Tuesday, August 1, 2017

பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது, கருடா செளக்கியமா?

அரசியலில் அமைதிப்படை அமாவாசைகள்.....
-------------------------------------
பரமசிவன் கழுத்தில் இருக்கும் பாம்புக்கு கிடைத்த மரியாதையை போல் அரசியலிலும் பதவிகள் கிடைப்பதுண்டு. 

காங்கிரஸ் இரண்டாக பிரிந்த போது இந்திராகாந்திக்கு தண்ணிக் காட்டிய காங்கிரஸ் தலைவர் நிஜலிங்கப்பாவின் கார் ஓட்டுனர் ஜாபர் ஷெரிப் இந்திராகந்தி அமைச்சரவையில் ரயில்வே அமைச்சர், பின்னாளில் காங்கிரசின் மூத்த தலைவரானார்.

பிரணாப்முகர்ஜி அமைச்சராக இருந்த போது அவரது துறையில் அதிகாரியாக பணிபுரிந்த மன்மோகன்சிங் பின்நாளில் பிரதமர். அவரது அமைச்சரவையில் பிரனாப் அமைச்சராக இருந்தார்.

அத்வானி கூட வேண்டாம், வெங்கையா நாயுடு தலைவராக இருந்து அவரால் வளர்க்கப்பட்ட மோடி இன்று பிரதமர். 

ஒருவர் தகுதியில் அடிப்படையில், நேர்மையான முறையில்  அரசியலில் உயர்ந்தவர்களை யாரும் தவறாக பேசுவதில்லை. மாறாக குறுக்கு வழியில் வந்தவர்களை வரலாறு விமர்சிக்காமல் விட்டதும் இல்லை. 

1980களில் குடியிருக்க வீடு இல்லாமல் இருந்த லல்லு பிரசாத் யாதவ் இன்று பல மாடமாளிகைகளுக்கு சொந்தக்காரர். 

சந்திரபாபு நாயுடுவால் வளர்க்கப்பட்ட சந்திரசேகர் ராவ்  இன்று சந்திரபாபு நாயுடுக்கு சவால் விடுக்கும் வகையில் தெலுங்கானாவின் முதல்வர்.  இவைகள் யாவும் வரலாற்றில் கண்முன் காணப்படும் உண்மைகள். இவ்வாறாக நிறைய உதாரணங்கள் உள்ளன. 

தனிப்பட்ட முறையில் தட்டச்சு பணி செய்தும்,  உதவியாளராக பணிபுரிந்தவர்களும்  இன்று  நியாயமற்ற  செயல்களால் உயர்ந்து உச்சத்தில் நிற்கின்றார். 

இவ்வாறான அமைதிப்படை அமாவாசைகள் அரசியலில் உயர்வது அரசியலை ஆரோக்கியமாக வளர்க்குமா அல்லது அங்குமிங்குமாக இருக்கும் குறைந்தபட்ச ஆரோக்கியத்தையும் அழித்துவிடுமா? இது சரியா தவறா  என தெரிய வில்லை.

ஆனாலும் பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது, கருடா செளக்கியமா? என்ற பாடல் ஏனோ இன்று நினைவுக்கு வருகின்றது. 

''என்னை ஏற்றி
 உயர வைத்தவர்களை
எண்ணிக்கையில் 
சொல்லிவிடலாம்.....

 பலரை உயரவைக்க
தோள் கொடுத்தேன்....
முதுகையும் கொடுத்தேன்
ஏன்.... தலையிலும்
சுமந்தேன்......
அன்பால் கரைந்தேன்....

இன்னும் சிலருக்காக
முடிந்ததெல்லாம்
இழந்தேன்.....

அவையெல்லாம்
சொல்லும் தரமன்று...

நேர்மையான சூழலில்
என்னை ஆட்படுத்திய 
வேகம்......
ஒருபோதும் தாழ்வுகள்
தரப்போவதில்லை.''

#அரசியல்அமாவாசைகள் 
#KSRadhakrishnanpostings
#KSRpostings 
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
01-08-2017

No comments:

Post a Comment

Yoga day column by VP

  Yoga day column by VP @CPR_VP in Tamil Dinamani, today 20- 6-2026 @narendramodi @PMOIndia @AmitShah @nsitharaman @NitinNabin @...