Wednesday, August 2, 2017

வேனல்... கலாப்ரியா.


---------------------
திருநெல்வேலி டவுன் 
நான்கு ரத வீதிகள்.மலரும் நினைவுகள்; கல்லூரி நாட்கள்.

அருமை, இந்த ஓட்டல்களிலும் சாப்பிட்டுருக்கிறேன்..
குமார விலாஸ் மட்டும் நியூ குமார விலாஸ்.காசி நாடார் மிலிட்டரி ஓட்டல் இடம் மாறி காசி விலாஸ்.பழைய ஓட்டல் கல்லூர் பிள்ளை ஓட்டல்.சேரன்மகா தேவி ரோட்டில் குட்ட வாத்தியார் பள்ளி எதிரில் ஐயர் ஓட்டல் அதே இடத்தில் இருக்கிறது. மற்றவை மறைந்து விட்டது.போத்தி  ஓட்டல் இழப்பு நெல்லைவாசிகளின் நினைவுகளில் என்றென்றும்.

#KSRadhakrishnanpostings
#KSRpostings 
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
02-08-2017
.........
வேனல்...                                       கலாப்ரியா
____________________________________________
திருநெல்வேலி கோயிலைச் சுற்று நான்கு ரதவீதிகள். இரண்டிரண்டு வீதிகள் சந்திக்கும்  நான்கு முனைகள். முக்குகள் என்போம். சந்திப் பிள்ளையார் முக்கில் போத்தி ஓட்டல், லாலா சத்திர முக்கில் குமாரவிலாஸ், குத்துப்புற முக்கு என்கிற ராயல் டாக்கீஸ் முக்கில்  சரஸ்வதி கஃபே, வாகையடி முக்கு என்றால் சப்பாத்தி ஓட்டல் என்கிற  காந்திமதி லஞ்ச் ஹோம்.
          இவை தவிர     அங்கங்கே  சில  சைவாள்    ஓட்டல்கள்.    ரொம்ப அபூர்வமாய் வண்டிப்பேட்டை   பாய் கடை.  அங்கே      பிரியாணி,  ரொட்டி சால்னா , கறிவடை    கிடைக்கும்.   கோவிலின் சாமி சன்னதித் தெருவில் காசி நாடார் மிலிட்டரி ஓட்டல். அங்கே தனி ருசியாய் அசைவம் கிடைக்கும். அப்பொழுது ஓட்டல்களே இவ்வளவுதான்.   இப்பொழுதென்றால்   நாலடிக்கு நாலடி  இடம் கிடைத்தால் போதும்    ஒரு ரொட்டி சால்னாக் கடை ஆரம்பித்து விடுகிறார்கள். காணாதததற்கு டாஸ்மாக் பாரில் சைடு டிஷ் ஆக   பலதும் கிடைக்கிறது.  அப்பொழுதெல்லாம் சல்லிப் பக்கடா வாங்க வேண்டுமென்றால் மூக்க பிள்ள கடையைத் தேடிப் போக வேண்டும். அது சின்ன இட்லிக்கடை அதனால் ராத்திரி எட்டு மணிக்கு மேல் போனால் எதுவும்  கிடைக்காது. காலியாகிவிடும். ஒன்பது மணிக்கெல்லாம்    இட்லிக்கடை  முடிந்து  எடுத்துவைக்க ஆரம்பித்து விடுவார். வஞ்சனையில்லாமல்   மீந்து போன சாம்பார் சட்னியை, கேட்கிற யாருக்கும் இலவசமாகவே தருவார். இதற்கென்றே சில வசதியற்றவர்கள் அந்நேரம் போய்ப் பார்ப்பதுண்டு.  மீந்து போனது இல்லையென்றால், முகம் கோணாமல்       நாளைக்கி வாங்க என்று சொல்லி  விடுவார். தெற்கு ரத வீதியிலிருந்தது  அவரது சிறிய கடை.

