Wednesday, August 30, 2017

தென்பெண்ணை - பாலாறு இணைப்புத் திட்டம் - I

ரூ. 250 கோடி மதிப்பில் திட்டமிடப்பட்டு எந்த நடவடிக்கையும் இல்லை. தமிழகத்தில் தாமிரபரணி  - நம்பியாறு – கருமேணியாறு இணைப்பும், காவிரி – குண்டாறு இணைப்பு, தென்பெண்ணை  - பாலாறு என்ற மூன்று நதிநீர் இணைப்புத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டும். நிதிநிலை அறிக்கை, மானியக் கோரிக்கைகளில் தெரிவிக்கப்பட்டும் எந்த மேல் நடவடிக்கையும் இல்லை. கர்நாடகா, சிக்கமங்களுரு நந்தி மலையில் உருவாகும் தென்பெண்ணை ஆறு, ஓசூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களைக் கடக்கிறது.

தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் தற்போதைய சூழலில் செய்யாற்றையும், இணைத்திருந்தால் திருவண்ணாமலை வழியாக, செய்யாற்றில் தண்ணீர் வந்திருக்கும். செய்யாற்றில் தண்ணீர் வந்தால், காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாயும் செய்யாறு வழியாக, பாலாற்றிலும் தண்ணீர் வந்திருக்கும் என காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

தென்பெண்ணை ஆற்றுக்கும், செய்யாறுக்கும் இடையில் 35 கி.மீ. கால்வாய் வெட்டினால், இரு ஆறுகளையும் இணைத்துவிடலாம் என பொதுப்பணித் துறையினர் தெரிவிக்கின்றனர்.

ஆனால், மூன்றாண்டுகளுக்கு முன் தயாரிக்கப்பட்ட இந்த திட்டம், இன்று வரை கிடப்பில் போடப்பட்டுள்ளதாக விவசாயிகள் குமுறுகின்றனர். இத்திட்டம் குறித்து, காஞ்சிபுரம் மாவட்ட பாலாறு படுகை விவசாயிகள் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கடந்தாண்டு பெற்ற தகவல்களை சொல்கின்றனர்.
தென்பெண்ணையாறு (சாத்தனூர் அணை)  - பாலாபறு இணைப்பு திட்டத்தில், தென்பெண்ணையாற்றின் வெள்ள உபரி நீரை, பாலாற்றின் கிளை ஆறான செய்யாற்றிற்கு கொண்டு செல்லும் திட்டத்திற்கு ரூ. 250 கோடி அளவில் மதிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், மத்திய் அரசு புதிதாக வெளியிட்டுள்ள நில ஆர்ஜித சட்டத்தின் படி, மதிப்பீடு திருத்தி அமைக்கும் பணிகள் நடக்கின்றன. அதில் நான்காண்டுகளுக்கு முன், பாலாற்றில் தடுப்பணைகள் கட்டியிருந்தால், 2015ல் பெய்த கனமழையில் பெருமளவு தண்ணீரை பாலாற்றின் வழியே சேமித்திருக்கலாம்.
ஆனால், மழை பெய்து இரண்டாண்டுகள் கடந்தும் தடுப்பணைகள் கட்டுவதில் ஆர்வமோ, தீவிரமோ அரசு காட்டாமல் மெத்தனமாக செயல்பட்டு கொண்டு இருக்கிறது. இப்படி தான் தமிழகத்தில் உள்ள நதிநீர் இணைப்புத் திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டு ஆட்சியாளர்கள் அவர்களுடைய சுய தேவைக்காகவும், பதவியை காப்பாற்றிக் கொள்ளவும் மணல் திருட்டு போன்ற வேலைகளில் சம்பாதித்து கொண்டுள்ளனர். மக்கள் நல திட்டங்களை பற்றி மக்களுக்கே விழிப்புணர்வு இன்றி தொலைக்காட்சி தொடர்களையும், பிக் பாஸை பார்த்தே சந்தோசப்படுகின்றனர்.

குறிப்பு. பெண்ணாறு  - பாலாறு இணைப்பு குறித்தான வரைபடத்தை கூட தமிழக அரசு சரியாக ஆவணப்படுத்தவில்லை என்பது வேதனையான செய்தி.

#மாநில_நதிகள்_இணைப்பு
#தென்பெண்ணை_பாலாறு_இணைப்பு
#Pennar_palar_linking
#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே எஸ்.இராதாகிருஷ்ணன்.
29-08-2017

No comments:

Post a Comment

*இந்த ஆண்டு என்னுடைய புத்தகங்கள்- KSR- கேஎஸ்ஆர்

*இந்த ஆண்டு என்னுடைய புத்தகங்கள் புஸ்தகா டிஜிட்டல் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் மூலமாக நண்பர் இராஜேஷ் தேவதாஸ்,பெங்களூர் முயற்சியில் இந்...