Wednesday, June 20, 2018

விவசாய போராட்டத்தில் துப்பாக்கிச் சூட்டு துயரங்கள்.





----------------------------------------

நேற்று (19-06-2018), திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் விவசாயிகள் இராமசாமி, மாரப்பன், ஆயிக்கவுண்டர் ஆகியோர் காவல் துறையின் துப்பாக்கிச் சூட்டுக்கு பலியானது குறித்தான வரலாற்றுப் பதிவை செய்திருந்தேன். பல நண்பர்கள் பழைய அப்பநேரி கந்தசாமி நாயக்கரைப் பற்றி சொல்லவில்லையே என்று கேட்டிருந்தனர். அவரைக் குறித்தான பதிவு வருமாறு,
கோவில்பட்டி அருகே, பழைய அப்பநேரி கிராமத்தில் சேர்ந்த கந்தசாமி நாயக்கர் 05-07-1972இல் கோவில்பட்டியில் நடந்த விவசாயிகள் சங்க போராட்டத்தில் சுட்டுத் தள்ளப்பட்டார். அன்னாரின் பேரில் படிப்பகம் ஒன்றினை அவருடைய சொந்த கிராமமான பழைய அப்பநேரியில் நிறுவ பெருந்தலைவர் காமராஜர் நேரில் வந்து  45 ஆண்டுகளுக்கு முன்னர் அடிக்கல் நாட்டியதை யாரும் பொருட்படுத்தவும் இல்லை. அன்றைய இந்திரா காந்தி அமைச்சரவையில் இருந்த மத்திய அமைச்சர் மோகன் குமாரமங்கலமும் நேரடியாக ஆறுதல் தெரிவிக்க பழைய அப்பநேரிக்கு வந்தார். 

இதே காலக்கட்டத்தில் 05-07-1972இல் சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையத்தில் ஒன்பது விவசாயிகளும், அன்று ஒன்றுபட்ட இராமநாதபுரம் மாவட்டம், இன்றைக்கு விருதுநகர் மாவட்டம் வெற்றிலையூரணி, மீசலூர், பாலவனத்தம் கிராமங்களில் முறையே ஒருவர் வீதம் மொத்தம் மூன்று பேரும், பெருமாநல்லூரில் மூன்று பேரும், ஆக மொத்தம் 15 விவசாயிகள் துப்பாக்கிச் சூடுக்கு பலியானார்கள். இறுதியாக 1992இல் கோவில்பட்டி சம்பவம் வரை 47 விவசாயிகள் காவல் துறையின் துப்பாக்கிச் சூட்டிற்கு உள்ளானதாக தகவல்கள். 

விவசாயிகளின் போராட்டத்தில் உயிர் தியாகம் செய்த தியாகிகளுக்கு வழங்கப்பட்ட தொகையை கூட பெறுவதற்கு இவருக்கு வாரிசு கூட இல்லை. இவரின் மனைவியும் ஏழ்மையிலேயே மறைந்துவிட்டார். தியாகி கந்தசாமி நாயக்கர்க்கு நினைவு தூண் கோவில்பட்டி மெயின் ரோடில் உள்ள பயணியர் விடுதியில் நிறுவப்பட்டது. அதுவும் கேட்பாரற்று, அதிகாரிகளால் ஒரு ஓரமாக கிடத்தப்பட்டுவிட்டது. 

கோவில்பட்டியில் அவரின் பெயரில் நிறுவப்பட்ட நினைவுத் தூணையும், அவர் கிராமத்தில் திட்டமிடப்பட்டுள்ள படிப்பகத்தையும் உடனே அமைக்க அனைவரும் தங்களுடைய ஒத்துழைப்பை வழங்க வேண்டுகிறேன். 

இதுவரை 47 விவசாயிகள் துப்பாக்கிச் சூட்டிற்கு உள்ளானாலும், சிலர் காயங்களுடன் சிகிச்சை பெற்று இன்றளவும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் இன்னுயிரைத் தந்த அந்த தியாகிகளின் பெயர்களை முடிந்தளவு வரிசைப்படுத்துகிறேன். விவசாய சொந்தங்கள் சற்று கனிவோடு அந்தத் தியாகிகளை நினைத்துப் பாருங்கள்.