*
          மகாலட்சுமி  அவளது அம்மா மூக்கம்மாவை உரித்து வைத்தது போலிருக்கும். லேசான மாறுகண் உட்பட.  மூக்குத்தி போட்டால் அம்மாவேதான். எங்கள் வீட்டிற்கு  அடுத்த முடுக்கு வழியாகப் போனால்  உள்ள ஒரு குச்சு வீட்டில் இருந்தார்கள். அது பாப்பாத்தி ஆச்சிக்கு சொந்தமான வீடு. கணவர் இல்லாத ஆச்சிக்கு அந்த வருமானம்தான் வாழ்தலுக்கான ஆதாரம். மகாலட்சுமியை  மகால் என்றுதான் அவள் அப்பா,  கூப்பிடுவார். அப்பா செல்லம் மகால். அவர் லாலாசத்திர முக்கு  ஓட்டலில் சரக்கு மாஸ்டர். அப்படியொரு ஒல்லியான உடல்.  லேசான     இளந்தொந்தி  மாதிரி இருக்கும். மத்தியானம் இரண்டு மணி சுமாருக்கு, கடையிலேயே சாப்பிட்டு விட்டு வருவார்.  தார்சாலில்  சுவரோரமாகப் படுத்திருப்பார், லேசான பொய்த்தூக்கம் தூங்குவார்.  மகால் இருந்தால் அது கூடக் கிடையாது. மேலே  விழுந்து   புரண்டு விளையாடுவாள். மூக்கம்மா மதினி சத்தம் போடுவாள். ஏட்டி மூதேவி கொஞ்ச நேரம் அவுகளைத்   தூங்க விடுதியா,”வெக்கையிலெயே நின்னுட்டு வாராக ” என்று சத்தம் போடுவாள். அவர் இல்லையென்றால் மகாலுக்கு  ஏச்சும் பேச்சுமாக இருக்கும். மதினியின் தீராத ஆவலாதிகளில் ஒன்று அவளுக்கும் மாறுகண் போல இருப்பதுதான். ஆனால் இரண்டு பேருக்குமே அவ்வளவு ஒன்றும் அது குறை மாதிரி தெரியாது. மதினியின் கட்டான உடல் வாகும் நிறமும் பார்ப்பவரை ஒரு விதமாகக் கவரும். அழகுடனேயே இருப்பாள். முகத்தில் மட்டும் ஏதோ குறைவது போல எப்போதும் தோன்றும். அவர்  மட்டும் எதற்கும் சிரித்துக் கொண்டேதான் இருப்பார்.
     மூன்று மணியானால் எழுந்து விடுவார். குச்சு வீட்டின் முன்னாலோ, கொஞ்சம் தள்ளிப் போனால் இருக்கிற வேப்ப மர நிழலிலோ குவிந்து காய்ந்து கொண்டிருக்கிற தீப்பெட்டியின் மேல்க் கூடுகளை பதனமாக அள்ளி, பெரிய சாக்குப் பையில் கட்டி தீப்பெட்டி ஆபீஸுக்கு கொண்டு போய்க் கொடுத்து விட்டு ஓட்டல் வேலைக்குப் போய் விடுவார். மதினி அவ்வளவு வேகமாக தீப்பெட்டி ஒட்டுவாள். நீளமான தகடு போன்ற சாதிக்காய் மரத்தில், மடிக்கத் தோதுவாய் பதிவுகள் இருக்கும். பதிவுகள் மேலாக மடித்தால்,  தீப்பெடியின் வெளிக் கூடு வந்து விடும். மடித்து, அதற்கென்றே ஏற்பட்ட நீலக்கலர் தாளை பசை தடவி ஒட்ட வேண்டும். அந்தத்தாளின் நிறத்திற்கு தீப்பெட்டிக் கலர் என்றே பெயர்.
’நல்ல தீப்பெட்டிக் கலர்ல சேலையும் ஜம்பரும்’ என்று பெண்கள் பாஷையில் அடி படும். மதினி ஒரு மெஷின் போல ஒட்டுவாள். பெண் பார்க்க வருகிற போது அல்லது மணவறையில் உட்கார்கிற மாதிரி உட்கார்ந்திருப்பாள். வலது கை ஆட்காட்டி விரலில் மட்டுமே பசை எடுப்பாள். ஒரு தீப்பெட்டிக்கு தேவையான அளவுக்கே மிகச்சரியாக எடுப்பாள். கொஞ்சம் கூடினால் கூட அந்த மெல்லிய தாள் சொத சொதத்துவிடும். தாளில் பசை தடவி மெல்லிய அட்டை போன்ற மரத்தகட்டை அதன் மேல் வைத்து ஒட்டி மடிப்பாள்,  ஆட்காட்டி விரலில் பெரிய மோதிரம் போல் தீப்பெட்டிக் கூடு உண்டாகி விடும். அப்படியே லாவகமாகச் சுண்டுவாள். சத்தம் போடாமல் கூடு குவியலில் போய்ச் சேர்ந்து கொள்ளும். எல்லாம் ஒரு நொடி வேலை.
     
