Tuesday, September 27, 2016

காவிரி...

காவிரி:
---
கர்நாடக சட்டசபை தீர்மானம் உச்ச நீதிமன்றத்தை கட்டுப்படுத்தாது.

நாள் ஒன்றுக்கு 6000 கன அடி வீதம் அடுத்த இரண்டு நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசிற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
தமிழக கர்நாடக முதல்வர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசிற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு.

................
உச்ச நீதிமன்றம் 20.09.2016 அன்று வழங்கியத் தீர்ப்பில், இந்திய அரசு ஒரு மாதத்திற்குள் #காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட வேண்டும் என்று காலவரம்பு விதித்து கட்டளையிட்டுள்ளது. உச்ச நீதிமன்றம் அறிவித்தவாறு விநாடிக்கு 6,000 கன அடி திறந்துவிட மறுத்து கர்நாடக சட்டமன்றம் சட்ட விரோதமானத் தீர்மானம் இயற்றியிருக்கிறது. உச்ச நீதிமன்றத்திற்கு வெளிப்படையாக அறைகூவல் விடும் அவமதிப்புக் குற்றம் இது!

 இந்நிலையில், நடுவண் நீர்வளத்துறைச் செயலாளர் சசிசேகர், மேலாண்மை வாரியத்தின் “வழிகாட்டுதலில்” கர்நாடகத்தின் ஏமாவதி, ஏரங்கி, கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளும் தமிழ்நாட்டின் மேட்டூர், அமராவதி, பவானி சாகர் அணைகளும், கேரளாவின் பானசுரசாகர் அணையும் ஒருங்கிணைந்த முறையில் இயங்கும் என்பதே உச்ச நீதிமன்ற இறுதித் தீர்ப்பின் கூற்று எனக் கூறியிருப்பது தமிழினத்திற்கு எதிரான திரிப்பு வேலையாகும்.

 2007 பிப்ரவரியில் அளிக்கப்பட்ட காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பின் பகுதி 8-இன் பத்தி 16, “காவிரி மேலாண்மை வாரியத்திடம் அணைகளின் செயல்பாட்டை கண்காணிக்கும் பொறுப்பு ஒப்படைக்க வேண்டும். அந்த அணைகளிலிருந்து தண்ணீர் வெளியேற்றத்தின் ஒழுங்குமுறைச் செயல்பாடுகளை ஒழுங்காற்றுக் குழுவின் உதவியோடு இம்மேலாண்மை வாரியம் செயல்படுத்தும்” என தெளிவாகக் கூறுகிறது.இதே பகுதி 8-இன் பத்தி 15, “இந்த #காவிரிமேலாண்மைவாரியம் பக்ராபியாஸ் மேலாண்மை வாரியத்தை போன்றதாகவே அமைக்கப்பட வேண்டும்” என விளக்குகிறது.

இத்தீர்ப்பு முன்னெடுத்துக்காட்டாகக் கூறிய “பக்ரா-பியாஸ் மேலாண்மை வாரியம், பக்ராநங்கல் திட்டம், பியாஸ் - சட்லஜ் இணைப்புத் திட்டம், பியாஸ் – போங்கு அணைத் திட்டம் ஆகியவற்றின் நிர்வாகம், செயல்பாடு, பராமரிப்பு ஆகியவற்றை மேற்கொள்ளும்” என தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது.

 இந்நிலையில், இந்திய அரசின் நீர்வளத்துறை உயரதிகாரி இத்தீர்ப்புக்கு எதிராக விளக்கமளித்திருப்பது இந்திய அரசு, தீர்ப்பாயத்தின் தீர்ப்புக்கு மாறாக அதிகாரமற்ற இன்னொரு மேற்பார்வைக் குழுவை அமைக்க முயல்கிறதோ என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது. இது அப்பட்டமான சட்ட மீறலாகும்!
தீர்ப்பாயத்தின் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளவாறு, காவிரி மேலாண்மை வாரியத்தை 4 வாரத்திற்குள் இந்திய அரசு அமைக்க வேண்டும் என்பதுதான் உச்ச நீதிமன்றத்தின் தெளிவான தீர்ப்பு. தீர்ப்பாயத்தில் கூறப்படாத அதிகாரமற்றப் பொறியமைவை ஏற்படுத்தினால், அது உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரான செயல் .எனவே, தமிழ்நாட்டு மக்கள் இதில் விழிப்போடு இருந்து - தொடர் அழுத்தம் தராது போனால், கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத கதையாக நழுவும் ஆபத்து உள்ளது.
.............
#காவிரிநடுவர்மன்றம் முதல் காவிரிமேலாண்மைவாரியம் வரை காவிரி கடந்து வந்த உரிமைப்போராட்டம் :

1974 - ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் ஏற்படுத்த பட்ட காவிரி நீர் பெறுவது தொடர்பான ஒப்பந்தம் குடியரசு இந்தியாவில் செல்லாது என்ற கர்நாடகா வின் வாதத்தால் ஒப்பந்தம் காலாவதியானது. அப்போது திமுக ஆட்சி.

16 ஆண்டுகள் நீண்ட இடைவெளி. காவிரி தொடர்பாக எந்த முன்நகர்வுகளும் இல்லை (2 ஆண்டுகள் திமுக ஆட்சி, 1 ஆண்டு எமெர்ஜென்சி, 13 ஆண்டுகள் தொடர் அதிமுக ஆட்சி.)

