Sunday, September 11, 2016

நீதிபதிகள் நியமனம்

ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.டி. தாமஸ், நீதிபதிகள் நியமனம் இராணுவ வியூகமல்ல என்ற கருத்தைத் தெரிவித்துள்ளார். இன்றைக்கு நீதித்துறை தன் அதிகாரங்களை தக்க வைத்துக்கொள்ள உறுதியாக உள்ள நிலையில் மத்திய அரசோடு
இது குறித்துப் போராடி வருகின்றது. உச்சநீதிமன்ற நீதிபதி ஜெ.செலமேஸ்வர் இதுகுறித்து தலைமை நீதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் பல முக்கிய விஷயங்களும், பிரச்சினைகளும் சொல்லப்பட்டுள்ளது.  நீதித்துறையின் பங்கு ஜனநாயகத்தில் முக்கியமானது. அதை நிலைநாட்டும் நீதிபதிகளை நான்கு, ஐந்து நீதிபதிகள் கொண்ட கொலிஜியம்தான் முடிவெடுத்து அந்த பரம ரகசியத்தைக் காப்பது என்பது நல்லதல்ல. நாட்டின் நலன்களை மனதில் கொண்டு வெளிப்படையோடு பொறுப்புடன் செயல்பட வேண்டும். இது காலத்தின் கட்டாயம். நீதிபதிகளின் நியமனத்திற்கு கொலிஜியம் முறை நீதிபதிகளின் நியமனம் தொடர்பான மூன்றாவது வழக்கில்தான் வெளிப்படைத் தன்மை குறித்தான விவாதம் வந்தது. வெளிப்படைத் தன்மை என்பது நீதிபதிகள் நியமனத்தில் பரம ரகசியம் இல்லாமல் ஒவ்வொரு நிலையிலும் நிலைமைகளை நாட்டுக்குச் சொல்லவேண்டும் என்பதுதான் முக்கியம்.

நீதிபதி நியமனங்களில் எல்லா தகுதிகள் இருந்தும் அவரைப் புறக்கணிக்கும்போது, முறையான காரணங்களும் சொல்லப்படுவதில்லை. ஒரு சிறு குழு அமர்ந்து அவர்களுடைய மனதில் ஏற்படும் காரண, காரியங்களைக் கொண்டே நீதிபதிகளை நியமிப்பது என்பது நல்லதும் அல்ல, வெளிப்படைத் தன்மையும் இல்லாமல் போய்விடும். நீதிபதிகள் குறித்தான அனைத்து விவரங்களையும் மத்திய அரசுக்குத் தெரிவிக்கவேண்டும். ஏனெனில் நீதிபதிகளை குடியரசுத் தலைவர் மத்திய அரசின் ஆலோசனையும் பெற்று நியமிக்கின்றார். ரகசியத் தன்மை என்பது நாட்டின் நலனில் அக்கறையான விஷயங்களான ராணுவம், பாதுகாப்பு விஷயங்களில் மட்டும்தான் ரகசியத் தன்மையைப் பாதுகாக்க வேண்டும். நாட்டின் பல்வேறு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளிடமிருந்து பெறப்படும் பட்டியலில்தான் உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமிக்கப்படுகின்றன. அதிலும் விருப்பு, வெறுப்புக்கள் உள்ளன. தகுதியும், மூப்பும் மனதில் கொள்வதில்லை. சிறந்த நீதிபதிகள் என்று எண்ணப்படுகின்ற 5 உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகள் குறித்து பல சர்ச்சைகளும் உள்ளன. நீதிபதிகள் நியமனம் குறித்து இரண்டாவது வழக்கில் கொலிஜியம் முறை உருவாக்கப்பட்டது. மூன்றாவது வழக்குக்குப் பிறகு 1998ல் சில விதிமுறைகளோடு கொலிஜியம் முறை விரிவுப்படுத்தப்பட்டது. இந்த கொலிஜியம் முறையிலும் சில சாதக பாதகங்கள் இருக்கின்றன. அந்த பாதகங்களையும் களைய வேண்டும். மூன்றாது நீதிபதிகள் நியமன வழக்கில் உச்சநீதிமன்றத்திடம் குடியரசுத் தலைவர் கேட்ட விளக்கத்தின் அடிப்படையில், நீதிபதிகள் நியமனத்தில் குறைகள் உள்ளனவா? அதை எப்படி சீர்படுத்தலாம் என அறிய 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு உச்சநீதிமன்றத்தால் உருவாக்கப்பட்டது.  இந்த விவகாரம் குறித்து முறையாக விசாரித்த பின் புதிய விசாரணையைப் 11 அல்லது 13 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்கலாம் என்றும் தீர்மானிக்கப்பட்டு அரசியல் சாசனத்தின் அடிப்படை கூறுகளைப் பற்றி விசாரிக்க 5 நீதிபதிகள் போதாது என்று ஏற்கனவே கேசவானந்த பாரதி வழக்கில் தீர்ப்பு உள்ளது.  இவ்வாறான நிலையில் நீதிபதிகளின் எண்ணிக்கையை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீர்மானிக்கலாம். இது குறித்தான குழப்பங்களையும் பிரச்சினைகளையும் விரைவில் ஒரு முடிவுக்கு வந்து தீர்த்து வைக்கவேண்டிய கட்டாயம் உள்ளது. எனவே நீதிபதிகளுடைய நியமனங்கள்,  குழப்பமில்லாமல் வெளிப்படையாக இருப்பதுதான் நல்லது என்ற நீதிபதி கே.டி. தாமஸுடைய கருத்து ஏற்றக்கொள்ளக்கூடிய கருத்தாகும்.

No comments:

Post a Comment

மா கவி பாரதி

மா  கவி #பாரதியை கொண்டட வலம்புரி ஜானின் இந்த ‘’பாரதி - ஒரு பார்வை’’ யும் (பதிப்பு-1982)அவசியம் வாசிக்க வேண்டும். #பாரதி #வலம்புரிஜானின்_பாரத...