*
 என் ஃப்ரெண்டு நமசு, பாப்பாத்தி ஆச்சிக்கு சொந்தக் காரன். அதனால் அவன் மதினி வீட்டுக்கு அடிக்கடி போவான்.  தீப்பெட்டி ஒட்டும் போது அருகே இருப்பான். ஆளும் சற்று பெண்பிள்ளை மாதிரி அழகாக இருப்பான். மதினி தீப்பெட்டி ஒட்டும்  போது இடது புறம் உட்கார்ந்து கொள்ளுவான். மதினி முந்தானையை தோள் மேல் சுருக்கிப் போட்டு அமர்ந்திருப்பாள்.அவளின் வெள்ளையான வயிற்றையும் அவ்வப்போது ஜம்பருக்குள் தெரிகிற மார்பையும் பார்க்க அதுதான் தோது, என்று நமசு சொல்வான். அதை அவன் ரொம்ப நாள் கழித்தே சொன்னான். மதினிக்கு தீப்பெட்டி ஒட்டும் போது, மகால் அருகே வந்து தொந்தரவு செய்தால் தீப்பெட்டி அட்டை நொறுங்கி விடுமோ என்று பயம். அதனால் அருகேயே ஒரு நீள வேப்பம் குச்சியைத் தயாராய் வைத்திருப்பாள். அவள் விளையாட்டுப் போக்கில் அருகில் வந்தால் கம்பை எடுத்து ஏய் என்பாள். மகால் ஓடி விடுவாள்.  நான் நமசு இல்லாத ஒருநாள், மதினியின் இடப் புறமாக அமர்ந்திருந்தேன். ’அதற்காகத்தான்’.  ”‘கற்பகம்’ சினிமா பாத்திட்டியா நல்லாருக்காமே” என்று மதினி கேட்டுக் கொண்டே, தீப்பெட்டிக் கூடு ஒட்டிக் குவித்துக் கொண்டிருந்தாள். “கொஞ்சம் கதை சொல்லேன்”, என்றாள். சொல்லிக் கொண்டே, தெரியாத மார்பை பார்க்க முயன்று கொண்டிருந்தேன். சற்று நேரம் கழித்து மதினி அதை உணர்ந்து கொண்டாள் போல. முந்தானையை இறக்கி விட்டாள்.ஆனால் வேலை மும்முரத்தில் மறுபடி முந்தானை தோளுக்கு ஏறிவிட்டது. நான் ஷீலா - முத்துராமன் முதலிரவுக் காட்சியை விவரித்துச் சொல்லிக் கொண்டே மறுபடி கண்ணை ஓடவிட்டேன். மதினி, 12 வயசுப் பையன்  முதலிரவு என்று சொல்கிறானே என்றதற்குச் சிரித்தாளா, அல்லது நான் படுகிற பாட்டைப் பார்த்துச் சிரித்தாளா, தெரியவில்லை. வேப்பங்குச்சியால் என் மொழியில் லேசாக அடித்து, நீ இந்தப் பக்கமா வந்து உக்காந்து சொல்லு” என்றாள். அவர் தன் “துக்கத்திலிருந்து எழுந்து கொண்டார். ”தம்பி ஷோக்கா கதை சொல்லுதாரே, நீ படமே பாக்க வேண்டாம் போல இருக்கே” என்றார்.மதினியும் எழுந்து, ”முழிச்சிட்டிங்களா இன்னக்கி தீப்பெட்டி அட்டையும் தாளும் வாங்கீட்டு வாங்க, நாளைக்கி ஒட்டறதுக்கு இல்லை”என்று சொல்லிக் கொண்டே காபி போடப் போனாள். நான் பாதிக் கதையோடு வந்து விட்டேன்.