24-4-1990 - திமுக ஆட்சிக் காலத்தில் நடுவர்மன்றம் தேவை என்று தமிழகச் சட்டப்பேரவையில் தீர்மானம்  நிறைவேற்றப்பட்டது.

2-6-1990 - திமுக அங்கம் வகித்த #விபிசிங் தலைமையிலான கூட்டணி அரசாங்கத்தால் நடுவர் மன்றம் மத்திய அரசினால் அமைக்கப்பட்டது. ( இது குறித்து ஜெயலலிதா கருத்து, காவிரி நடுவர்மன்றம் ஒரு வெற்று ஆணையம், அதிகாரம் இல்லாத ஆணையம், பல் இல்லாத ஆணையம்... இந்த ஆணையத்தால் ஒரு பலனும் கிடைக்கபோவதில்லை.)

28-7-1990 - திமுக ஆட்சியில் நடுவர் மன்றத்தின் சார்பில் #இடைக்காலதீர்ப்பு ஒன்று வெளியிடப்பட வேண்டுமென்று கோரி மனு செய்யப்பட்டது.

25-6-1991 - அன்று நடுவர் மன்றம் இடைக்காலத் தீர்ப்பினை வழங்கியது. 

1998 - திமுக  ஆட்சியில் இடைகால உத்தரவை செயல்படுத்த பிரதமர் வாஜ்பாய் ஐ வலியுறுத்தி,   ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு மத்திய அரசிதழில் வெளியிட்டது. (இது குறித்து ஜெயலலிதா கருத்து, "வாஜ்பாய், சூழ்ச்சிக்கு ஆளாகிவிட்டார், இந்த உடன்பாட்டை நிராகரிக்கிறோம்".)

5-2-2007 : காவிரி நடுவர் மன்றம் இறுதிதீர்ப்பு வழங்கியது.

2013: காவிரி நீர் பெறுவது தொடர்பான, டெல்டா விவசாயிகள் தொடர்ந்த வழக்கில், தமிழக அரசையும் இணைத்து வழக்கு நடைபெற்றது. வழக்கில், உச்ச நீதி மன்றம், இறுதி தீர்ப்பை அரசிதழில் என் வெளியிடவில்லை என்று கேள்வி எழுப்பி, அரசிதழில் வெளியிட ஆணையிட்டது. 

09-2016: காவிரி இல் நீர்திறக்க கர்நாடகத்திற்கு உத்தரவிடக்கோரி,  அரசு உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கின் வாதத்தில், 2007 பெற்ற இறுதி தீர்ப்பினை செயல்படுத்த காவிரி மேலாண்மை வாரியம் 4 வாரத்தில் அமைக்க உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டது. (நாள் : 20-09-2016)

இது தான் நாம் கடந்து வந்த உரிமை போராட்டம் . காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை கர்நாடகம் எதிர்க்க காரணம். ஓர் ஆண்டில் காவேரி ஆறு பெரும் நீரின் மொத்த அளவு 740TMC என்று கணக்கிடப்பட்டு, அதில் 419TMC நீர் தமிழகத்திற்கு உரியது (100% இல் 57.71%) என்று தீர்ப்பு வழங்கியது. கர்நாடகத்தின் பங்கு 270TMC. 1990 - 2016, 27 ஆண்டுகால நீண்ட நெடிய உரிமை போராட்டத்தில் தமிழகம் வென்றுள்ளது. 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும், அதை செயல்படுத்தவும் தடை போட கர்நாடகம் தொடர்ந்து முயற்சிக்கும், முரண்டு பிடிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனாலும் நமக்கு உண்டான உரிமையின் படி நமது போராட்டங்களும்  தொய்வின்றி தொடர வேண்டும். 

சிலப்பதிகாரம்  (புகார்க் காண்டம் – கானல் வரி) :

உழவர் ஓதை மதகுஓதை
உடைநீர் ஓதை தண்பதங்கொள்
விழவர் ஓதை சிறந்துஆர்ப்ப
நடந்தாய் வாழி காவேரி.
விழவர் ஓதை சிறந்துஆர்ப்ப
நடந்த எல்லாம் வாய்காவா
மழவர் ஓதை வளவன்தன்
வளனே வாழி காவேரி.

.........,............
 காவேரியே நீ வாழ்க! 

ஆற்றினில் புதுப்புனல் கண்ட உழவர் மகிழ்ந்து ஆர்க்கும் ஓசையும்,மதகுதனில் நீர் நிறைந்து வடிகின்ற ஓசையும்,வரப்புக்களை உடைத்துப் பாய்கின்ற நீரின் ஓசையும்,புதுப்புனல் விழாக் கொண்டாடும் மக்களின் மகிழ்ச்சி ஆரவாரமும் மிகுதியாக இருபக்கமும் ஆர்ப்பரிக்க, 

நடந்து செல்லும் காவிரியே நீ வாழ்க!

No comments:

Post a Comment

#கனவாகிப்போனகச்சத்தீவு #கச்சதீவு #KanavaiPonaKachaTheevu #Katchatheevu

‘*கனவாகிப் போன கச்சத்தீவு’ என்னும் என்னுடைய விரிவு படுத்தப்பட்ட நான்காவது பதிப்பு வெளிவருகிறது.  நண்பர்கள், ஊடக தோழர்கள், பல்கலைக்கழகம் மற்ற...