடம்பண்ணும் விதி, சிராத்த விதி, தருப்பண விதி, போசன விதி, தமிழ் அகராதி, தமிழ்-சமக்கிருத அகராதி, தமிழ்-ஆங்கில அகராதி முதலிய நூல்களை எழுதுவதிலும் சைவப் பிரசங்கங்கள் செய்வதிலும் நாவலர் ஈடுபட்டார். 

தமிழ் உரைநடை இவருக்கு முன் மிகக் கடினமாக எளிதில் புரிந்து கொள்ள இயலாத வகையில் அமைந்திருந்தது. ஆங்கிலத்தைப் போன்றே அரைப்புள்ளி (கமா), முக்கால் புள்ளி, முற்றுப்புள்ளி ஆகிய நிறுத்தல் குறிகளைத் தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர் ஆறுமுகநாவலரே என்பது குறிப்பிடத்தக்கது. புதிதாக எழுத்தறிவு பெற்றுப் புத்தகவாசிப்பில் ஈடுபடுவோரை முன்னிலைப் படுத்தியே இலக்கணத்தையும் சைவசமயத்தையும் பற்றிய பல விளக்கநூல்களை எழுதிய சிறப்பு இவருக்கே உரியது. ஆறுமுக நாவலரை ‘புதிய தமிழ் உரைநடையின் தந்தை’ என்று தமிழறிஞர் மு.வரதராசனார் போற்றியுள்ளார். 

பதிப்புப் பணியும் சைவசமயத்தைப் பரப்பும் பணியுமே தமது குறிக்கோள்களாகக் கொண்டார். இலக்கணம், சமயநூல்கள், காப்பியங்கள் எனப் பலவகையாக 44 நூல்களைப் பதிப்பித்தார். இலக்கணம் தொடர்பாகவும் சைவசமயத்திற்கு விளக்கமாகவும் 24 நூல்கள் எழுதியுள்ளார். 

ஆங்கில நூல்கள் பதிக்கப்படுவதைப் போன்றே உள்ளடக்கம், பொருள் அடைவு, பாடவேறுபாடு, அடிக்குறிப்பு ஆகிய பகுதிகளோடு சிறப்பாகப் பதிப்புச் செய்தார். பதிப்புப்பணியில் இன்று ஈடுபடுவோருக்குக் கூட வழிகாட்டும் வகையில் இவரது பதிப்புகள் அமைந்துள்ளன. 

திருத்தொண்டர் புராணத்தை வசன நடையில் எழுதி வெளியிட்டார். இவருடைய வசன நடையைப் புகழ்ந்து ஆசிரியர் கல்கி கிருஷ்ணமூர்த்தி இவ்விதம் கூறியுள்ளார். 

“பழைய காலத்தில் தமிழ் வசனம் அபூர்வமாயிருந்தது. அபூர்வமாயிருந்த வசனமும் சங்கச் செய்யுள் நடையை விட கடினமான நடையில் இருந்தது. இல்லையென்றால், இலக்கண வழுக்கள் நிறைந்த கொச்சைத் தமிழில் ஒரு பக்கம் முழுவதையும் ஒரே வாக்கியத்தினால் நிறைக்கும் அசம்பாவித வசன நடையாயிருந்தது. பிழையில்லாத எளிய தமிழ் வசன நடையை முதன் முதலில் கையாண்டு காட்டி வெற்றி பெற்றவர் ஸ்ரீ ஆறுமுக நாவலரே ஆவர்” என்று கூறியுள்ள கல்கி கிருஷ்ணமூர்த்தி, தமிழில் மறுமலர்ச்சி என்பதே இவராலேயே ஏற்பட்டது என்றும் கூறி உள்ளார். 

திருக்கேதீஸ்வரம், யாழ்ப்பாணம் கீரிமலைச் சிவன் கோவில், மன்னார், திருமலை ஆகிய கோவில்களின் தொன்மைச் சிறப்புகளை மக்களுக்கு எடுத்துக் கூறிப் பராமரிப்பு இன்றி இருந்த ஆலயங்களை மீண்டும் புனரமைத்து உரிய பணிகளை மேற்கொண்டார்.  

போர்த்துக்கீசியரால் அழிக்கப்பட்ட, யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள நகுலேஸ்வரம் எனும் பழைமையான சிவபெருமான் திருக்கோயிலை மீண்டும் உருவாக்க முயற்சி செய்தார்.

நாவலர், மெதடிஸ்த ஆங்கிலப் பாடசாலையின் நிறுவனராயும், அதிபராயுமிருந்த பேர்சிவல் பாதிரியார் கிறித்தவ விவிலியத்தைத் தமிழில் மொழி பெயர்க்கும் வேலைக்கு உதவியாக இருந்து பணியாற்றினார். பேர்சிவல் பாதிரியருடன் சென்னைப் பட்டணம் சென்று அச்சிடுவித்துக் கொண்டு யாழ்ப்பாணம் திரும்பினார்.

சைவ சமயப் பிரசாரத்தில் தீவிரமாக இருந்த நாவலர் சமூக சீர்திருத்தத்தில் இக்கால நோக்கின்படி பிற்போக்குவாதியாக இருந்தார் என்ற கருத்தும் கூறப்படுவதுண்டு.   

தம் வாழ்நாள் பூராவும் தமிழுக்கும் சைவத்துக்கும் சேவையாற்றி வந்த நாவலர் பெருமான் 1879 ஆம் ஆண்டு 57- ஆவது வயதில் மறைந்தார்.

ஆறுமுக நாவலரின் நினைவாக இலங்கை அரசு 1971- ஆம் ஆண்டு அக்டோபர் 29- இல் நினைவு அஞ்சல்தலை ஒன்றை வெளியிட்டது. 

ஆறுமுக நாவலரின் நினைவைப் போற்றும் வகையில் தமிழகத்தில் அடையாளரீதியாக இவரின் சிலை அல்லது இவரை நினைவுகூரும் வகையில் உரிய பணிகளை மேற்கொள்ள வேண்டிய தேவை உள்ளது.

 #யாழ்_ஆறுமுகநாவலர்.

#ksr, #ksrvoice, #KS_Radhakrishnan,, #கேஎஸ்ஆர்போஸ்ட், #கேஎஸ்_இராதாகிருஷ்ணன்

கே.எஸ்.இராதா கிருஷ்ணன்.

#KSR_Post
முகாம்-நாகர்கோவில்
22-3-2023.
யுகாதி நாள்.


No comments:

Post a Comment

23rd April Happy #Shakespeare_Day! Let's pay a tribute to the true genius by remembering and sharing his quotes. I'm sharing a few here. Comment your favourite quotes too.

23rd April Happy #Shakespeare_Day! Let's pay a tribute to the true genius by remembering and sharing his quotes. I'm sharing a few h...