*
 மதினி வீட்டுக்கு சற்று மேற்கே ஒரு வேப்ப மரம். வேப்ப மரத்தின் எதிரே ஒரு சொள்ள மாடசாமி பீடம். அதை மனை காவல் பெருமாள் என்பார்கள். எப்போதாவது அதற்குப் படையல் வைப்பாள் பாப்பாத்தி ஆச்சி. இருட்டி விட்டால் மரத்தடிக்கு யாரும் போக மாட்டார்கள். ஆனால் அதைத் தாண்டித் தான் ஒரு மண் மறைப்பில் உலர் கக்கூஸ். ஒரு சாயந்தரம் தற்செயலாக அங்கே போனவனை மூக்கம்மா மதினி கூப்பிட்டாள். ”இங்க வாடே , வயிறு என்னமோ மதிரி இருக்கு, கொஞ்ச நேரம் இங்கன வந்து துணைக்கி நில்லு, கக்கூஸ் போயிட்டு வந்திருதேன், கோளை நாளும் அதுவுமா (செவ்வாய்க் கிழமை) அந்தப் பூடத்தைத் தாண்டி போக பயமாருக்கு எனக்கு,”என்றாள் .நான் காவலுக்கு நின்று கொண்டிருந்தேன். மகால் வேற, வீட்டுக்குள்ளிருந்து அம்மா, அம்மா என்று கத்திக் கொண்டிருந்தாள். எனக்கும் வேப்பமரம் அந்தி இருளில் ஆடுவதைப் பார்க்க பயமாயிருந்தது. மதினி வேகமாக என்னைக் கடந்து வீட்டுக்குள் போய் விட்டாள். நானும் முடுக்கு வழியாய்  தெருவுக்கு ஓடியே வந்தேன். 
 
