Tuesday, August 22, 2017

புத்துயிர் பெறுமா ஆங்கிலேயர்களின் எஸ்கேப் ரோடு.


------------------------------------------------------------------
கொடைக்கானல் முதல் மூணாறு வரை உள்ள சாலையே ஆங்கிலேயர்களின் எஸ்கேப் ரோடு என்று அழைக்கப்படுகிறது. 

சுமார் 81 கி.மீ. நீளத்தில் கொடைக்கானல் - மூணாறு சாலை தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் இருந்து தேனி மாவட்டம் வழியாக கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்துடன் முடிகிறது. தென்னிந்திய மலைப்பகுதிகளில் மிக உயர்ந்த சாலையாக இருந்த இந்த சாலை கடல் மட்டத்தில் இருந்து சுமார் 2480 மீட்டர் உயரத்தில் (அதாவது 8140 அடி) ஆங்கிலேயர்களால் அமைக்கப்பட்டது. வந்தரவு சிகரத்தில் அமைந்துள்ள இந்த சாலை 1942ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டு 1990ஆம் ஆண்டில் மூடப்பட்டது. 

வத்தலகுண்டில் இருந்து கொடைக்கானலுக்கு 1915ஆம் ஆண்டு சாலை அமைக்கப்பட்டது. பின் 1925ஆம் ஆண்டு கொடைக்கானலில் இருந்து பேரிஜம் ஏரி வழியாக டாப் ஸ்டேசன் வரை சாலை அமைக்கப்பட்டது. மூணாறு முதல் கொச்சி வரையிலான சாலையையும் இணைக்கும் இந்த எஸ்கேப் ரோடு வழியாக 11 மணி நேரத்தில் கொச்சியை அடையலாம். மழைக்காலங்களில் இந்த சாலையை பயன்படுத்த முடியாது. இந்த சாலையில் ஆபத்தான 17 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன.

இரண்டாம் உலகப் போரின் போது, 1942ஆம் ஆண்டு ஜப்பான், அன்றைய மதராஸை (இன்றைய சென்னையை) தாக்கியது. இதனால் அச்சம் கொண்ட பல ஆங்கிலேய குடும்பங்கள் பல கொடைக்கானலுக்கு இடம் பெயர்ந்தன. தாக்குதல் அதிகரிக்கும் பட்சத்தில் இந்த சாலை வழியாக கொச்சி துறைமுகத்தின் தப்ப திட்டமிட்டனர். இதன் காரணமாக தான் இந்த சாலைக்கு எஸ்கேப் ரோடு என்று பெயரிட்டனர். 

1990வரை பயன்பாட்டில் இருந்த இந்த எல்லையோர சாலை தமிழக - கேரள வன எல்லை பிரச்சனை தொடர்பாக அதன் பராமரிப்பு பணிகள் கைவிடப்பட்டது. பயன்பாட்டில் இல்லாத சாலையை கேரள மாநில அரசு அதன் எல்லையான டாப் ஸ்டேசன் வரை நன்றாக பராமரித்து வருகிறது.

#கொடைக்கானல்_மூணாறு_கொச்சி
#எஸ்கேப்_ரோடு
#escape_road
#kodaikanal_munnar
#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே எஸ்.இராதாகிருஷ்ணன்.
22-08-2017

No comments:

Post a Comment

ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு #Meeting with AP DyCM Shri Pawan Kalyan Garu

#ஆந்திர  துணைமுதல்வர்  பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு  #Meeting with  AP DyCM Shri Pawan Kalyan Garu —————————————————————- நேற்று பிற்பகலில்...