1. ராமசாமி (பெருமாநல்லூர் - அவிநாசி வட்டம்)
2. மாரப்ப கவுண்டர் (பள்ளக்காடு - அவிநாசி வட்டம்)
3. ஆயிக்கவுண்டர் (ஈச்சம்பள்ளம் - அவிநாசி வட்டம்)
4. ஆறுமுகம் (பெத்தநாயக்கன்பாளையம் - சேலம் மாவட்டம்)
5. முத்துசாமி (பெத்தநாயக்கன்பாளையம் - சேலம் மாவட்டம்)
6. சாந்த மூர்த்தி (பெத்தநாயக்கன்பாளையம் - சேலம் மாவட்டம்)
7. மணி (நெத்திமேடு - சேலம் மாவட்டம்)
8. ராமசாமி என்ற முட்டாசு (பெத்தநாயக்கன்பாளையம் - சேலம் மாவட்டம்)
9. பிச்சமுத்து (பெத்தநாயக்கன்பாளையம் - சேலம் மாவட்டம்)
10. கோவிந்தராசுலு (பெத்தநாயக்கன்பாளையம் - சேலம் மாவட்டம்)
11. விவேகானந்தன் (ஏத்தாப்பூர் - சேலம் மாவட்டம்)
12. ராமசாமி (நரசிங்கபுரம் - சேலம் மாவட்டம்)
13. முத்துக்குமாரசாமி (மண்ணோகவுண்டம்பாளையம் - பல்லடம் வட்டம்)
14. சுப்பையன் (அய்யாம்பாளையம் - பல்லடம் வட்டம்)
15. கந்தசாமி நாயக்கர் (பழைய அப்பனேரி - சங்கரன்கோவில் வட்டம், நெல்லை மாவட்டம்)
16. சீனிவாசன் (வெற்றிலையூரணி - சாத்தூர் வட்டம்)
17. நம்மாழ்வார் (மீசலூர் - விருதுநகர் வட்டம்)
18. நாச்சிமுத்து (கோடாங்கிபட்டி - ஒட்டன்சத்திரம் வட்டம் )
19. 19.சுப்பிரமணியம் (காசிப்பாளையம் -வேடசந்தூர் வட்டம்)
20. சின்னசாமி கவுண்டர் (காசிப்பாளையம் -வேடசந்தூர் வட்டம்)
21. கருப்பசாமி விடுதலைப்பட்டி - வேடசந்தூர் வட்டம்)
22. கிருஷ்ணமூர்த்தி (வேடசந்தூர்)
23. மாணிக்கம் (ராசக்கவுண்டர் வலசை - தேவிநாயக்கன்பட்டி, வேடசந்தூர் வட்டம்)
24. ஆரோக்கியசாமி (நல்லமநாயக்கன்பட்டி - திண்டுக்கல் மாவட்டம்)
25. முருகேச கவுண்டர் (சின்னாசிபட்டி - ஒடுகத்தூர், வேலூர் மாவட்டம்)
26. மகாலிங்கம் (தான்தோன்றி கிராமம் - உடுமலைப்பேட்டை வட்டம்)
27. வேலுச்சாமி (கணபதி பாளையம் - உடுமலைப்பேட்டை வட்டம் )
28. சாத்தூரப்ப நாயக்கர் (குருஞ்சாக்குளம் - சங்கரன்கோவில் வட்டம், நெல்லை மாவட்டம்)
29. வெங்கடசாமி நாயக்கர் (குருஞ்சாக்குளம் - சங்கரன்கோவில் வட்டம், நெல்லை மாவட்டம்)
30. 30.வரதராஜன் (குருஞ்சாக்குளம் - சங்கரன்கோவில் வட்டம், நெல்லை மாவட்டம்)
31. வெங்கடசாமி (குருஞ்சாக்குளம் - சங்கரன்கோவில் வட்டம், நெல்லை மாவட்டம்)
32. ரவிச்சந்திரன் (குருஞ்சாக்குளம் - சங்கரன்கோவில் வட்டம், நெல்லை மாவட்டம்)
33. முரளி (குருஞ்சாக்குளம் - சங்கரன்கோவில் வட்டம், நெல்லைமாவட்டம்)
34. மணி (தும்மல்சேரி கண்டிகை -திருத்தணி)
35. கி.துளசிமணி (சித்தோடு கங்காபுரம் - பவானி வட்டம்)
36. 36.எத்திராஜ நாயக்கர் (வெங்கடாசலபுரம் தாலுகா, சங்கரன்கோவில் வட்டம்)
37. ஜோசப் இருதய ரெட்டியார் (அகிலாண்டபுரம் - ஒட்டபிடாரம் வட்டம்)

இப்படியாக தமிழகத்தில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தில், விவசாயிகளின் உரிமைகளை நிலைநாட்ட போராடிய விவசாயிகள் குண்டடிபட்டு தங்களுடைய உயிர்களை மாய்த்துக் கொண்டார்கள்.

குறிப்பாக என்னுடைய குருஞ்சாக்குளம் கிராமம் இப்படிப்பட்ட பல தியாகிகளை ஈன்றெடுத்ததில் பெருமைகொண்டாலும், அவர்களுடைய இழப்பை நினைத்து வேதனை கொள்கின்றது மனது. அவர்களுக்கு வீரவணக்கம்.

ஆளவந்தார்கள் விவசாயிகளை இரண்டாம் குடிமகன்களாகப் பார்ப்பது இன்றும் தொடர்கின்றது. விவசாயிகள் போராட்டம் ஒருகாலத்தில், நாராயணசாமி நாயுடு தலைமையில் வீறுகொண்டு எழுந்தது. 

படங்கள் – கோவில்பட்டியில், விவசாயிகள் மீது துப்பாக்கி சூடு நடந்ததைக் குறித்து நீதி விசாரணை. ஓய்வு பெற்ற நீதிபதி. சுப்பிரமணியம் தலைமையில் நடந்த விசாரணையில் வாதாடிய போது, விவசாயிகளுடன்..... (1992)

#விவசாயிகள்_போராட்டம்
#துப்பாக்கிச்_சூடு
#Farmers_crisis
#KSRadhakrishnanPostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
20/06/2018

No comments:

Post a Comment

*Some believe holding on and hanging in there are signs of great strength*

*Some believe holding on and hanging in there are signs of great strength*. However, there are times when it takes much more strength to kno...