 
நான் அவர் வேலை பார்க்கும் குமாரவிலாஸ் ஓட்டலுக்குப் போவதே கிடையாது. எங்கள் வீட்டுக்கு போத்தி ஓட்டலில் தான் கணக்கு. அப்போது லால் பகதூர் சாஸ்திரி/பக்தவத்சலம் காலம் என்று நினைவு. ஓட்டல்களுக்கெல்லாம் ஒரு நாள் கண்டிப்பாக விடுமுறை விட வேண்டும். எல்லோரும் ஒரு நாள் இரவு உணவைக் கைவிட்டு உபவாசம் இருக்கலாம் என்று ஒரு எழுதப் படாத சட்டம்.  அதனால் புதன் கிழமை தோறும் போத்தி ஓட்டல் விடுமுறை. நானும் நமசுவின் அண்ணனும், அவர் என்னை விட நாலைந்து வயது மூத்தவர்- குமாரவிலாஸில் ஒரு காபி குடிக்கப் போனோம். நான் அங்கே போவது அதுவே முதல்த் தடவையாகக் கூட இருக்கலாம்.அந்தக் கடை முதலாளி பெரியாரின் பரம சீடர். பெரியார் படம் கல்லாவின் அருகில் மாட்டி இருக்கும்.காபி சொல்லி ரொம்ப நேரம் ஆகியும் வரவில்லை.நாங்கள் உட்கார்ந்திருந்த பெஞ்சை ஒட்டிய சுவருக்குப் பின்னால்தான் சமையலறை போலிருக்கிறது..சுவர் சூடாக இருந்தது.
மூக்கம்மா மதினியின் கணவர், எங்கள் எதிரே சிரித்தபடி வந்தார். மேலெல்லாம் வேர்வை இடுப்பில் ஒரு துண்டு தோளில் ஒரு துண்டு. இரண்டிலுமே எண்ணெய் அழுக்கும்  கரியும் படிந்திருந்தது. நமசுவின் அண்ணனிடம் வாங்க தம்பி, என்றவர், அந்த எதிர் பெஞ்சில உக்காருங்க, இங்க வெக்கை தாங்க முடியாது, என்று சொல்லி, ”எதிர் பெஞ்சில் இரண்டு இலை போடப்பா”என்று ஒரு சர்வரைப் பார்த்துச் சொன்னார்.எதுக்கு என்று இரண்டு பேரும் கேட்டோம்.சாப்பிடத்தான் என்று சிரித்துக் கொண்டே உள்ளே போனார்.இரண்டு முறுகலான தோசையுடன் வந்தார். சாப்பிடுங்க என்றார். சாப்பிட்டோம். இன்னொன்னு என்றார். இரண்டு பேருக்கும் போதுமாய் இருந்தது.போதும் என்றோம். சாப்பிட்டுக் கை கழுவியதும் சர்வரிடம் பட்டறையில் சொல்லிரு என் கணக்குன்னு என்றார்.வாங்க தம்பி என்று சமையலறைக்குள் அழைத்தார். போத்தி ஓட்டலிலெல்லாம் சமையலறைப் பக்கம் எட்டிக் கூடப் பார்க்க விட மாட்டார்கள். பெரிய நீள் சதுரத் தோசைக்கல்லைப் பார்க்கவே ஆச்சரியமாய் இருந்தது. கல்லுக்கு மேல் ஒரு கயிறு கட்டித் தொங்கிக் கொண்டிருந்தது, எண்ணெய்ப் பிசுக்குடன். கல்லின் எதிர் முனையில் தோசை விடும் போது அதைப் பிடித்துக் கொண்டு ஊற்றினார். அவ்வளவு அகலமான கல்.
*
 
