Friday, June 29, 2018

கரிசல் இசை வித்வான் கழுகுமலை கந்தசாமி மறைவு.



————————————————
கரிசல் மண்ணில் வில்லடி வித்வான் பிச்சக்குட்டி, கழுகுமலை கந்தசாமி போன்றவர்கள் கடந்த 1950களில் இருந்து இசை மேடைகளில் பங்கேற்றவர்கள். கழுகுமலை கந்தசாமிக்கு 92 வயதிருக்கும் என்று நினைக்கிறேன்.  திருமணமே செய்துகொள்ளாமல் இசைக்காகவே வாழ்ந்தார். மதுரை சோமுவிடம் இசையை கற்றார். நேற்றிரவே காலமானார் . ஆனால் தற்போது தான் துக்கச்செய்தியை கேள்விப்பட்டேன்.

கதர் வேஷ்டியும், கதர் ஜிப்பாவுடன் வெள்ளை, வெளேரென்று காட்சி தருவார். திருச்சி, சென்னை, திருநெல்வேலி வானொலிகளில் அவர் பாடியதும், நிகழ்ச்சிகளை நடத்தியதும் உண்டு. தூர்தர்சனில் சில நிகழ்ச்சிகளில் பங்கேற்றதும், நடத்தியதும் உண்டு.

தங்கத் தமிழ் தந்த சிங்கார வேலனே என்ற பாட்டு அனைவரையும் ஈர்த்த பாடலாகும். கோவில்பட்டியில் வசித்து வந்தார். அற்புதமான கலைஞர். அவருக்கான ஊடகம், பொதுமக்கள் மத்தியில் வெளிச்சம் கிடைக்கவில்லை என்பது எங்களைப்
போன்றோருக்கெல்லாம் ஒரு ஆதங்கம். 1980களில் என்று நினைக்கிறேன். சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடந்த இசை விழாவில் பாடியது தனக்கு பெருமை என்று என்னிடம் சொன்னதெல்லாம் நினைவிற்கு வருகின்றன. கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினராக இருந்த கம்யூனிஸ்ட் தலைவர் சோ. அழகிரிசாமி இவரை அந்த சமயத்தில் சென்னையில் பாராட்டியதும் உண்டு. 

என்னுடைய நிமிரவைக்கும் நெல்லை நூலில் இவரைப் பற்றி பதிவு செய்துள்ளேன். 
.
கழுகுமலை கந்தசாமியின் புகழ் ஓங்குக. 
#கழுகுமலை_கந்தசாமி
#தூத்துக்குடி
#கரிசல்_மண்
#Public_life
#KSRadhakrishnanpostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
29-06-2018

No comments:

Post a Comment