நிறைய பேர் மதினியின் வீட்டுக்கு வந்து போய்க் கொண்டிருந்தார்கள். என்ன விஷயமாயிருக்கும் என்று நானும் போனேன். சமீபமாய் நான் அங்கே போவதே இல்லை.வழக்கமான தார்சால்ச் சுவரோரமாக அண்ணாச்சி படுத்துக் கிடந்தார்.அண்ணாச்சி எப்பவுமே மதினியை விட சற்று வயதானவர் போல்த் தான் இருப்பார்.அன்று நாலு நாள்த் தாடியுடன் இருந்தார்.இடுப்பில் பேருக்கு வேஷ்டி இருந்தது.மார்பெல்லாம் தீக் கொப்புழங்கள். கை, முகம் தோளிலெல்லாம் கூட. ஒரு வாழை இலையை வைத்து மதினி விசிறிக் கொண்டிருந்தாள். ஒரு பாட்டிலில் ஜெனிஷியன் வயலட் களிம்பும் ஈர்க்குச்சியில் சுற்றின பஞ்சும் இருந்தது.”தம்பி இந்த களிம்பைக் கொஞ்சம் புண்ணு மேல போட்டு விடுதீங்களா” என்றாள் மதினி. தொடர்ந்து, ”நோய் நோக்காடு வந்தாக் கூடவா தொடக் கூடாது, ஏதோ ஒரு தரம் உங்க தம்பி மேல ஆசப் பட்டுட்டேன், அவனும் தான் போய்ட்டானே” என்று அழுதாள். மகால் ஏற்கெனவே அழக் காத்திருந்தது போல அழ ஆரம்பித்தது.” வீட்டுக்குள்ளையும் படுக்க மாட்டாக, என்ன குளிர், என்ன வேனல்ன்னாலும் சரி: வேனல்லையே தான கெடக்காக...” என்றாள் மதினி.”கிளப்புல தோசை ஊத்தும் போது கயிறு அந்து அப்படியே கல்லுல விழுந்துட்டாகளாம், அது என்னப்பா கயிறு “, என்று கேட்டாள். அவர் சிரித்துக் கொண்டார்.
     பாப்பாத்தி ஆச்சி வந்தாள்.  ”யார்ட்டழ்ழா காமிக்கெ”, என்ற கேள்வியுடன். “யாரோ டாக்டர் முத்தையாபிள்ளை ஆஸ்பத்திரியாம்லெ அங்கெதான்,   முதலாளி ஏற்பாடு, அதெல்லாம் எல்லாரும் வந்து நல்லாப் பாக்காங்க”, என்றாள். ஆச்சி தார்சாலை அடுத்திருந்த ஒரே கட்டுக்குள் சென்று,  ”மூக்கம்மா இன்னா இப்படி உள்ள வா” என்றாள். ஏதோ பேசிக் கொண்டிருந்தார்கள். நானும் உள்ளே எட்டிப் பார்த்தேன். ஒரு கேபினெட் சைஸ் போட்டோப் படம், படத்துக்குப் பொட்டு வைத்திருந்தது. நான் பார்த்ததை அவர் பார்த்து விட்டார்,  ”ஏந்தம்பி, செத்துப் போயிட்டான்,” என்றார். வலியில் அவரது முகச்சதை கோணுவது கூட சிரிக்கிற மாதிரி இருந்தது. ஆச்சி போனதும், மதினி அழுது கொண்டே வந்தாள். ”என்ன, வீட்டைக் காலி பண்ணச் சொல்லுதாங்களா” என்றார். ”ஆமா, வேறென்ன சொல்லுவாங்க,  மனசுல ஒண்ணும் நெனைக்காம  பொண்டாட்டியக் காப்பாத்துதாங்கன்னா மெச்சுவாங்க, நீங்க சொல்லலைன்னாலும் ஊரு, என்னைய கெட்டுப் போனவன்னுதானே சொல்லும்,” என்று சொல்லி விட்டு, தனியாக அழுது கொண்டிருந்த மகாலை இழுத்து அணைத்துக் கொண்டாள். அவர் அதைப் பார்த்துச் சிரித்தார்.
     
நமசுவின் அண்ணன், எனக்கு ஓரளவு புரிந்ததை முழுவதும் தெளிவாக்கினார். அந்தப் புண் குணமாகும் முன்பே அவர்கள் வீட்டை காலி செய்துவிட்டார்கள். அவர்கள் காலி செய்து போகும் போது தெருவில் நானும் நமசுவின் அண்ணணும், ஓரமாக நிழலில் நின்று கொண்டிருந்தோம். பையன்கள் அந்த உச்சி வெயிலில் தங்கள் வேனல் விடுமுறையை பம்பரம் விளையாடி கொண்டாடிக் கொண்டிருந்தார்கள். அவர் அந்தக் குழந்தைகளையும் எங்களையும் பார்த்துச் சிரித்தார். மகால், அம்மா தோளில் தூங்குவது  போல் சாய்ந்து கொண்டிருந்தாள். மதினி, தலையை மட்டும் ‘போய்ட்டு வாரோம்’ என்று ஆட்டினாள். அவர், என்ன நினைத்தாரோ கையில் வைத்திருந்த தம்பியின் படத்தை அருகிலிருந்த குப்பைத் தொட்டியில் விசிறினார். அப்போதும் அவர் முகம் சிரித்த மாதிரியே இருந்தது.

No comments:

Post a Comment

*இந்த ஆண்டு என்னுடைய புத்தகங்கள்- KSR- கேஎஸ்ஆர்

*இந்த ஆண்டு என்னுடைய புத்தகங்கள் புஸ்தகா டிஜிட்டல் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் மூலமாக நண்பர் இராஜேஷ் தேவதாஸ்,பெங்களூர் முயற்சியில் இந்...